இரட்டைக் குடியுரிமை: நீக்கம்!

நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு செய்யப்படும் வரைவானது நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் ஏற்பாடு உள்வாங்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் விஜயதாச ஆகியோர் தலைமையில் முன்மொழியப்பட்ட 21ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் வரைவு தொடர்பான அரசியல் கட்சிகளின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது ‘பொது இணக்கப்பாடு’ எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்த கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விஜயதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக் கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்களுடனான சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் முன்மொழியப்பட்ட வரைவில் உள்வாங்கும் முகமாக திருத்தியமைக்கப்படவுள்ளன. இந்தச் செயற்பாட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளேன்.

அதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் அமர்வின்போது இறுதி செய்யப்பட்ட 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதியைப் பெற்றதன் பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்த திருத்தச்சட்ட மூலத்தினை சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாத வகையிலேயே ஏற்பாடுகளை செய்வதற்கு முயற்சித்துள்ளோம்.

இருப்பினும், உயர்நீதிமன்றத்தினை ஏதேனும் தரப்புக்கள் நாடுகின்ற பட்சடத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக அடுத்தகட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

மேலும், தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகளைப் போக்குவதற்கான தற்காலிக தீர்வாகவே இந்த 21ஆவது திருத்தம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும் என்றார்.

10  உறுப்பினர்களுக்கு ஆப்பு?

அரசமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு எம்.பி.பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழொன்றின் செய்தி ஊடாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, இரட்டை குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்.பி. பதவியை வகிக்கின்றனர் என குறித்த ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சட்டமூலம் நிறைவேறினால் அந்த 10 அரசியல்வாதிகளும் எம்.பி.பதவியை இழக்க நேரிடும் என தெரியவருகின்றது.

21 ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ள ‘இரட்டை குடியுரிமை தடை’ என்ற ஏற்பாட்டை நீக்கிக்கொள்வதற்கு இவர்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்படி 10 பேரில் மலையக அரசியல்வாதி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

எனினும், வீசா இன்றி இந்தியாவுக்கு செல்வதற்கான ஓர் ஏற்பாட்டையே அவர் வைத்துள்ளார் எனவும், அது இரட்டை குடியுரிமை அல்ல எனவும் தெரியவருகின்றது.

எனவே, 21 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேறினாலும் அவரின் பதவிக்கு சிக்கல் ஏற்படாது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

…….. டீல்காரர்கள் ………

நல்லாட்சியின்போது ரணில் விக்ரமசிங்கவுடன் இருந்த டீல்காரர்கள் ஒப்பந்தக்காரர்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள், ரணில் விக்ரமசிங்கவின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையதிகாரி சாகல ரட்நாயக்க, கோட்டாபய ராஜபக்சவை கடந்த வாரம் சந்தி்த்தபோது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுடன் டீல்காரர்கள்! எச்சரிக்கும் கோட்டாபய

இதில், ஐக்கிய தேசியக்கட்சியின் இந்த முக்கிய பிரமுகர், ஏற்கனவே பணம் சம்பாதிக்கும் ஒப்பந்தங்களை ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கோட்டாபய, சாகல ரட்நாயக்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரமுகர், பிரதமர் அலுவலகத்தில் தமக்கென ஒரு நிர்வாகப்பிரிவை ஆரம்பித்துள்ளார் என்று கூறிய கோட்டாபய, பழைய குழுவுடன் பயணத்தை தொடரமுடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்கவுடன் டீல்காரர்கள் இருக்கிறார்கள் என்று ஜனாதிபதியின் குற்றச்சாட்டை , பிரதமர் அலுவலக பேச்சாளர் மறுத்துள்ளார்.

சாகலவின் “சேர்” கோட்டா!

இதேவேளை சாலக ரட்நாயக்க, கோட்டாபய ராஜபக்சவை, சேர்… என்றே அழைத்து வருகிறார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தமைக்காகவே தாம் கோட்டாவை சேர் என்று அழைப்பதாக சாகல ரட்நாயக்க காரணம் கூறியுள்ளார்.

Previous Story

'21'திருத்தங்களுடன் நாளை அமைச்சரவைக்கு

Next Story

மகிந்த முக்கியஸ்தர் ஜோன்ஸ்டன் தலைமறைவு! தேடுதல் தீவிரம்