ரஷ்யாவில் வெடிக்கும் புரட்சி?
சமையல்காரர் டூ பாதுகாவலர்
வரை கட்டுப்பாடுகள்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திடீரென்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது உலகளவில் பேசும் பொருளாகி உள்ளது. ரஷ்யாவில் புதினுக்கு எதிராக புரட்சி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது தான் இந்த பாதுகாப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு புதினின் சமையல்காரர்கள் முதல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு இப்போது வரை விளாடிமிர் புதின் தொடர்ந்து பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார்.
ரஷ்யா, தற்போது உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய இந்த போர் இன்னும் முடியவில்லை. உக்ரைனும், ரஷ்யாவும் பயங்கரமாக மோதி வருகின்றன. பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது 3 நாட்கள் மட்டுமே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு மீண்டும் இருநாடுகள் இடையே மோதல் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பலமடங்கு பாதுகாப்பு அதிகரிப்பு அதாவது தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு திடீரென்று பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக புதினின் பாதுகாப்பில் ஈடுபடுவோரை விட ஏராளமானவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ”புதினின் தனிப்பட்ட உதவியாளர்கள், சமையல்காரர்கள் முதல் பாதுகாவலர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக புதினுடன் நெருக்கமாக செயல்படும் ஊழியர்களின் வீடுகளிலும் ரகசிய கண்காணிப்பு அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சமையல்காரர்களுக்கும் கட்டுப்பாடு புதினுக்கு உணவு சமைக்கும் சமையல்காரர்கள், பாதுகாவலர்கள், போட்டோகிராபர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதினை சந்திக்க வருபவர்கள் ஏற்கனவே பலகட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் தற்போது கூடுதலாக இரு முறை சோதிக்கப்படுகின்றனர். அதேபோல் புதினுடன் நெருக்கமாக பணியாற்றுபவர்கள் இணைய வசதி இல்லாத செல்போன்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
வெளியே நடமாடுவதை குறைத்த புதின் அதுமட்டுமின்றி புதின் தற்போது வெளியே நடமாடுவதை குறைத்துள்ளாராம். அடிக்கடி சென்று வரும் இடங்களின் எண்ணிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக குறைக்கப்பட்டுள்ளது.
புதினும், அவரது குடும்பத்தினரும் வால்டாயில் உள்ள பண்ணை பங்களாவுக்கு செல்வதை நிறுத்தி விட்டனர். வால்டாய் என்பது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோவுக்கு இடையில் அமைந்துள்ள அதிபரின் தனிமையான கோடைகால பண்ணை பங்களாவாகும்.
புதினை கொன்று ஆட்சி கவிழ்க்க சதி இதனை ஐரோப்பிய உளவுத்துறை முகமை உறுதி செய்துள்ளது. அதில்,”புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக ரஷ்யாவின் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி நாட்டில் அரசுக்கு எதிராக புரட்சி ஏற்படும் அச்சம் உள்ளது. இந்த காரணங்கள் தான் புதினின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன? ரஷ்ய அதிபர் புதினை சுற்றி நடக்கும் இந்த சம்பவங்கள் தற்போது உலகளவில் பேசும் பொருளாகி உள்ளது. ரஷ்யாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் விளாடிமிர் புதினுக்கு எதிராக உள்நாட்டில் அவ்வப்போது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கி பிறகு இதுபோன்ற போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது உள்ளூர் மக்களை கோபப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைன் மீதான போரை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெற்றி பெறாதது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் புதின் மீது கடும் அதிருப்தியில் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக பல ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் விளாடிமிர் புதினையும் கொல்ல சதித்திட்டம் இருக்கலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



