முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஏன் ஈத் பண்டிகை கொண்டாடுவதில்லை?

தொகுப்பு: யூசுப் என் யூனுஷ்

செளதி அரேபியாவில் ஈத் பண்டிகை மே 2 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ரமலானின் கடைசி நாள் என்றும் திங்கள்கிழமை ஈத் உல் ஃபித்தரின் முதல் நாளாக இருக்கும். ஆப்கானிஸ்தானில் ஈத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் எடுத்துக்கொண்டால், இங்கே  ஈத் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஈகைத்திருநாளை ஏன் கொண்டாடுவதில்லை என்ற கேள்வி சிலருக்கு தோன்றலாம்.

பிபிசி பெங்காலி செய்தியாளர் ரகீப் ஹஸ்னத் இது குறித்து விளக்குகிறார்.

வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய அறக்கட்டளையின் பிறைச்சந்திரனை பார்க்கும் குழு, முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஈத்-உல்-பிதர் எந்த நாளில் கொண்டாடப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. வழக்கமாக இந்தக்குழு ரமலான் மாதத்தின் 29 ஆம் தேதி பிற்பகலில் கூடி ஈத் உல் ஃபிதர் பண்டிகையின் தினத்தை தீர்மானிக்கிறது.

ரமலான் மாதத்தின் 29 வது நாளில் நாட்டில் பிறை தென்பட்டால் மறுநாள் ஈத் என்று அறக்கட்டளை அறிவிக்கிறது. அது நடக்கவில்லை என்றால் ரமலான் மாதத்தின் முப்பது நாட்கள் முடிந்த பிறகு ஈத் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக செளதி அரேபியாவில் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்ட ஒரு நாளைக்குப்பிறகுதான் வங்கதேசத்தில் ஈத் கொண்டாடப்படுகிறது. உலகின் சில இடங்களில் செளதி அரேபியா கொண்டாடும் அதே நாளன்று ஈத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிறை தென்படுவது குறித்த விவாதம் நடைபெறுகிறது. வங்கதேசத்தின் புகழ்பெற்ற இயற்பியலாளரும், இஸ்லாம் மற்றும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் ஷம்ஷேர் அலி, இஸ்லாமிய விதிகளை பின்பற்றி உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஈத் கொண்டாட முடியும் என்று கூறுகிறார். சொந்த நாட்டில் பிறை தென்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

“அவரவர் நாட்டில்தான் பிறையை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரே நாளில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும், ஒரே நாளில் அதை முடிக்க வேண்டும் என்று இமாம் அபூ ஹனிஃபாவும், நபிகள் நாயகமும் கூறியுள்ளனர். சந்திரன் உதயமாகும் போது சந்திர மாதம் தொடங்குகிறது.” என்று அவர் குறிப்பிட்டார்.

“மெக்கா முஸ்லிம்களுக்கு புனிதமான இடம். அங்கு சந்திரன் தென்பட்டால் அந்த அடிப்படையில் முஸ்லிம் நாடுகளில் ஈகைத் திருநாள் கொண்டாட வேண்டும். இதில் நாடுகளுக்கு இடையே நேர வேறுபாடு பெரிய பிரச்னை இல்லை,” என்று ஷம்ஷேர் அலி தெரிவித்தார். கூடவே, ஒரே நாளில் நோன்பு தொடக்கம் மற்றும் ஈத் பண்டிகைக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) பரிந்துரைத்துள்ளது.

இருந்தபோதிலும், செளதி அரேபியாவுக்கு ஒரு நாளைக்குப்பிறகு வங்கதேசத்தில் ஈத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏனெனில் பிறையை பார்த்த பிறகே நோன்பை தொடங்கவும் முடிக்கவும் வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியிருப்பதாக,தேசிய பிறை கண்காணிப்பு குழு வாதிடுகிறது.

வெவ்வேறு வாதங்கள் என்ன?

புவியியல் காரணங்களால், அரபு நாடுகளில் பிறை தென்பட்ட ஒரு நாள் கழித்தே வங்கதேசத்தில் தெரிகிறது. அரபு நாடுகளில், வங்கதேசத்திற்கு முன்பாகவே சந்திரனை பார்க்கமுடிகிறது.

