நஜீப் பின் கபூர்
நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல்
எதிரணியில் ஜனரஞ்சகமான தலைவர்கள் எவருமில்லை
மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் தமிழ் அரசியல்
மதில் மேல் பூனையாக நிற்கும் தனித்துவ தலைமைகள்

தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஆளும் என்பிபி பலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் கடந்து நிற்கின்றது. என்பிபி. எந்தவொரு கட்சியையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாமலே இந்த பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டது. இப்படியான வாய்ப்புக்கள் மிகவும் அரிதாகத்தான் அமையும். எனவே நமது அரசியல்வாதிகள் சொன்னது போல இந்த அரசு ஒரு வாரங்கள் கூட நிலைக்காது. ஆறுமாதங்கள் கூட நீடிக்காது.
புதிதாக இப்போது ரணில் விமல் வீரவன்ச போன்றவர்கள் வருகின்ற மார்ச் வரை கூட அதாவது இன்னும் ஒரு மாதங்கலேனும் அரசு நீடிக்காது என்று சில தினங்களுக்கு முன்னரும் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றனர். அப்படியாக இருந்தால் இந்த கதைகளின் படி தமிழ் சிங்களப் புத்தாண்டில் புதிய அரசு பதவிக்கு வருகின்றது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் இந்தக் கதைகள் எந்தளவுக்கு யதார்த்தமானது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இது போன்ற கதைகளை விடும் அரசியல்வாதிகளை மக்கள் கோமாளிகளாகத்தான் பார்ப்பார்கள். மேலும் இப்படிக் கதைகளைப் பேசும் அரசியல்வாதிகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட செல்லாக்காசுகள். தனது செய்திகள் நாமங்கள் ஊடங்களில் அடிக்கடி வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படியான இசுக்களை அவர்கள் எடுத்து விடுகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மீண்டும் ரணிலை நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அவரை ஜனாதிபதி கதிரையில் அமர்த்துவது பற்றி கதைகளும் பேசப்படுகின்றன. ராஜபக்ஸாக்கள் அவரை டம்மியாக அதிகார கதிரையில் அமர்த்தினார்கள் என்பதற்காக மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு இலங்கை அரசியலில் வரும் என்று இன்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் ரணில் விசிரிகள் இந்த கதையை அடிக்கடி சந்தைப்படுத்தி தமது ஆதரவாலர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருகின்றார்கள். அப்பாவிகள் சிலர் இப்படியான கதைகளிலும் நம்பிக்கை வைப்பதும் தெரிகின்றது.
இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்கள் எப்படிப்போனாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்ற ஒரு அரசாங்கத்துடன் கொடுக்கல்வாங்கள் செய்வதாக இருந்தால் எதிரணிகள் தமக்குள் குறைந்த பட்சம் நாடாளுமன்றத்துக்குள்ளாவது ஒரு கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கும் அவர்களுக்கு ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும். இன்று நாடாளுமன்றத்தில் எதிரணியின் பலம் என்ன என்று சில தினங்களுக்கு முன்னர் எண்ணிக்கை அடிப்படையில் நாம் சுட்டிக்காட்டி இருந்தோம்.
எனவே அதனை மீண்டும் இங்கு பதிய வேண்டியதில்லை. எதிரணியில் சஜித் தலைமையில் அணியில் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றர்கள். தேசிய கட்சிகள் என்று பார்க்கும் போது சில கட்சிகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய உறுப்பினர்கள் தான் அங்கு இருக்கின்றார்கள். தமிழரசுதான் சஜித் அணிக்கு அடுத்தபடியான அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் இருக்கின்றார்கள். ஏனைய தரப்பு நாட்டாளுமன்ற உறுப்புரிமைகளை சில்லறைகள் என்று எடுத்துக் கொள்வோம். இது ஒரு பலயீனமான நிலை.

