நாட்டை அழிப்பதற்கு பங்களிப்பு செய்த கட்சியுடன் தமது கட்சிக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா(Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் கூட்டணி அமைக்கப்படுவது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் திணறி, திக்குமுக்காடி வரும் நிலைமையில், அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாத கஷ்டமான சூழல் உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்குள் இருக்கும் சிலர் அதில் தப்பிக்க வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பது எமக்கு தெரியும்.
எனினும் நாங்கள் தெளிவாக கூறுகின்றோம். நாட்டை அழிக்க பங்களிப்பு செய்த இரண்டு பிரதான கட்சிகளுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கு எந்த தொடர்பும் கிடையாது.
அமைச்சு பதவிகளை வகித்துக்கொண்டு, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக கைகளை உயர்த்தியவர்கள் தாம் தூய்மையானவர்கள் எம்முடன் இணைய முடியும் என கூறுகின்றனர்.
இது நகைப்புக்குரிய விடயம். அவர்கள் தூய்மையானவர்கள் அல்ல என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasri Jayasekara) தெரிவித்திருந்தார்.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற தூய்மையான கட்சியுடன் இணைந்து எதிர்காலத்தை கட்டியெழுப்பும் வாய்ப்பு சுதந்திரக் கட்சிக்கு இருப்பதாக தயாசிறி அண்மையில் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.