நஜீப் பின் கபூர்
நன்றி: 10.05.2026 ஞாயிறு தினக்குரல்
இந்தியாவையே புரட்டிப் போட்ட விஜேய தமிழக அரசியல்!
மனட் சாட்சியே இல்லாத ஆய்வாளர்களும் அடாவடிகளும்!
மேதினம் அனுர மாகாண தேர்தலுக்கான துவக்க பரப்புரை!
கடந்த பத்து நாட்களுக்கு இடையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் நம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. ஒன்று மே முதலாம் திகதி நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தினம். இதில் இலங்கையில் நடைபெற்ற மே தின நிகழ்வுகளும் அதில் புரையோடிப் போய் இருந்த அரசியல் பின்னணிகளும்.
அடுத்தது முழு தமிழ் உலகம் மட்டுமல்ல இந்திய இலங்கை மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்திய தேர்தல் குறிப்பாக தமிழகத் தேர்தல் முடிவுகள். கடந்த ஏப்பரல் 23 நடைபெற்ற தேர்தல் வாக்குகள் மே நான்காம் திகதி எண்ணப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த இரு நிகழ்வுகளும் இன்றும் பேசு பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் எமது பார்வையையும்கருத்துக்களையும் வாசகர்களுடன் பேசுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பாக பார்ப்போம் தமிழகத்தை தவிர்த்து மேற்கு வங்காளம் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்ற போது அவற்றில் பாஜக செல்வாக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது. கேரளாவில் இடதுசாரிகளை வீழ்த்தி காங்கிரஸ் முன்னணிக்கு வந்திருக்கின்றது.
அங்கும் முதல் முறையாக மோடியின் பிஜேபிக்கும் நான்கு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றது.இதன் மூலம் கேரளாவிலும் பிஜேபி தனது ஆதிக்கத்தை துவங்கி இருக்கின்றது. எனவே வருகின்ற பொதுத் தேர்தலிலும் மோடி ஆட்சி அல்லது பஜக. சார்பில் வருகின்றவர்களுக்குத்தான் இந்தியாவில் அதிகமான வாய்ப்புகள் இருந்து வருகின்றன என்பது நமது கணிப்பு.
இங்கு போலத்தான் இந்தியாவிலும் இன்று எதிர்க்கட்சிகள் மிகவும் பலயீனமாக இருப்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதில் மேற்கு வங்காளம் கேரள தோல்விகள் முக்கியமானவை. அதே நேரம் பாரதிய ஜனதாவுக்கும் மோடிக்கும் தமிழகத்தில் மிகப் பெரிய பின்னடைவை எதிர் நோக்கி இருப்பது மிகப் பெரிய வரலாற்றுத் திருப்பமாகும் என்று நாம் நம்புகின்றோம். தமிழகத்தில் அவர்களுக்கு ஒரு ஆசனம் மட்டுமே. முன்பு அவர்களுக்கு அங்கு நான்கு ஆசனங்கள் இருந்தது.
இந்தத் தேர்தலில் குறிப்பாக தமிழக அரசியல் செயல்பாடுகள் மற்றும் ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்களைப் பார்க்கின்ற போது மனட்சாட்சியே இல்லாத மனிதர்களையும் ஊடகங்களையும் நாம் அங்கு பார்த்தோம்.
நாம் மூத்த ஊடகவியலாளர்கள் ஊடகங்கள் என்று சொல்கின்றவர்கள்-சொல்கின்றவை எந்தளவுக்கு மக்களை ஏமாற்றுவத்கு முனைந்திருக்கின்றார்கள் என்பதனைத் தான்இவர்களின் நடவடிக்கைகள் நமக்குக் காட்டி இருக்கின்றது. தமிழகத்தில் இருக்கின்ற ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் திமுக அதிகாரத்துக்கு வருகின்றது என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தன.
ஓரிரு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அதிமு.வுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்று சொல்லி தமது பக்கச்சார்பை உறுதி செய்திருந்தன. அத்துடன் ஒரே ஒரு ஊடகம் விஜேக்கு தனிப் பெரும்பான்மை என்று சொல்லி இருந்தது. அதுகூட கண்களை மூடிக் கொண்டு சொல்லப்பட்ட ஒரு பக்கச்சார்பான கணிப்பு.
ஒட்டுமொத்த ஊடகங்களும் தமது தனிப்பட்ட விருப்புகளைத்தான் கருத்துக் கணிப்பாக சொல்லிக் கொண்டிருந்தன. இப்படியாக மக்களை ஏமாற்றுவது பிழையான தகவல்களை வழங்குவது என்ன கொடூரம் என்று நாம் திருப்பித் திருப்பி கேட்கின்றோம்.
