-நஜீப் பின் கபூர்-
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் எத்தனையோ தேர்தல்கள் இங்கு நடந்திருக்கின்றன. ஆனால் இதில் 1972 ஜே.ஆர். அரசியல் யாப்புக்குப் பின்னர் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல்தான் சமகாலதில் இலங்கையின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக அமைந்திருந்தன என்பதுதான் எமது அவதானம்.
ஆனாலும் நாட்டில் என்ன தேர்தல் நடந்தாலும் அது முக்கியமான ஒரு தேர்தலாகக் காட்டி அப்போது பிரசாரம் செய்வதும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் கடந்த உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்புச் செய்யப்பட்ட பின்னர் வரலாற்றைத் மாற்றுகின்ற ஒரு தேர்தலாக அது அப்போது பார்க்கப்பட்டது-பேசப்பட்டது.
ஆனாலும் நமது நாட்டில் நடக்கின்ற தேர்தல்களில் ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் 1988 க்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல் உளூராட்சி தேர்தல் என்ற அதிகார வரிசையில் அது அமைந்திருக்கின்றன. இதில் மாகாணசபைத் தேர்தல் கடந்த ஆறுவருடங்களாகவும் உள்ளூராட்சித் தேர்தல்கள் இரு வருடங்களாக நடக்கவில்லை. ஆளும் மஹிந்த- ரணில் அரசின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்திருந்ததால்தான் அவர்கள் தேர்தல்களைத் தள்ளிப்போடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் நாம் முன்பு சொன்னது போல எல்லாத் தேர்தல்களும் தீர்க்கமான தேர்தலாகக் காட்டியே பரப்புரைகள் நடப்பது வழக்கம். இது காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற நியதிதான்.
2024 ஜனாதிபதித் தேர்தலை நாம் தேர்தல்களின் தாய் என்று சொல்கின்றோம். அதற்கான நியாயங்களை இப்போது பார்ப்போம். இது நாட்டில் நடக்கின்ற ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல். முன்பு நடந்த அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் இருமுனைப் போட்டி என்ற நிலை இருந்தது. அதனால் ஏனைய வேட்பாளர்கள் பற்றி பெரிதாக எவரும் கண்டு கொள்ளவில்லை.
இந்த முறை நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் இந்த சமநிலையை மாற்றி விட்டிருக்கின்றது. காரணம் செல்வாக்கான வேட்பாளர்கள் பலர் இதில் இருக்கின்றார்கள். நமது பார்வையில் இவர்களை ஐந்து பேர் என்று அடையாளப்படுத்த முடியும். அவர்கள் ஜனாதிபதி ரணில், எதிர்க் கட்;சித் தலைவர் சஜித், என்பிபி. தலைவர் அணுர, மொட்டுக் கட்சி வேட்பாளர் நாமல் பொது வேட்பாளர் அரியநேந்திரன்.
இதனால் வாக்குகள் சிதறுவதால் யாரும் ஐம்பது சதவீதமான வாக்குகள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் இந்தத் தேர்தலில் பின் நாட்டில் ஒரு அரசியல் குழப்பத்திற்கு இடமிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த ஐம்பது சதவீதம் என்பது ஒரு மாயை என்பது எமது கருத்து. தேர்தலில் நற்பத்து இரண்டு (42) சதவீதமான வாக்கு பெற்றவர் அல்லது இந்த எண்ணிக்கை முப்பத்து ஐந்து (35) சதவீதம் என்று அது வீழ்ச்சியடைந்தாலும் அதனைப் பெற்றவர் எந்த சிக்கலும் இன்றி ஜனாதிபதியாக வர முடியும் என்பது எமது வாதம்.
இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் நமது வார இதழில் இந்த ஐம்பது சதவீதம் என்ற கருத்து வெறும் மாயை என்ற தலைப்பில் நாம் ஒரு நீண்ட கட்டுரையில் அதற்கான சட்ட ரீதியான விளக்கங்களைச் சொல்லி இருந்தோம். இது நமது வசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இப்போது இந்த தாய்த் தேர்தல் பற்றி மீண்டும் பார்ப்போம். முன்பு நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களைவிடவும் இது நிச்சயமாக மாற்றமான ஒன்று. காரணம் நாம் குறிப்பிட்ட ஐம்பது சதவீதத்தை யாரும் பெற மாட்டார்கள் என்ற கருத்து. அது அர்த்தமற்றது. அப்படி எவரும் ஐம்பது சதவீதம் எடுக்கமாட்டார்கள் என்றும் நிச்சயமாக எவருக்கும் சொல்லவும் முடியாது.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் தலைகீழாக மாற்றி அமைக்கப்படும் என்று பரவலான ஒரு நம்பிக்கை மக்களிடத்தில் இருப்பதால் இந்தத் தேர்தல் தொடர்பான அவதானம் மிகைப்பட்டதாக இருக்கின்றது. எல்லவற்றுக்கும் மேலாக பிராந்தியத்தில் அரசியல் சமநிலையை இது மாற்றி விடும் என்று அச்சம் பிராந்தியத்தில் இருக்கின்ற நாடுகளுக்கும் சர்வதேச அரசியல் தலைமைத்துவம் கொடுக்கின்ற நாடுகளுக்கும் இருக்கின்றது.