எனவே இன்று நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் என்பிபி அல்லது ஜேவிபிக்கு எதிராண கூட்டணி ஒன்ற காலத்தின் கட்டாயம்-அவசியம். இந்தக் கூட்டணிகள் பொதுமக்கள் நலன்களுக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்பது நமது சிபார்சாகும். பொதுவாக அரசியல்வாதிகளும் கட்சிகளும் தேர்தல்களை மையமாக வைத்துத்துதான் அரசியல் கூட்டணிகள் பற்றிச் சிந்திக்கின்றன. ஆனால் நாம் இங்கு குறிப்பிடுகின்ற அரசியல் கூட்டு தேர்தலுக்கு அப்பாலான ஒன்று. காரணம் இது தீர்க்கமான ஒரு தேர்தலுக்கான நேரமல்ல.
இதனை எதிரணியில் உள்ள அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் நாம் எதிரணிகளுக்கு ஒரு கூட்டுத் தலைமைத்துவம் பற்றிய கருத்தை முன்வைக்கின்றோம். குறிப்பாக முதல் கட்டமாக நாடாளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க் கட்சிகளாவது தமக்குள் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கூட்டணி பற்றி சிந்திக்க முடியும். இவர்கள் அப்படி ஒரு இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் ஆளும் தரப்பு தமக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து தவறான முடிவுகளைக் கூட மேற்கொள்ள இடமிருக்கின்றது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே என்று பார்க்கும் போது எதிரணியில் பலமான அணி சஜித் தலைமையிலான ஐம.சக்தி. அடுத்து நாமல் தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அதனைத் தெடர்ந்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை நாம் உச்சரித்தாலும் ரணில் இன்று மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவர். அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது. ஆனாலும் அவரது சில கையாட்களும் சில ஊடகங்களும் அவரை பெரிய அரசியல் சிந்தனையாளர் போல ஊதிப் பெருப்பித்துக் கொண்டு வருகின்றன. நமது பார்வையில் இலங்கைய அரசியலில் ரணில் இன்று செல்லாக் காசு.

இந்த ரணிலை வைத்து அவரது விசிரிகளும் பிரபுத்துவவாதிகளும் சஜித்தை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றார்கள். மாகாணசபைத் தேர்தல் வருமாக இருந்தால் இன்று இலங்கையில் இருந்த சம்பிரதாய இடதுசாரிகளைப் போல ரணில் நிலையும் அமையும். ஐதேக.வும் காட்சிப் பொருளாகி விடும். நாம் இப்படிச் சொன்னாலும் இந்த ஐக்கிய தேசியக் கட்சி என்ற நாமத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாலர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பு இன்றும் இருக்கின்றது.
இது ரணில் தலைமைத்துவத்துக்கான விசுவாசம் அல்ல. சஜித்-ரணில் இணைவு பற்றி பேசுகின்றவர்களில்; அனேகமானவர்கள் ரணில் கையாட்கள். இவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்குள் புகுந்து சஜித்தை அந்தக் கட்சியில் இருந்து ஓரம்கட்டும் ஒரு முயற்சி அல்லது சதியில்தான் இறங்கி இருக்கின்றாhகள். இன்று நாடாளுமன்றத்தில் ரணில் அணியில் ஒரு உறுப்பினர் கூட கிடையாது.
எதிரணியில் இருக்கின்ற அரசியல் தலைவர்களின் ஆளுமை மக்கள் செல்வாக்கு என்று பார்க்கும் போது அதில் பலம் பலயீனங்கள் இருந்தாலும் சஜித் நாமல் என்று எடுத்துக் கொள்ள முடியும். இல்லை ரணிலை விடமுடியாது என்று யோசிப்பதாக இருந்தாhல் அவரையும் நாம் சிபார்சு செய்கின்ற இந்த கூட்டுத் தலைமைத்துவத்தில் இணைத்துக் கொள்ள முடியும். ஆகக் கூடியது ஐந்து அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் இதனை மட்டுப்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தால் நல்லது.

