வங்கதேசத்தில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, தேர்தலை அறிவித்துள்ளார் முகமது யூனுஸ்.

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
பின்னர் ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது. அங்கு இந்தாண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவ தலைவர் வேக்கர் உஸ்ஜமான் அழைப்பு விடுத்திருந்தார்.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) உள்ளிட்டவை யூனுஸுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என்று யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2026 ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை நாட்டு குடிமக்களுக்கு நான் அறிவிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று யூனுஸ் அறிவித்துள்ளார்.
அடுத்த பக்ரீத் பண்டிகைக்குள், சீர்திருத்தம் மற்றும் நீதி குறித்த ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையை நாம் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
குறிப்பாக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அனைவரும் முன்னேற்றத்தைக் காண முடியும் என யூனுஸ் தமது பக்ரீத் தின உரையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு முன்னதான வன்முறை போராட்டங்களின் போது இழந்த உயிர்களைக் குறிப்பிட்டு, கிளர்ச்சியில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு தேர்தலை அரசாங்கம் நடத்த விரும்புகிறேன் என்றும், இது சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலாக தேசத்தால் நினைவில் கொள்ளப்படட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.





