-யூசுப் என் யூனுஸ்-
பாகிஸ்தான் வரலாற்றில் மாபெரும் பேரணியொன்றை பிரதமர் இம்ரான்கான் வெற்றிகரமாக நடாத்தி இருக்கின்றார். பல இலட்சம் பேர் அதில் பங்கு பற்றி இருக்கின்றார்கள். இந்த இஸ்லாமபாத் பேரணி வரலாற்றில் முக்கியமான ஒரு பேரணியாக பார்க்கப்படுகின்றது. இந்தப் பேரணி மூலம் நாட்டு மக்களிடத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை அவர் காட்சிப்படுத்தி இருக்கின்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் நோக்கி இருக்கும் அவர் நேற்றைய கூட்டத்தில் தனது பதவியை இராஜினாமச் செய்வார் என்று உலகிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன-எதிர்பார்த்தன. நாமும் அதனைச் சொல்லி இருந்தோம் ஆனால் அப்படி நடக்கவில்லை.
பாக். அரசியலில் இராணுவம் மிகப் பெரிய செல்வாக்கை செலுத்தி வருவது தெரிந்ததே. துவக்கத்தில் கானுக்கு ஆதரவாக இருந்த இராணுவம் தற்போது கானை பதவி விலகுமாறு கட்டயப்படுத்தி வருகின்றது.
மறுபுறத்தில் இம்ரான் பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியில் உள்ள சிலரும் ஆளும் கூட்டணியில் இருக்கும் மூன்று சிறு கட்சிகளும் கானுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கி வருவதால் இந்த நெருக்கடி. (28.03.2022) இன்று பாக்.பார்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நிலை.
அதில் இம்ரான் தோற்றாலும் நாம் அறிந்த வரை இன்று பாக். கில் உள்ள மிகப் பெரிய அரசியல் கட்சி அவரது கட்சியே. இந்த நிலையில் தேர்தல் என்று வந்தால் அவரது கட்சிதான் அதிக ஆசனங்களைக் கைப்பற்ற வாய்ப்பு. என்றாலும் அது ஆட்சி அமைக்கப் போதமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி.
இன்று நடக்கின்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சகாக்களையும் முதுகில் குத்தியவர்களையும் அவருக்குத் தெரிந்து கொள்ள முடியும். அதனால்தான் அவர் பேரணியில் தனது பதவி விலகளை அறிவிக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.