அட்மேயின் புறநகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அங்கமான இந்த பகுதியில், இரண்டு மாடி குடியிருப்பு இருந்திருக்கும் என தோன்றுகிறது.
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்து வந்த (ஐ.எஸ்) குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்–ஹாஷிமி அல்–குரேஷி) சிரியாவில் அமெரிக்க படைகளால் அழிக்கப்பட்டார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பைடன், “இந்த நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க துருப்புக்கள் பத்திரமாக திரும்பியுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று இரவு எனது வழிகாட்டுதலின் பேரில், வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் அமெரிக்க மக்களையும் நமது நட்பு நாடுகளை பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
எங்களின் ஆயுதப் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. அபு இப்ராஹிம் அல்–ஹஷிமி அல் குரேஷி என்ற ஐஎஸ்ஐஎஸ் தலைவரை வீழ்த்தி விட்டு அனைத்து அமெரிக்கர்களும் நடவடிக்கையில் இருந்து பத்திரமாக திரும்பியுள்ளனர். இன்று காலை அமெரிக்க மக்களிடம் விரிவாக நான் பேசுகிறேன். கடவுள் நமது படைகளை பாதுகாக்கட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.