அமெரிக்கா ராணுவமும், கடற்படையும் இணைந்து ஹார்முஸ் நீரிணையில் ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடல் போக்குவரத்து தடையை எதிர்கொள்ள ஈரான் புதிய உத்தியை வகுத்துள்ளது.
ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக ஆண்டு வந்த ஈரான் தற்போது டிரம்ப் செயல்பாட்டால் மொத்தத்தையும் இழந்து நிற்கிறது.
மேலும் ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் அமெரிக்க போர் கப்பல் அருகில் நின்று கண்காணித்து வருவதால் அதுவரையில் ஒரு கப்பல் கூட ஈரான் நாட்டை விட்டு வெளியேறவில்லை, அதேபோல் உள்ளேயும் நுழையவில்லை.
இந்த நிலையில் ஈரான் அமெரிக்காவின் இந்த கட்டுப்பாட்டை உடைக்க திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள மாகாண அதிகாரிகளுக்கு ஒரு முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் சீனாவுடன் நிலவழி வர்த்தக பாதைகளை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவின் நெருக்கடியை குறைக்க முடியும் என திட்டமிட்டு வருகிறது.
ஈரானின் 90 சதவீத வர்த்தகம் கடல் வழியாக நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈரான் அரசின் அடுத்தக்கட்ட திட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது.
ஈரான் அதிகாரிகள் அரசின் புதிய அறிவிப்பு குறித்து தெரிவிக்கையில், பல அமைச்சகங்கள் இணைந்து நாட்டின் நில மற்றும் கடல் எல்லைகளில் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் பொருள் விநியோக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதன் மூலம் அமெரிக்காவின் கடல் தடையால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த தகவலை நூர் நியூஸ் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் ஒட்டுமொத்த இலக்கு என்னவென்றால் அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பை தாண்டி எப்படி ஈரான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் 2வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈரானுக்கான ஆதிக்கம் தற்போது குறைந்திருக்கும் வேளையில் இரு நாடுகளின் புதிய திட்டம், புதிய நிலைப்பாடு தான் வர்த்தக சந்தையை தீர்மானிக்கும்.
270 பில்லியன் டாலர் இழப்பீடு
அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் 270 பில்லியன் டாலர் வரை இழப்பீடு கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை ஈரான் நாட்டில் ஏற்பட்ட சேதத்திர்கு காரணம் என ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கிட்டத்தட்ட மற்ற அரபு நாடுகளை போர் குற்றவாளியாக அறிவித்துள்ளது ஈரான்.
இந்த நாடுகளின் தங்கள் விமானப் பாதை, தளங்கள் மற்றும் பகுதிகளைப் பயன்படுத்தி அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களுக்கு உதவியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
சில நாடுகள் ஈரானின் பொதுமக்கள் பகுதிகளுக்கு நேரடியாக தாக்குதல் நடத்த உதவியதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹாஜெரானி மற்றும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் எடுத்துள்ள இந்த இரு முக்கிய நடவடிக்கைகளும் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான 2வது கட்ட பேச்சுவார்த்தையில் இந்த இழப்பீடு தொகை முக்கியமான விவாத பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





