யாழ். பட்ட விழாவிற்கு  எதிர்ப்பு!

தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, 2022ல் வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , இந்நிகழ்வு எதிர்வரும் காலங்களில் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாகவே பதியப்படும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்கு கோட்டாபய அரசின் பிரதிநிதிகளை அழைப்பதென சிறு குழு ஒன்று, எடுத்துள்ள முடிவிற்கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்த பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பும் இந்த முடிவிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் நடைபெறவுள்ள இந் நிகழ்வினை கண்டித்துள்ளது. இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது. இந்த நிலையில் , வழமைக்கு மாறாக, இவ்வாண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்கி, அவர்களின் பங்குபற்றலுடன் இவ்விழாவை நடாத்த முற்பட்டுள்ள அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக்குழுவினரை சிக்க வைத்துள்ள இந்தச் செயற்பாடானது தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சி ஆகும்.

இவ்வாறு பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே, எதிர்வரும் காலங்களில் வரலாற்றில் பதியப்படும். தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என விழாவின் ஏற்பாட்டாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை, இனப்படுகொலையாக விஸ்வரூபம் எடுத்தபோது, சிங்கள – தமிழ்த் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடுகள் முற்றியது. அரசியல் சுதந்திரப்போராட்டம் உதித்த மண்ணில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வுக்கு, தமிழினவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முற்படும் பேரினவாத முகவர்களின் திட்டமிட்ட சதிவலைக்குள் சிக்காது, ஏற்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.

சர்வதேச அரங்கிலுள்ள, தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் விடயங்களை, சிறிலங்கா அரசு முற்றுமுழுதாகப் புறக்கணித்தே வருகின்றது. அதோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் இன்றும் வீதிகளில் நின்று, நீதிவேண்டிப் போராடிவருகிறார்கள்.

தமிழர் தாயகம் மீது, திட்டமிட்டு சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடரும் சூழ்நிலையில், தமிழினவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அழைப்பதென்பது ஒருபோதும் ஏற்க்கொள்ளமுடியாத நியாயப்படுத்த முடியாத மிக மோசமான செயற்பாடாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீரமும், தியாகமும், அளப்பரிய அர்ப்பணிப்புக்களும் நிறைந்த தமிழ் மண்ணில், ஒரு உன்னதமான தேசிய விடுதலைப் போராட்டம் உதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்ணில், அற்ப நலன்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் என்றுமே மன்னிக்கப்பட முடியாதவை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்த விரும்புகின்றது.

அதேவேளை 2022 பட்டத்திருவிழாவுக்கு சிறிலங்கா இனப்படுகொலை அரசின் பங்காளிகளையும், அவர்களுக்குத் துணைநின்றவர்களையும், விருந்தினர்களாக அழைக்கும் முடிவை ஏற்பாட்டாளர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.jn

Previous Story

3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றிய தாலிபான்கள்!

Next Story

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு வாய்ப்பு