ரணிலையும் சஜித்தையும் இணைக்கும் கடைசி முயற்சியில் அஜித் தேவால்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் இறுதி முயற்சிகளில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஈடுபட்டார் என வெளியாகும் தகவல்களை இராஜதந்திர வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
இருவருக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி இணைந்து போட்டியிடச் செய்வதற்கான இறுதி முயற்சிகளிற்காகவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விஜயம் மேற்கொண்டார் என தெரிவிப்பதை இந்திய தூதரகத்தின் உயர் வட்டாரங்கள் நிராகரித்துள்ளன என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் தலைவர்கள்
அவ்வாறான தேவை ஏற்பட்டிருந்தால் தோவல் புதுடில்லியிலிருந்தே குறிப்பிட்ட தலைவர்களை தொடர்பு கொண்டிருப்பார் அவர் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருக்க வேண்டியதில்லை என சிரேஸ்ட இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்தது.
அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை நேரடியாக சந்திக்க விரும்பியிருந்தால் ஊடகங்களிற்கு தெரியாமல் சந்தித்திருக்கலாம், கடந்த காலங்களில் அவர் அவ்வாறு செயற்பட்டுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் தொடர்பில் இந்தியாவின் விருப்பங்களை திணிப்பதற்காகவே தோவல் இலங்கையின் அரசியல் தலைவர்களை சந்தித்தார் என தெரிவிப்பது ஆதாரமற்ற விடயம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் என்னதான் கதைகளைச் சொன்னாலும் தேவால் அணுரவுக்கான வாய்ப்புத் தொடர்பாக ரணிலையும் சஜித்தையும் தெளிவுபடுத்தி இருக்கின்றார். ஆனால் இணங்கிப் போவதில் ரணில் தயாராக இருந்தாலும் அதனை சஜித் நிராகரிக்கின்றார் என்றும் அரசியல் வட்டாங்கள் கூறுகின்றன.