“டிரம்ப் தலையிடாமல் இருந்திருந்தால்…”
இந்தியா – பாகிஸ்தான் மோதல் பற்றி
பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தியா – பாகிஸ்தான் மோதல் பற்றி மீண்டும் பேசியுள்ளார்.
ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய ஷபாஸ் ஷெரீஃப், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதற்கு டிரம்பிற்கு நன்றி தெரிவித்தார்.
“பாகிஸ்தான் தனது கிழக்கு கரையில் எதிரியின் தூண்டுதலுக்குப் பதிலடி கொடுத்தது மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்த உதவுவதாகவும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தெரிவித்தது,” என்றார்.
பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவின் வழியில் அனைத்து விவகாரங்களையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்
பஹல்காம் தாக்குதலை இந்தியா அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக ஷெபாஸ் ஷெரீஃப் தனது உரையில் குற்றம்சாட்டியிருந்தார்.
பாகிஸ்தான் வெளிப்புற ஆதிக்கத்திற்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ளும் என்று கூறிய ஷபாஸ் ஷெரிஃப், “நாங்கள் இந்தியா உடனான போரை வென்றுவிட்டோம்.
தற்போது எங்களுக்கு அமைதி வேண்டும். இந்தியா உடன் தீர்க்கப்படாமல் உள்ள அனைத்து விவகாரங்கள் பற்றியும் முழுமையான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது,” என்று கூறினார்
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்பிற்கு நோபல் பரிசு உரித்தானது எனத் தெரிவித்த ஷபாஸ் ஷெரிஃப், “டிரம்ப் தலையிடாமல் இருந்திருந்தால் போரின் முடிவுகள் பேரழிவைக் கொடுத்திருக்கும்.” என்றார்.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீட்டைத் தொடர்ந்து மறுத்து வரும் இந்திய அரசு, பாகிஸ்தான் உடனான அனைத்து விவகாரங்களும் இருதரப்பானது என்கிறது.





