இலங்கை அடுத்த இலக்கு யார்…..!
அண்மையில் கொழும்பில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றன.
கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரின் வீட்டில் கபில உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பாரிய முறைகேடுகள் நடந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கபில கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மகிந்தவுக்கு வந்த அழைப்பு
கபிலவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது ராஜபக்ச தரப்புக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குற்றப் புலனாய்வு நிதி மோசடி பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் கபில மர்மமான நிலையில் உயிரிழந்தமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியின் போது மோசடியில் ஈடுபட்ட எவரையும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் மகிந்த கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பான வாதங்கள் தீவரம் பெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பூட்டிய அறைக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கபிலவின் கழுத்தில் காணப்பட்ட பட்டி, உயிரிழப்பதற்கு முன்னர் ஊழியர் ஒருவரினால் அவருக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பாரிய நிதி மோசடி
எயார்லைன்ஸிற்குள் நடந்த பாரிய நிதி மோசடியின் பிரதான சாட்சியாளரான கபிலவின் சாட்சியம் ராஜபக்சர்களுக்கு பெரும் ஆபத்தாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக மர்ம நபர்களால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மகிந்தவின் செயற்பாடும் அமைந்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், கபில சந்திரசேனவின் மரணத்தின் பின்னர், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக மகிந்த தெரிவித்துள்ளமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்னைய ஆட்சிக்காலங்களில் தமக்கு எதிராக செயற்படும் நபர்களை கொலை செய்து, கடலில் வீசுவதாகவும், கோட்டபாய வீட்டில் வளர்க்கப்பட்ட முதலைக்கு இரையாக போடப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் வெளியாகி இருந்தன.
தற்போது எதிர்க்கட்சியாக செயற்படும் ராஜபக்ச குடும்பத்தினர், பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் கபிலவின் மரணம் பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான உண்மை நிலைப்பாட்டை சமகால அநுர அரசாங்கம் அம்பலப்படுத்தும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