ஆனால் நாம் தொங்கு அரசு சிறுபான்மை மக்களின் விருப்பிலான அரசுதான் பதவிக்கு வருகின்றது என்று துவக்கம் முதல் வாக்கு எண்ணுகின்ற நாளுக்கு முன்னைய நாள்கூடநமது குரலில் எழுதிய ஒரு குறிப்பில் உறுதிபடச் சொல்லி இருந்தோம். மேலும் 40 32 20 06 02 என்ற ஒரு போர்மிலாவையும்-விதியையும் நாம் அங்கு கொடுத்திருந்ததுடன் விஜய் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் செல்வாக்குச் செலுத்துவார் கணிசமான வாக்குகளை வாங்குவார் என்றுஎழுத்து மூலமாகவே கொடுத்திருந்தோம்.
ஏறக்குறைய அது தான் நடந்திருக்கின்றது. எனவே நமது கணிப்புக்களையும் இந்திய-தமிழக ஊடகங்கள் சொன்ன கணிப்புக்களையும் ஒரு முறை வாசகர்கள் மீட்டுப்பார்ப்பார்கள் என்று நம்புகின்றோம்.
தமிழகத்தில் இருக்கின்ற ஒரு முக்கிய ஊடகவியலாளர் விஜய் வெற்றிக் கழகத்துக்கு ஒரு ஆசனம் கூட வராது. அவர் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் படுதோல்வி என்று கடைசிவரையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
தேர்தல் முடிவுக்குப் பின்னர் இது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினால் நான் புள்ளிவிபரங்கள் இல்லாமல்தான் இந்தக் கருத்துக் கணிப்புக்களை சொல்லி இருந்தேன் அதனால்தான் தப்பாகிப் போய்விட்டது என்று மிகவும் இலகுவாக சொல்லி தப்பி போக முனைகின்றார். புள்ளிவிபரங்கள் தகவல்கள் இல்லாமல் ஏன் ஐயா கணிப்புக்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றீர்கள் என்றுதான் நாம் அவரிடம் கேட்க வேண்டும்.
ஆனால் இதிலுள்ள வேடிக்கை கேவலம் என்னவென்றால் இதே ஆட்கள் மீண்டும் வந்து அரசியல் ஆய்வுகளை ஊடகங்களில் சொல்லிக் கொண்டிருப்பதும் அவர்களை அழைத்து பேட்டிகளை நடாத்துவதும் நமக்கு ஜீரணிக்க மிகவும் கஸ்டமாக இருக்கின்றது.
எனவே ஊடகங்கள் எந்த விவகாரத்திலும் சொல்கின்ற கருத்துக்களை எச்சரிக்கையுடன் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்கு இது நல்ல உதாரணம். இது பற்றி நாம் நிறையவே சொல்லி வந்திருக்கின்றோம்.
நாம் வழக்கமாக சொன்னது போல விஜேக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். அதனை நாமும் மதிக்கின்றோம் வாழ்த்துகின்றோம். ஆனால் அவரது கடந்தகால அரசியலில் நமக்கு உடன்பாடுகிடையாது என்ற விடயத்திலும் நாம் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றோம். எனவே அவர் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அது நடந்தால் நல்லது.
இவர்கள் அரசாங்கத்தை அமைத்து ஒரு ஆறுமாதங்களில் தமிழகம் எங்கு போகப் போகின்றது என்பதை தமிழகம் பார்க்கக் கூடியதாக இருக்கும். மேலும் திமுகவும் அதன் கூட்டணியில் இருப்போரும் இப்போது மோடியின் பஜக ஊடுருவலை தடுக்க எடுத்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றிருப்பதாக சொல்லி தமக்குத் தாமே ஆறுதல் சொல்லிக் கொள்கின்ற ஒரு நிலையை நாம் தமிழகத்தில் பார்க்கின்றோம்.
இப்போது விஜேயின் தவெக 108 ஆசனங்கள் ஸ்டாலின் திமுகாவுக்கு72 ஆசனங்கள் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு 54 ஆசனங்கள். யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடையாது. அதற்கு இன்னும் ஒரு டசன் வரையிலான ஆசனங்கள் தேவை.
