வேதனையில் ஜனாதிபதி ஜீ.ஆர்.

அமைச்சு பதவியில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் மன வேதனையில் இருப்பதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவர்களை நீக்குவது குறித்த தீர்மானம் அப்போதைய நிலையில் எடுக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்ததாகவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரச்சினைகள் தொடர்பில் இதற்கு முன்னர் கலந்துரையாடப்பட்டிருந்தால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பதில் கிடைத்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாம் இந்த அமைச்சுப் பதவிகளின் சிறப்புரிமைகளைப் பார்க்கவில்லை. பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.எங்களுடைய யோசனையில் முடிந்தவரை அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

எரிபொருள், எரிவாயு, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கும் முன்னுரிமை அளித்து, அத்தியாவசியமற்ற பொருட்களை கட்டுப்படுத்தி கட்டணங்களை அதிகரிக்க யோசனை முன்வைத்தோம்.நாங்கள் செய்த அனைத்து பரிந்துரைகளுக்கும் நல்ல பதில் கிடைத்ததாக நினைக்கிறேன். அவை நடைமுறைப்படுத்தப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இறுதியாக நாங்கள் அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக இருக்கிறோம். நாட்டு மக்கள் துன்பப்படுவதை நிறுத்த வேண்டும். இந்த எரிவாயு, எரிபொருள், வரிசைகள் முடிவுக்கு வர வேண்டும்.இந்த விடயத்தில் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள கடுமையான தீர்மானங்களினால் எதிர்காலத்தில் மக்களுக்கு எரிவாயு, மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என நம்புகின்றோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Previous Story

நாட்டில் ஞானா அக்கா ஆட்சி ?

Next Story

பஞ்சாப் ஆம் ஆத்மி வசம்!