அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார்.
முதல் விவாதம்
இருவரும் முதன்முறையாக செப்.,11ம் தேதி பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது டிரம்ப் ஒரு குற்றவாளி அவர் எப்படி குற்றசம்பவங்களை பேசலாம் என கமலா சரமாரி கேள்வி எழுப்பினார். அதேநேரத்தில் டிரம்ப் பைடன் ஆட்சியில் பொருளாதாரம் மோசமடைந்து விட்டது என குறை கூறினார்.
ஆனால் அதிபர் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியானது. டிரம்ப் ஆதரவாளர்களே கமலா ஹாரிஸ்தான் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தினார் என்றும், டிரம்ப் திணறினார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பாருங்க
இந்நிலையில், டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு போட்டியாளர், போட்டியில் தோல்வியை தழுவி விட்டால், அவரது வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை எனக்கு மறுப்போட்டி வேண்டும் என்பதாகும். ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் எனது உடன் விவாதத்தில் தோற்று விட்டார்.
முதல் விவாதத்திலேயே நான் வெற்றி பெற்றேன் என கருத்துக் கணிப்புகள் தெளிவாக காட்டுகின்றன. இதனால், அவர் இரண்டாவது விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார்.மற்றொரு விவாதத்தில் நான் பங்கேற்க போவதில்லை. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.இன்னொரு விவாதம் நடத்தினால் கமலா ஹாரிஸ் மேலும் முன்னிலை பெற்று விடுவார் என்ற அச்சத்தில் டிரம்ப் இவ்வாறு கூறுவதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.