என்றாலும் 120-125 வரையிலான ஆசனங்கள் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் திமுக. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆதரவு வழங்குவது பற்றி ஏற்கெனவே அறிவித்திருக்கின்றது. தேர்தல் காலங்களில் கூட அங்கு நல்லுறவு இருக்கவில்லை. மதசார்பில்லாத ஒரு அரசு அமைவதில் ஆர்வமுள்ளவர்கள் விஜய்க்கு ஆதரவு தருவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகின்றது
காங்கிரஸ்-5 அன்பு மணியில் பாட்டாளிகள்-4 இரு இடதுசாரிகள்-4 விடுதலை சிறுத்தைகள்-2 ஐயூஎல்எம்.2 என்பவை விஜயுடன் இணையுமாக இருந்தால் சிந்தனை ரீதியில் விஜேயின் அரசியல் பலயீனங்கள் சரிசெய்யப்பட்டுவிஜே அரசு பலமடைய நல்ல வாய்ப்புக் கிடைக்கும்.
அனுபவமுள்ள காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள்-திருமாவலவன்போன்றவர்கள் நல்ல அனுபவசாலிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் புதன்கிழமை ஆளுநரைச் சந்தித்த விஜேக்கு பதவி ஏற்பதற்கான பச்சைக் கொடியை காட்ட அவர் மறுத்துவிட்டார். காரணம் 118 பெரும்பான்மையை காட்ட அவர்கள் தவறி இருப்பது என்று சொல்லப்படுகின்றது. அதே நேரம் திமுக. அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்றும் ஒரு கதை சொல்லப்பட்டிருந்தது. இதற்கிடையில் அதிமுக இரண்டாக பிளவு பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.
அதிமுக. வுக்குள் ஒரு தரப்பினர் விஜய்யை ஆதரிப்பதற்கான அழுத்தங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். தமக்கு எதிர்க்கட்சி தலைமையும் இல்லை அரசியலிலும் பங்கில்லாவிட்டால் ஆதரவாளர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்று சிலர் வாதிக்கின்றார்கள்.திமுக.வைப் பொருத்தவரை பாட்டன் அப்பன் பேரன் என்ற குடும்ப ஆட்சியை மக்கள் நிராகரித்திருப்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பொதுவாகப் பார்க்கின்ற போது தமிழகத்தில் திமுக சிறப்பான ஆட்சியைத்தான் கொடுத்திருந்தது. இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியையும் (16-சதவீதம்) அது தமிழகத்துக்கு பெற்றுக் கொடுத்திருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் மக்கள் திமுக.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றார்கள்.
இதற்கிடையில் இரு கம்யூனிட்டுக்களும் விடுதலை சிறுத்தைகளும் விஜேக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் பத்திரிகை அச்சுக்குப் போகும் நேரத்தில் கூட விஜே முதலமைச்சர் கதிரையில் அமர்வது என்பது உறுதியாகும். எப்படியோ வளமான தமிழகம் தனது இருப்பை விஜய் காலத்திலும் தக்கவைத்துக் கொண்டால் நல்லது.
இப்போது 2026 மேதினம் அதிலும் இலங்கையில் நடைபெற்ற மேதினம் அதன் அரசியல் பலம் பயீனங்கள் பற்றிப்பார்ப்போம். சிறிதும் பெரிதுமான ஒரு நூறுவரையிலான மேதினங்கள் நாடுபூராவிலும் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது. வழக்கமாக ஜேவிபி.தான்கவர்ச்சிகரமான மே தினங்களை நடாத்தி வந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் அவர்கள் மே தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறைமுகமாக தடுத்து வந்திருக்கின்ற வரலாறுகள் இருக்கின்றன.
ஜேஆர் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மிகவும் குறைவான கட்டணத்தில் சினிமாக் கொட்டகைகளை நடாத்தி வந்தவர்களுக்கு மே முதலாம் திகதி சினிமாக் காட்சிகளை காட்ட வேண்டும் என்று ஜனாதிபதி ஜேஆர். அன்று கட்டளையிட்டிருந்தார். சுதந்திரக் கட்சியும் ஓரளவுக்கு மேதினத்துக்கு அன்று முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. ராஜபக்ஸாக்கள் தனிக் கட்சி துவங்கிய போதும் அவர்கள் மேதினங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர் என்பதில் நிறையவே தெளிவில்லாத நிலை.
