இம்ரான் கான்.. உடல்நிலை ரொம்பவே மோசம்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையே இரவோடு இரவாக அவர் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

பாகிஸ்தான் நாட்டின் மாஜி பிரதமர் இம்ரான் கான் இப்போது சிறையில். ஊழல் வழக்கு ஒன்றில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2023 முதல் இம்ரான் கான் சிறையில் இருக்கிறார். இருப்பினும், சிறையில் அவருக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தரவில்லை எனப் புகார்கள் எழுந்தன.

Imran Khan Health Pakistan EX PM taken out of jail for crucial Eye Treatment at Islamabad Hospital

புகார்கள்

அவரை தனிமைச் சிறையில் அடைத்து சிறை நிர்வாகம் டார்ச்சர் செய்வதாகவும் உரிய மருத்துவச் சிகிச்சைக்குக் கூட சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூட சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் உடல்நிலை தொடர்பாகச் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரவோடு இரவாக

அதாவது நேற்று இரவோடு இரவாக இம்ரான் கான் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு இம்ரான் கானுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.. ஆனால், அவரது பெர்சனல் மருத்துவரைச் சந்திக்கச் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என அவரது செய்தித் தொடர்பாளர் சையத் ஜுல்பிகர் புகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

சிறை நிர்வாகம் அழைத்துச் சென்ற மருத்துவரே இம்ரான் கானுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனைக்கே இம்ரான் கானை சிறை நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.. சிகிச்சைக்குப் பின், இம்ரான் கான் நிலையாக உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இருப்பினும், 73 வயதான இம்ரான் கானின் வலது கண்ணில் பார்வை கிட்டத்தட்ட பறிபோய்விட்டதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை

இம்ரான் கானை பெர்சனல் மருத்துவர் சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஜுல்பிகர் புகாரி வலியுறுத்தியுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினரையும் சிறை நிர்வாகத்தினர் சந்திக்க அனுமதி தரவில்லை என்றும் உடனடியாகக் குடும்பத்தினர் இம்ரான் கானை சந்திக்க அனுமதி தர வேண்டும் என்றும் சையத் ஜுல்பிகர் புகாரி கூறினார்..

இம்ரான் கான்

முன்னதாக கடந்த வாரம் இம்ரான் கானின் உடல்நலம் குறித்து கவலை கொண்ட 12க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள், அவருக்கு “போதுமான” மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சர்வதேச அழுத்தமும் நீதித்துறை பிரஷரும் வந்ததாலேயே இப்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அப்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

திடீரெனக் கூட்டணிக் கட்சிகளும் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளவே, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, பல ஊழல் மற்றும் பிற சட்ட வழக்குகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.

Previous Story

ஈரான் இறக்கிய இரும்பு பறவை!

Next Story

බෞද්ධ සම්මේලනය කලබලයට කරපු වැඩක්. නාගදීපයේ හාමුදුරුවන්ට තිස්ස විහාරය එක්ක තියෙන්නේ ඉඩම් පලහිලව්වක්.