ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த போர்ப் பதற்றம் தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் ஒரு போஸ்ட்டை பதிவிட்டிருந்த சூழலில், அதைத் தொடர்ந்தே ஈரான் தனது தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டுவீச்சு நடத்தியது.
அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தான் இருக்கிறது என்றும் லெபனான் இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்பதே இஸ்ரேலின் விளக்கமாக இருக்கிறது.
இருப்பினும், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது ட்ரோன்களை இஸ்ரேலை நோக்கி ஏவியது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஈரானைக் குறிவைத்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. இன்று முழுக்க இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வந்ததால், மத்தியக் கிழக்கில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டது.
இந்தச் சூழலில் தான் சற்று நேரத்திற்கு முன்பு, ஈரான் ராணுவ தலைமையகமான காதம் அல்-அன்பியா (ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், “ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன” என்று அறிவிக்கப்பட்டது.
லெபனான் மற்றும் அதன் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் செய்த அத்துமீறல்களுக்கு ஈரான் தக்கப் பதிலடியைக் கொடுத்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.. பதிலடி கொடுப்போம் இஸ்ரேலும் அதன் ஆதரவு நாடுகளும் இந்தத் தாக்குதலில் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தற்போதைக்குத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும், இஸ்ரேல் மீண்டும் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது லெபனானில் தாக்குதல் நடத்தினாலோ, இதைவிடப் பல மடங்கு வலிமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் தீவிரமாகத் தலையிட்டிருந்தார். இரு தரப்பிற்கும் இடையே டிரம்பின் டீம் தான் சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.. சொல்லப்போனால் டிரம்ப் ஒரு போஸ்ட் போட்ட சூழலில், அதைத் தொடர்ந்தே தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் போட்ட போஸ்ட் இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், “ஈரானும் இஸ்ரேலும் ஒரு உடனடி போர் நிறுத்தத்தை விரும்புகின்றன. இது தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விஷயங்கள் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
இருப்பினும், ஒரு இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹார்முஸ் முற்றுகை முழுமையாக அமலில் இருக்கும்” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ராணுவம் போடும் பிளான் அதேநேரம் ஈரான் ராணுவம் போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்குச் சற்று முன்னதாக, ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ஊடகமான தஸ்னிம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
அதில், ஈரான் ஒரு நீண்ட காலப் போருக்குத் தயாராக இருப்பதாக ஒரு ராணுவ அதிகாரி கூறியிருந்தார். அதில் அவர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கணக்குகள் தவறு என்பதை வரும் நாட்கள் நிரூபிக்கும் என்றும், அமெரிக்காவின் நலன்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்திருந்தார்.
ஆனால், இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாகப் போர் நிறுத்தத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.