ரணசிங்ஹ பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐதேக. வெற்றிகரமான மே தினங்களை நடாத்தி இருக்கின்றது. அப்படி ஒரு மேதினத்தில் வைத்துத்தான் ஜனாதிபதி பிரேமதாச கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது 2026 மேதினக் கூட்டங்கள் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம். வரலாற்றில் முதல் முறையாக நாடு பூராவிலுமுள்ள இருபத்தியொரு தேர்தல் மாவட்டங்களில் என்பிபி. மேதினங்களை வெற்றிகரமாக நடாத்தி இருந்தது. அவற்றில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வந்து கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கு சிறுபான்மை வாழ்கின்ற இடங்களில் கூட இந்த மேதினம் கலை கட்டி இருந்தது. நுவரெலியாவிலும் மஹரகமவின் ஜனாதிபதி அனுர தலைமையில் அந்தக் கூட்டங்கள் நடந்திருந்தது. இதில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தனது தலைவர் சஜித் தலைமையில் கொழும்பில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் எந்த ஊர்வலங்களும் இடம் பெறவில்லை. அதே போன்ற மொட்டுக் கட்சி இந்த மேதினத்தை சமய நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தது. அன்று வெசக் தினம் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களா அல்லது தமக்கு ஆட்களை ஒன்று சேர்க்க முடியாது என்பதால் மேதினத்தை தவிர்த்துக் கொண்டார்களா என்பது நமக்குத் தெரியாது.
ஆனாலும் அவர்கள் நடாத்திய வழிபாட்டு நிகழ்விலும் பெரியளவில் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் நாமலும் விகாரைக்குப்போய் சில வழிபாடுகளை செய்வதுடன் நிகழ்வை முடித்துக் கொண்டார்கள்.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொழிலாளர்களுக்கு புரியாணி கொடுத்து இந்த மேதினத்தை நடாத்தி இருந்தது. சில நூறுபேருக்கு சாப்பாடு போட்டு ஐதேக. கைகளைக் கழுவிக் கொண்டது. முன்னிலை சோசலிசக் கட்சி ஓராளவுக்கு வெற்றிகரமான மேதின ஊர்வலத்தையும் பேரணியையும் நடாத்தி இருந்தது.
திலித்தும் ஒரு மே தினத்தை நடத்தி அங்கு ஒரு நாடகத்தை காட்டி இருந்தார். அதே நேரம் வழக்கமாக மலையகத்தில் மேதின பேரணிகளை நடாத்துகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சில தோட்டங்களில் ஆங்காங்கே சிறு வைபவங்களை நடாத்தி இருந்தது. அதே போன்று திகாம்பரம் வழக்கமாக தலவாக்கலையில் நடாத்துகின்ற மேதினத்தையும்இந்தமுறை காணவில்லை.
ஆளும் என்பிபி நடாத்திய மேதினத்தில் இந்த முறை ஒரு வித்தியாசத்தை நாம் பார்த்தோம். வழக்கமாக அவர்களின் ஊர்வலத்தில் காள்மார்க்ஸ் ஏங்கல் லெனின் விஜேவீர போன்ற தலைவர்களின் பாரிய (கட்அவுட்) புகைப்படங்களை முன்னிலைப்படுத்தித்தான் அவர்களின் ஊர்வலங்கள் பயணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அந்தக் காட்சிகளை நாம் காணவில்லை.
இது அவர்களின் அரசியல் இராஜதந்திரமாக இருக்கலாம் என்று நாம் நம்புகின்றோம்.அது பற்றி எவரும் கேள்விகளை எழுப்பவுமில்லை. இந்த ஊர்வலங்கள் மூலம் அரசு இன்னும் பலமாக இருப்பதை அவர்கள் நாட்டுக்கு காட்சிப்படுத்தி இருக்கின்றார்கள். அதே நேரம் சஜித் கூட்டத்துக்கு அழைத்து வந்தவர்கள் தலைவர் பேசுகின்ற நேரம் பார்த்து அங்கிருந்து பகிஸ்கரிப்பது போல எழுந்து சென்றதை ஊடகங்கள் கேலி பண்ணி இருந்தது.
நமது கணக்குப்படி அனுர மாகாணசபைத் தேர்தலை இலக்குவைத்துத்தான் 21 தேர்தல் மாவட்டங்களிலும் தனது மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடாத்தி இருக்கின்றார்கள் என்று நாம் நம்புகின்றோம்.ஒட்டு மொத்தமாகப்பார்க்கின்ற போது என்பிபி. பேரணிகளில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சஜித் தலைமையிலான கூட்டத்தில் ஒரு பத்தாயிரம் பேர் வரை வந்திருந்தனர். ஒட்டுமொத்த எதிரணி மே தின கூட்டங்களில் ஒரு 25000 பேர் வரையில்தான் பங்கு பற்றி இருந்தனர். தமிழரசும் மே தினக் கூட்டங்களை நடாத்தியதாம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் நமக்கு அந்தக் காட்சிகள் கிடைக்கவில்லை.





