பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயர் பயங்கரமாக அடிவாங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா உறவை சமாளிக்க நேரடியாக மோடியை சந்தித்து பேச இந்தியா வர உள்ளதாக நெதன்யாகு கூறியுள்ளார்.
நெதன்யாகு மேலும் கூறியதாவது, “பிரதமர் மோடியும் டிரம்பும் எனக்கு மிகச் சிறந்த நண்பர்கள். டிரம்பை கையாள்வது குறித்து பிரதமர் மோடிக்கு சில ஆலோசனைகளை தனிப்பட்ட முறையில் வழங்க இருக்கிறேன். இதற்காக நான் இந்தியாவுக்கு விரைவில் செல்ல இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா-இந்தியா உறவின் அடிப்படையை “மிகவும் உறுதியானது” என்று புகழ்ந்த நெதன்யாகு, இரு நாடுகளும் வரிப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “உறவின் அடிப்படை மிகவும் உறுதியானது.
வரிப் பிரச்சனைக்கு ஒரு பொதுவான தீர்வை எட்டுவது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு நல்லது. இந்தத் தீர்வு இஸ்ரேலுக்கும் நல்லது, ஏனெனில் இரு நாடுகளும் எங்கள் நண்பர்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வார தொடக்கத்தில், ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ததற்கான ‘தண்டனையாக’ இந்திய ஏற்றுமதிகள் மீது கூடுதலாக 25% சுங்க வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் இந்தியப் பொருட்கள் மீதான சுங்க வரி 50% ஆக உயர்ந்தது.
பிரேசிலைத் தவிர்த்து, டிரம்பின் புதிய பட்டியலில் இதுவே அதிகபட்ச சுங்க வரி விதிப்பாகும். அமெரிக்காவின் இந்த “அநியாயமான, நியாயமற்ற மற்றும் பொருத்தமற்ற” நடவடிக்கையை இந்தியா கண்டித்துள்ளது. இதனால் ஜவுளி மற்றும் கடல்சார் ஏற்றுமதி போன்ற பல துறைகள் பாதிக்கப்படும்.
“இம்மாத இறுதியில் சீனா செல்கிறார் பிரதமர் மோடி! அமெரிக்காவை சாமாளிக்க புது திட்டம்?” பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேசுகையில், “இந்தியா தனது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது” என்று உறுதியாக கூறினார்.
அமெரிக்காவை எதிர்ப்பதால், “அதற்கான விலை கொடுக்க நேரிடும்” என்று தெரிந்திருந்தும், விவசாயிகளுக்காக அதைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். “விவசாயிகளின் நலன் எங்களின் முதன்மையான முன்னுரிமை.
இந்தியா தனது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. இதற்காக நான் தனிப்பட்ட முறையில் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதற்குத் தயார். நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் நலனை பாதுகாக்க இந்தியா தயாராக உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்வேதேச அளவில் நெதன்யாகு மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. சர்வதேச நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மட்டுமல்லாது நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், இந்தியாவுக்கு நெதன்யாகு வருவதாக கூறியிருப்பது அரசியல் தளத்தில் கவனம் பெற்றிருக்கிறது.