வங்கதேசத்தை ஒப்பிடும்போது நேரத்தில் முன்னால் இருக்கும் மலேஷியா மற்றும் இந்தோனீசியாவும், அரபு நாடுகளைப் போலவே ஈத் பண்டிகையைக் கொண்டாடுகின்றன. ஆப்ரிக்காவின் சில முஸ்லிம் நாடுகளும் இதையே பின்பற்றுகின்றன.

இஸ்லாமிய விதிகளின்படி, எந்த ஒரு முஸ்லிம் நாட்டில் சந்திரன் தென்பட்டாலும், அது எல்லா முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் அரபு மொழி பேராசிரியர் ஜுபைர் முகமது அஹ்சானுல் ஹக்..

வெறும் கண்ணால் சந்திரனைப் பார்த்தவுடன் ஹிஜ்ரி ஆண்டின் சந்திர மாதம் தொடங்குகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இதுதான் இஸ்லாத்தின் சட்டம்.

இந்த காரணத்திற்காகவே பல இஸ்லாமிய மத தலைவர்கள் அந்தந்த நாடுகளில் நிலவை வெறும் கண்களால் பார்க்க வேண்டும் என்று இப்போதும் வலியுறுத்துகின்றனர்.

ஷரியா வாரியத்தின் பரிந்துரையின் பேரில் ஈகைத்திருநாளை நிர்ணயம் செய்தால், இதில் குழப்பம் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என குஷ்தியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் துறை பேராசிரியர் ஏஎஃப்எம் அக்பர் ஹுசைன் கூறுகிறார்.

இலங்கை

இலங்கையில் இந்த பிறை பார்க்கின்ற விடயம் பல சந்தர்ப்பங்களில் கேலிக் கூத்தாகி இருந்தது அவதானிக்கபட்டது. இலங்கை ஒரு சிறு தீவு அங்கு கூட வித்தியாசமான நாட்களில் அதாவது ஒரு சில கி.மீற்றர்கள் தூரத்தில் உதாரணத்துக்கு காத்தான்குடியில் ஒரு நாள் ஏறாவூரில் மற்றுமொரு நாள் என்று அடிப்படையிலும் ஓரோ கிராமத்தில் சில குடும்பங்கள் ஒரு நாளிலும் மற்றும் சில குடும்பங்கள் இன்னொரு நாளிலும் இது கொண்டாடப்படுகின்றது.

இதற்கு பிறை என்பதனை விட தான் சார்ந்திருக்கின்ற சமயக் குழுவின் கொள்கையே பிரதான காரணம். இது இஸ்லாமிய ஐக்கியம் என்பதனை விட அந்தக் குழுக்களை நெறிப்படுத்துகின்றவர்களின் வம்பு அல்லது வன்முறை என்றுதான் இதனைச் நாம் சொல்ல வேண்டும். இது போல் உலகில் பல இடங்களில் நடக்கின்றன.

சர்வதேச அளவில் என்ன முடிவு ?

2016 மே மாதம் துருக்கியின் முன்முயற்சியின் பேரில் இஸ்தான்புல்லில் ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. துருக்கி, கத்தார், ஜோர்டன், செளதி அரேபியா, மலேஷியா, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு கூடினர்.

இந்த மாநாடு சர்வதேச ஹிஜ்ரி காலண்டர் யூனியன் காங்கிரஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஹிஜ்ரி நாட்காட்டி தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முஸ்லிம்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் ஒரே நாட்காட்டியில் சேர்க்க வேண்டும் என்றும், இது நடந்தால், எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் ஒரே நாளில் ரமலான் நோன்பு தொடக்கம் மற்றும் ஈத் பண்டிகையை கொண்டாட முடியும் என்றும் மா நாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் கூறினர்.

 

 

Previous Story

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணி: பெரும் தொகை பண மோசடி-சர்வதேச ஊடகம் தகவல்

Next Story

இலங்கையின் புதிய பிரதமர் யார்:- பசில் விளக்கம்.