இதனால் 2024 ஜனாதிபதித் தேர்தல் உலக அரசியல் மீதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ஆனால் கடந்த காலங்களில் சம்பிரதாய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மேலோங்கி இருந்ததால் அது இந்தளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் இன்று நிலமை வேறு. சர்வதேச அரசியல் ஆதிக்கத்திலும் இன்று நிறையவே மாற்றங்கள் நடந்திருக்கின்றது.
அமெரிக்க இந்தியா சீனா ரஸ்யா போன்ற நாடுகள் நமது 2024 ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உச்ச அவதானத்தில் இருக்கின்றன. இதனால்தான் இன்று சில அரசியல் கட்சிகள் மீது சில நாடுகள் அலுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் இப்போது பகிரங்கமாக பேசப்பட்டு வருகின்றது. நாம் குறிப்பிடுகின்ற இந்த விடயங்களை பெரும்பலான மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அது அவர்களுக்கு அவசியமும் இல்லை. இது சர்வதே பிராந்திய அரசியல் விவகாரம் தொடர்பான விடயம்.
மேற்சொன்ன காரணங்களினால் இந்த ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்களின் தாய் என்று நாம் உச்சரிக்கின்றோம். அடுத்து தேர்தல் வெற்றிக்கும் பின்னர் நாட்டில் பாரிய அதிரடியான மாற்றங்களுக்கு இடமிருக்கின்றது. என்ற வகையிலும் இது முக்கியமானது. மேலும் 2024 ஜனாதிபதித் தேர்தல் வடக்கிலும் தெற்கிலும் தனித்தனி ஜனாதிபதித் தேர்தல் போன்ற ஒரு நிலையும் இதில் இருக்கின்றது.
கார்டியன் நியூஸ் செய்திக் குறிப்பொன்றில் வடக்குக் கிழக்கு மக்களின் ஜனாதிபதி அரியநேந்திரன்தான் என்று சொல்லப் பட்டிருக்கின்றது. அப்படி அமையுமாக இருந்தால் இது தெற்குக்கும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கு சொல்கின்ற ஒரு கனதியான செய்தியாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.
இந்தத் தேர்தலின் வரும் முடிவுகளைத் தொடர்ந்து யார் அதிகாரத்துக்கு வந்தாலும் உள்நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என்று மக்களிடத்தில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதனை ஒருதரப்பு பகிரங்கமாக பேசிவருகின்றது. இதனால் ஏனைய முக்கிய வேட்பாளர்களும் தாமும் அதிகாரத்துக்கு வந்தால் அந்த மாற்றங்களைச் செய்வதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறுதி கூறி வருகின்றார்கள். இது ஒரு ஆரோக்கியமான மாற்றம் என்றாலும் அதன் நடைமுறையைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ ஆதிகாரத்துக்கு வருகின்றவர்கள் தயாராக இருக்கின்றார்கள். எனவே இந்த 2024 தேர்தலில் வழங்கப்படுக்கின்ற புள்ளடி ஒரு புரட்சிகரமான மாற்றத்துக்கு வழங்கப்படுகின்ற அங்கிகாரமாகவும் இருக்கும். எனவே இது தேர்ல்களின் தாய் என்பதுடன் ஒரு புரட்சிகர மாற்றத்துக்கான நேரமாகவும் இருக்கின்றது.
இந்தத் தேர்தலில் முப்பத்து ஒன்பது பேரின் நாமங்கள் வேட்பாளர் பட்டியலில் இருந்தாலும் ஒரு ஐந்து பேர்தான் அதில் கனதியானவர்கள். அதிலும் இரண்டு பேருக்கின்டையில்தான் நேரடிப் போட்டி நிலை. இதனால்தான் ஐம்பது சதவீத வாக்குகளும் இரண்டாம் மூன்றாம் தெரிவு வாக்குகள் பற்றிய கதைகள் பேசப்படுகின்றன.
