மத்திய கிழக்கு போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாகச் சொன்ன ஈரான் உயர் ராணுவ அதிகாரியை இஸ்ரேல் குறிவைத்துத் தூக்கியுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் படைகளை அவர் மிரட்டிய நிலையில், சில மணி நேரங்களில் அவரை இஸ்ரேல் காலி செய்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது.
முதல் நாளே ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டதால் போர் விரைவாக முடிவுக்கு வரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக போர் வாரக்கணக்கில் தொடர்கிறது.
ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அதேநேரம் மறுபுறம் ஈரான் டாப் தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தூக்கி வருகிறது.

உயிரிழப்பு: இதற்கிடையே ஈரான் புரட்சிகரப் படையின் மற்றொரு மூத்த அதிகாரி, அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படைக்குச் சவால் விடுக்கும் வகையில் ‘எதிரிகளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது’ என்று அவர் எச்சரித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது.
உயிரிழந்த அலி முகமது நைனி புரட்சிகரப் படையின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். இவரது மரணத்தை ஈரான் தரப்பும் உறுதி செய்துள்ளது. உயிரிழக்கும் முன் பிரிகேடியர் ஜெனரல் நைனி வெளியிட்டிருந்த கடைசி அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நக்கலடித்திருந்தார்.
ஈரான் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாது என்று நெதன்யாகு கூறியிருந்த நிலையில், அதை நைனி மறுத்தார்.
போருக்கு நடுவிலும் ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பம் உச்சத்தில் இருப்பதாக நைனி குறிப்பிட்டிருந்தார்.
மிரட்டல்: போர் ஒரு பக்கம் நடந்தாலும் ஈரானின் ஏவுகணை உற்பத்தி தொடர்ந்து நடைபெறுவதாகவும், போதிய கையிருப்பு இருப்பதால் பிரச்சினை இல்லை என்பது போல நைனி தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் தான் அவர் மேலும், “எங்கள் ஏவுகணை தொழில்நுட்பம் இதுவரை இல்லாத வகையில் உச்சத்தில் இருக்கிறது. எதிரிகளுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.
போர்கள் தொடரும்போது, அவை மேலும் சிக்கலாகவும் தீவிரமாகவும் மாறும்” என்று அவர் வெளிப்படையாகவே எச்சரித்திருந்தார்.
மரணம்: மேலும், ஈரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதையும் மைனி மறுத்தார். மேலும், முடிந்தால் வளைகுடா பகுதிக்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்களை அனுப்புங்கள் என்றும் சவால் விடுத்தார்.
தைரியமிருந்தால் டிரம்ப் தனது கப்பல்களை அனுப்பட்டும்… அப்போது ஈரான் கடற்படை இருக்கிறதா இல்லையா என்பது தெரியும் என நைனி சவால் விடுத்திருந்தார்.
நைனியின் இந்த அறிக்கை வெளியாகி சில மணி நேரத்திலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் இதுபோல வெளிப்படையாகச் சவால் விடுத்தாலேயே அவரை குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் கொன்றுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்: மத்திய கிழக்கில் போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ இனி முடியாது என்று நெதன்யாகு கூறினார்.
போர் தொடங்கிய பிறகு முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்த நெதன்யாகு, “போர் தொடங்கி 20 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது என்னால் உறுதியாக உங்களிடம் சொல்ல முடியும்.
ஈரானிடம் இன்று யுரேனியத்தை செறிவூட்டவோ, பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ திறன் இல்லை.
ஈரான் இதுவரை இல்லாத வகையில் பலவீனமாக இருக்கிறது. தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம்” என்றார்.





