எனது சொத்துக்கள் வியர்வை சிந்தி சம்பாதித்தவை – ஞானாக்கா

 அரசியல் விடயங்கள் மாத்திரமல்லாது நாட்டை ஆட்சி செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தான் ஆலோசனை வழங்கி வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானாக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய என்ற பெண் தெரிவித்துள்ளார்.

வாராந்த பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் இராணுவ அனுசரணையின் அடிப்படையில் எனக்கு பிரதிபலன்கள் கிடைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. நான் உருவாக்கிய அனைத்தும் நான் வியர்வை சிந்தி சம்பாதித்தவை.

தற்போது அவை கொள்ளையிடப்பட்டு தீயில் அழிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் குடும்பத்தினர் எனது ஆலய வளவை சுத்தம் செய்வதாகவும் ஜனாதிபதியை நான் நீராட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை மறுக்கின்றேன்.

எப்போதும் நான் ஜனாதிபதியை நீராட்டியதில்லை. எனது வழிபாட்டு இடத்தில் அப்படியான இடம் எதுவுமில்லை எனக் கூறியுள்ளார்.

அத்துடன் தான் வேறு ஒரு நபர் எனவும் தான் தெய்வமில்லை எனவும் மன ரீதியான சக்தி தெய்வத்திற்கு வருகிறதே அன்றி தனக்கு அல்ல எனவும் தெய்வத்தின் அறையில் இருக்கும் போது தனக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் பின்னர் தனக்கு நினைவில் இருப்பதில்லை எனவும் ஞானக்கா தெரிவித்துள்ளார்.

ஞானக்கா என்ற இந்த பெண், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசியல்வாதிகள் மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளுக்கு ஜோதிடம் மற்றும் ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அந்த பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இவ்வாறான நிலைமையில், கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், ஞானக்காவின் ஆலயம் மற்றும் அவரது ஹோட்டல் என்பன போராட்டகாரர்களால் தீயிடப்பட்டது.

இதற்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவி ஹிருணிக்கா பிரேமச்சந்திர பெருந்திரளான மக்களுடன் சென்று ஞானக்காவின் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஜூன் மாத நடுப்பகுதியில் பெரும் கலவரம்!

Next Story

ராஜபக்சர்கள் மத்தியில் கடும்  பிளவு!