இலங்கையில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை மாத்திரமே பயணிக்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் செயற்பாட்டு ரீதியில் கவிழ்வது நிச்சயம் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற ஆளுந்தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் சுயாதீனமாக செயற்படுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடும்.
தொடர்ந்தும் தனியொருவருக்கு அதிகாரங்களை வழங்க மக்கள் தயாராக இல்லை. ஆளுமை மிக்க பாரிய அரசியல் சக்தியொன்று உருவாகின்றது. அது தொடர்பில் பின்னர் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் எதிர்பார்ப்பது அரசியல் தொடர்பில் சிறந்த அனுபவமுடைய, கல்வி அறிவுடைய, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய குழுவையே ஆகும். தனி நபரொருவருக்கு அதிகாரத்தை வழங்குவற்கு மக்கள் தற்போது தயாராக இல்லை. அவ்வாறான குழு இலங்கையில் இருக்கிறது.
அந்த குழு உருவாகிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், அந்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் யார் என்பதை என்னால் தற்போது கூற முடியாது. அதனை எதிர்வரும் காலங்களில் வெளிப்படுத்துவோம்.
ராஜபக்ஷ குடும்பம் நாட்டை முற்றாக சீரழித்து இந்த நிலைமைக்கு கொண்டு வரும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்ததன் காரணமாகவே இந்த அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வருகிறேன்.
ஒரு குடும்பத்தால் முழு நாடும் பாரிய பாதிப்புக்குள்ளாகப்போகிறது என்பது ஜனாதிபதி பதவியேற்ற அன்றைய தினமே தெளிவாக தெரிந்தது. நாம் எண்ணியதை விட நாடு தற்போது பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.