முப்பத்து ஒன்பது பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தெரிவு வாக்குகளுக்கு முறைக்கு பாமர வாக்களர்கள் செல்வார்களாக இருந்தால் அது பரீசோதணை அரைக்குக் கொண்டு செல்லப்படுக்கின்ற எலியின் உயிர் போன்றதாக அமைந்து விடும். (வாக்காளர்கள் வாக்குச் சீட்டை வீணாக்கி விட வாயப்பு) எனவே அந்த முயற்சிகளை வாக்காளர்கள் தவிர்த்து வழக்கமான புள்ளடிக்கு போவதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்தக் கட்டுரையைப் படிக்கின்ற நமது வாக்காளர்களில் எத்தனை பேர் கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் தெரிவு இலக்கங்ளைப் பாவித்து வாக்களித்திருக்கின்றீர்கள் என்பதனை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் தேர்தலின் போக்கை சற்று சிந்தித்துப் பாருங்கள் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி ரணிலே சஜித்தால் இந்தத் தேர்தலில் அணுரவைத் தோற்கடிக்க முடியாது என்று பகிரங்கமாக மேடைகளில் பேசி வருகின்றார். அதே நேரம் ரணில் இந்த தேர்தலில் எந்த இடத்தில் இருக்கின்றார்? இந்த தேர்தல் முடிவுகள் நம்மைப் பொறுத்த வரை உள்ளங்கை நெல்லிக்காய் நிலையில்தான் இருக்கின்றது. ஆனால் நிச்சயமாக நமது நம்பிக்கையில் மற்றவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களது விருப்பங்களும் வெற்றி எதிர்பார்ப்புக்களும் இதற்கு மாற்மாக இருக்கலாம்.
வெற்றி வாய்ப்பு அச்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதி ரணில் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் 25000 ரூபாவால் அதிகரிக்கின்றேன் என்று கூற சஜீத் அதனை 27500 ரூபா என்று ஏலம் போடுவது போல மாறி மாறி உயர்த்திக் கொண்டிருக்கின்றார். இது எதனைக் கட்டுகிகன்றது. நாட்டின் பொருளாதாரம் சம்பளத்தை அப்படி அள்ளி கொடுக்கின்ற நிலையிலா இன்று இருக்கின்றது என்பதனை பொது மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
உங்களுக்கு நன்றாக நினைவில் இருக்க வேண்டும் இந்த அரசின் இருக்கும் பொருளாதார விற்பண்ணர் பந்துல குணவர்தன தொழிலாளர் கடந்த வரவு செலவுத் திட்ட்ததில் சம்பள அதிகரிக்க வேண்டும் என்று கேட்ட போது, ஐந்து சதவீதமேனும் அப்படிச் சம்பளம் அதிகாரிக்க வாய்ப்பே இல்லை என்றார். ஆனால் அதிரடியாக ஜனாதிபதி ரணில் தேர்தல் ஆதாயம் கருதி பத்தாயிரம் சம்பள அதிகரிப்பு என்று 10000ம் அள்ளிக் கொடுத்தார். அது எப்படி?
இது முற்றிலும் அரசியல் நலன் கருதிய ஒரு தீர்மானம். பில்லியன் கணக்கில் கொடுக்க வேண்டி வெளி நாட்டுக் கடன்களைக் கொடுக்காமல் இருப்பதால்தான் இந்த சம்பள அதிகாரிப்பை வழங்க முடிந்தது. ஆனால் எதிர் வருகின்ற நாட்களில் அதனை வழங்கும் போதுதான் நமது பொருளாதார அவலம் தெரியவரும்-மக்களுக்கு உணரக் கூடியதாக இருக்கும்.
எப்படியும் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆகவேண்டும் என்ற வெறியில் இருப்போர், ஒருவர் ஒரு தொகை சம்பள அதிகரிப்புப் பற்றி சொல்லும் போது ரணிலும் சஜித்தும் ஏலத்தில் பொருட்களை விற்பது போல இந்த சம்பள அதிகரிப்புப் பற்றி போட்டி போட்டுக் கொண்டு இலக்கங்களை கூட்டிக் கொண்டு போகின்றார்கள். இது இந்த நாட்டில் வாழ்கின்ற இளந்தலை முறையினரின் களத்தில் கத்தி வைக்கின்ற ஒரு காரியம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வடக்கிலும் தெற்கிலும்
ஜனாதிபதித் தேர்தல்!
இந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு நாட்டில் நடக்கின்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல் போன்ற ஒரு உணர்வுவை நமக்கு ஏற்படுத்தி இருகின்றது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் இதனை தமது அரசியல் உணர்வுகளுடன் பொருத்திப் பார்க்கின்றனர். அந்த வகையில் தமது வேட்பாளர் அரசியநேந்திரன் தமிழர்களின் குறியீடு.