இன்று எதிரணிகள் இணைகின்ற போது அதன் தலைமை யார் என்ற கேள்வியும் அதற்கான இழுபறியும்தான் முதலில் பேசப்படுகின்றது. ஆனால் நாம் குறிப்பிடுவது கூட்டுத் தலைமைத்துவம் பற்றிய ஒரு சிபார்சு. எனவே ஒரு தனி நபர் இங்கு ஹீரோவாக இடம் பிடிக்க சந்தர்ப்பம் இல்லை.அதற்கு இடம் வைக்கவும் கூடாது. அமர்வுகளை நெறிப்படுத்துவதற்காக ஒரு தவிசாளரை நியமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் கூட்டமைப்புக்குத் தலைமை பற்றி ஈகோவைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.
மேலும் இந்த அமைப்பை வழிநடாத்திச் செல்ல புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு ஆலோசனை சபையையும் அமைத்துக் கொள்ள முடியும் என்பதும் எமது சிபார்சு. பலயீனமாக எதிரணி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் அதற்கு வெளியேயும் இன்று மூக்குடைபட்டு வருகின்றது. இந்த அரசு இன்னும் நான்கு வருடங்கள் அதிகாரத்தில் இருக்கும். எனவே அதற்கு ஈடுகொடுக்க வேண்டுமாக இருந்தால் எதிரணி தமக்குள் ஒரு கூட்டுத் தலைமையை நியமித்துக் கொள்ளவது காலத்தின் கட்டாயம்.
அது அப்படி இருக்க இன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் சஜித்தைப் பலயீனப்படுத்துகின்ற ஒரு சதியும் நாட்டில் நடந்து கொண்டு வருகின்றது. என்னதான் சஜித்தும் ரணிலும் இணைய வேண்டும் ஐமச.வும் ஐதேகவும் இணைய வேண்டும் என்று பேசினாலும் அங்கு சஜித்துக்கு எதிரான சூழ்ச்சிகள் பல்வேறு மட்டங்களில் நடந்து கொண்டு வருகின்றது. எனவேதான் ஐதேக. செயலாளர் தலதாக மிகவும் கீழ்தரமாக சஜித்தை பகிரங்கமாக இன்னும் விமர்சித்து வருகின்றார். இந்த இணைவு எப்படி வெற்றிபெற முடியும்?
அதே நேரம் ஐதேக. வில் இருக்கின்ற மற்றுமொரு தரப்பினர் தாம் எதிர்காலத்தில் அரசியல் செய்வதாக இருந்தால் ஐமச-ஐதேக என்ற இரு தரப்பும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதனை தெளிவாக உணர்ந்து வைத்திருக்கின்றார்கள்.அதே போன்று சஜித் அணியுடன் ஐதேக. இணையும் போது தமது நலன்களையும் பதவிகளையும் தொகுதி அமைப்பாளர் பதிவிகளையும் கூட பறிகொடுக்க வேண்டி வரும் என்று சிந்திக்கின்றவர்களும் அந்த அணியில் நிறையவே இருக்கின்றார்கள். அப்படித்தான் இணைத்தாலும் அவர்களின் அரசியல் பயணம் சுட்ட மண் என்ற நிலையில்தான் அமையும் என்பதனையும் முன் கூட்டிச் சொல்லி வைக்கின்றோம்.

