அமைச்சரவை மாற்றம்-1000 தேசிய பாடசாலை ஜனாதிபதி 

அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அதோடு , அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

இன்று மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பெனவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி கோட்டாபய இதன்போது கூறினார்.

மேலும் இதன்போது பாடசாலைகள் வகுப்பறைகளை சென்று பார்வையிட்ட ஜனாதிபதி, மாணவர்கள் மற்றும் பெற்றோருடனும் அளவளாவியிருந்தார்.

Previous Story

முன்னாள் அதிகாரிகள் அரசுக்கு எழுதிய கடிதம்

Next Story

சிங்கம்  நாய்க் குட்டியான கதை!