அப்படி இருந்தாலும் தெற்கு அரசியலுடன் நல்லுறவுடன் அரசியல் செய்ய எதிர்பார்க்கின்ற ஒரு தரப்பும் அங்கு இருக்கின்றது. பிழைப்புக்காக அரசியல் செய்கின்ற அந்தக் கூட்டமும் அங்கு மாற்றுக் கருத்துக்களுடன் பொது வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டில் பரப்புரையில் இருக்கின்றார்கள்.
இந்த இருதரப்பினருக்கும் இடையில் நடக்கின்ற பலப் பரீட்சை இன ரீதியான இழுபறி என்ற நிலையில் இருக்கின்றது. பொது வேட்பாளார் குறைந்த பட்சம் அறுபது சதவீத வாக்குகளுக்குக் குறையாத ஒரு வாக்குளைப் பெற வேண்டும். இந்த எண்ணிக்கையில் ஏற்படுகின்ற சரிவுகள் தமிழினத்துக்கான தலைகுனிவையே உலகிற்குக் காட்சிப்படுத்தும்.
அதே நேரம் அந்த எண்ணிக்கை எழுபத்தி ஐந்து சதவீதத்தை கடந்து நிற்குமாக இருந்தால் அது தமிழர்களுக்கு கிடைத்த இமாலய வெற்றியாக இருக்கும். இது உலகத்தின் கவணத்தை திசை திருப்புகின்ற ஒரு அரசியல் நிகழ்வாகவும் அது அமையும். அப்படி அமையுமாக இருந்தால் தமிழர்களை ஒரு கொடியின்கீழ் அணிதிரட்டுக்கின்ற முயற்சியின் ஓர் ஆரம்பப் புள்ளியாகவும் இது அமையும்.
நாம் இங்கு குறிப்பிடுகின்ற அரியநாயகத்தில் சிறப்பு வெற்றிதான் தெற்கு அரசியலில் தமிழருக்கான தீர்வை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய விடயமாகவும் இருக்கும். இந்தியா கூட இன்று ஈழத்தழிழர் விவகாரித்தில் இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் இருக்கின்றது. அது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் சிறப்பு வெற்றிதான் தீர்மானிக்கும்
எனவே ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்துவது போல தான் இந்தத் தேர்தல் இருக்கின்றது. அதனால்தான் ஒரு நாட்டில் நடக்கின்ற இரு ஜனாதிபதித் தேர்தல் என்று நாம் இதனைக் குறிப்பிடுகின்றோம். தெற்கில் தோற்றுப் போகும் வேட்பாளர்களுக்கு வடக்குக் கிழக்குத் தமிழர்கள் போடும் வாக்குகள் குப்பையில் போடப்படுக்கின்ற வாக்குகள் போலத்தான் அமையும். எனவே ஒரு இனத்தின் நலன்களுக்காக அதனைப் பாவிப்பது அதனை விடமேலான-உன்னதமான ஒர் தீர்மானமாக அமையலாம். ஆரிய நேந்திரன் வெற்றி பெற மாட்டார் என்று சொல்கின்ற சுமந்திரன் சாணக்கியன் போன்றவர்கள் தாம் ஆதரிக்கின்ற தெற்கு வேட்பாளர் நிச்சயம் வெற்றி பொறுவார் என்று எப்படி உறுதி கூற முடியும்?
தெற்கு அரசியல் பரப்புரைகளுடன் ஒப்பு நோக்குகின்ற போது வடக்கு கிழக்கில் வீரியம் குறைந்த தேர்தல் பரப்புரைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் அங்கு மக்கள் வாக்களிக்கும் விகிதாசாரயம் குறைந்து விடலாமோ என்ற ஓர் அச்சம் நமக்கு ஏற்படுகின்றது.
அதே நேரம் தெற்கு அரசியல்வாதிகள் வடக்கில் போய் தமது பிரச்சாரப் பணிகளை மேற்கொள்கின்ற போது அங்கும் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையான ஆதரவாலர்கள் கூடுவதைப் பார்க்க முடிகின்றது.
இன்னும் தேர்தல் பரைப்புரைகள் முடிய வெறும் பத்து நாட்கள் இருக்கின்ற நேரம் பொது வேட்பாளர் நிறையவே பார்க்க வேண்டிய தேர்தல் ஏற்பாடுகள் பாக்கியாக இருக்கின்றது என்பதனை பொது வேட்பாளர் தரப்பினருக்கு நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
நன்றி 08.09.2024 ஞாயிறு தினக்குரல்