நாம் குறிப்பிடுகின்ற கூட்டுத் தலைமை பற்றிய எண்ணக்கருவுக்குள் தனிப்பட்ட ரீதியில் கட்சி மற்றும் அரசியல் தலைமைகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எதிரணியில் இருக்கின்ற ஜனரஞ்சகமாக தலைவர் சஜித் இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. எனவே அவரை இழிவுபடுத்தி ஒரு அரசியலை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க முடியாது. அப்படி செயல்பாடுகள் நடக்கின்ற போது அது ஒட்டுமொத்த எதிரணியையுமே பாதிக்கும். அதே நேரம் சஜித் ஆளுமை தொடர்பில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன என்பதும் தெரிந்ததே. அடுத்து எதிரணியில் இருக்கின்ற செல்வாக்கான மனிதன் நாமல். இவரும் அரசியல் ரீதியில் ஆளுமையுள்ள ஒரு மனிதனல்ல.
அவருக்கு உள்ள ஒரே தகைமை தான் மஹிந்த ராஜபக்ஸவின் சிரேஸ்ட புதல்வர் என்பது மட்டுமே. அரசியலை முன்னெடுத்துச் செல்ல அவருக்குப் போதியளவு பணப் பலம் இருக்கின்றது. ஒரு தசாப்தங்களுக்கு மேலாக ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்ததால் இவர்களினால் பிழைத்தவர்கள் என்ற பெரும் கூட்டம் நாட்டில் இருக்கின்றது. அவர்களில் கனிசமானவர்கள் இன்றும் ராஜபக்ஸாக்களின் விசுவாசிகள் என்ற நிலையில் இருந்து நாமலுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.
எனவே இவர்களின் மொட்டு அணியை நாட்டில் இருக்கும் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என எடுத்துக் கொள்ள முடியும். இதற்கு அடுத்த படியாக பேரினக்கட்சிக்குள் தீர்க்கமான அரசியல் தலைவர்கள் இன்று இல்லை. என்றாலும் சுதந்த்திரக் கட்சி பற்றிய ஒரு சின்ன எதிர்பார்ப்பு நாட்டில் இருக்கின்றது என்றாலும் அதன் தலைமை நிருவாகிகள் யார் என்பது அந்தக் கட்சிக்குள் இருப்பவர்களே அறியாத ஒரு நிலை அங்கு.
நாட்டிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளை எடுத்துக் கொண்டால் வடக்குக் கிழக்கில் அவர்கள் சிந்தனை செயல்பாடுகள் தனித்துவமாக இருக்கின்றன. தமிழ் மக்கள் இன்று அவர்களின் செயல்பாடுகளில் நம்பிக்கையுடன் இல்லை. அங்கும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் கடுமையான முரண்பாடுகள். வெட்டுக்கொத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் அங்கு இன்று காணாமல் போய் இருக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அவர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் கிடையாது. நாட்டில் இருக்கின்ற தனித்துவ முஸ்லிம் மலையக கட்சிகள் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பை மையமாக வைத்துத்தான் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றன. அதற்காகத்தான் கட்சிகளையும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றை இன்று அரசியல் வியாபாரமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த தனித்துவக் கட்சிகளால் தான் சார்ந்த மக்களுக்கு ஏதும் நடக்கப் போவதில்லை என்பதை அந்த சமூகங்கள் இப்போது நன்கு தெரிந்துதான் வைத்திருக்கிறன. இதனால் அவற்றின் இருப்புப் பற்றி பெரிய நம்பிக்கைகள் சமூகத்தில் கிடையாது. தற்போதய அரசியல் பின்னணியில் இவர்கள் அரசியல் தீர்மானங்கள் எடுக்கின்ற போது பாம்புக்கும் நோகாது பாம்பை அடித்த கம்புக்கும் நோகாமல் என்ற நிலையில்தான் அவை இருக்கின்றன. எனவே சிறுபான்மை கட்சித் தலைவர்களை நம்பி தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள முடியாத நிலையில்தான் ஆளும் தரப்பும் எதிரணியும் இருக்கின்றன. மதில் மேல் பூனையாக இருந்துதான் தனித்துவ அரசியல் இன்று போய்க்கொண்டிருக்கின்றது.

அதே நேரம் கடந்த பொதுத் தேர்தலில் நாம் தேர்தலுக்கு நின்றால் கட்டுப்பணம் கூட இல்லாமல் போய்விடும் என்பதற்காக பல டசன் கணக்கான அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்றாலும் இன்றும் அவர்கள் செல்வாக்கான தலைவர்கள் போல அரசியல் பேசி வருகின்றார்கள். ஊடகச் சந்திப்பக்களைச் செய்து வருகின்றார்கள்.
இவர்களில் ஐதேக. ரணிலும் அவரோடு இருக்கின்ற வஜிர தலதா ஹரின் ருவன் நவின் போன்றவர். மொட்டுக் கட்சி செயலாளர் சாகல காரியவாசம் ஜொன்ஸ்டன் திஸ்ஸகுட்டி போன்றவர்கள். சு.கட்சியில் மைத்திரி துமிந்த நிமல் போன்றவர்களும் இங்கு.

அடுத்து இனவாதிகளான கம்மன்பில விமல் சம்பிக்க போன்றவர்கள் அடிக்கடி ஏதாவது உலறிக் கொண்டிருக்கின்றார்கள். அவற்றை மக்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதனால்தான் மார்ச்சில் அரசு கவிழ்கின்றது போன்ற கதைகளைச் சொல்லி ஊடகங்களில் இடம் பிடிக்க முனைகின்றார்கள். எதிரணியில் நல்ல நாவன்மையுள்ள அரசியல் தலைவர்கள் இல்லாமல் இருப்பதால் இவர்கள் அந்த இடத்தை நிரப்ப முனைகின்றனர்.
இவர்கள் எந்த நேரத்தில் எந்த அணியில் இருப்பார்கள்-தூவுவார்கள் என்று தெரியாது. ஆனாலும் பணம் என்றால் பிணமும் வாய்திறப்பது போல காசு வீசும் பக்கத்தில் இவர்கள் அணைவது தவிர்க்க முடியாது. சஜித் இப்படியானவர்களை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார். இது ஆரோக்கியமானது.





