-நஜீப்-
ரணில் ராஜபக்ஸாக்கள் புரிதுணர்வு!
ஜனாதிபதித் வேட்பாளர் தொடர்பில் வேட்பு மனு அறிவித்தல் வெளியாகி இருக்கின்ற இந்த நேரத்தில் ரணில் மற்றும் ராஜபக்ஸாக்கள் தரப்பினர் ஒரு புரிந்துணர் இலக்கை நெருங்கி விட்டார்கள் என்று நமக்கு அவதானிக்க முடிகின்றது. ரணிலா தமியா என்ற இழுபறி தற்போது மென்மையாகி விட்டதாக எண்ணத் தோன்றுகின்றது.
ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்பதாக இருந்தால் மொட்டுக் கட்சிக்கு பிரதமர் பதவி வேண்டும். மேலும் தமக்கு கிடைக்கின்ற அமைச்சர்களின் எண்ணிக்கையையும் ரணில் முன்கூட்டி அறிவிப்பு செய்ய வேண்டும் என்பதும் பிரதான நிபந்தனைகளாக இருக்கின்றன.
ராஜபக்ஸாக்களின் சமயலறையிலிருந்து ஒரு இராஜங்க அமைச்சர் ஊடகா இதற்கான தூது விடப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல். அப்போ தம்மி தெருவில்தான். ஜனாதிபதி ரணில் வேட்பாளர் என்றால் நாமல் பிரதமர் வேட்பாளர் என்றுதான் கதை முடியப் போகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் ஓரிரு நாட்கள் வரை.
சுவரில் எறிந்த பந்தான மன்னிப்பு!
சில தினங்களுக்கு முன்னர் கொவிட் மரணங்களில் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நெருப்பில் போட்டு எரித்தது தவறு என்று முடிவெடுத்திருக்கின்ற அமைச்சவை, இதற்காக முஸ்லிம்களிடத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கின்றது. அமைச்சரவை சார்பில் இதற்கான அறிவிப்பை செய்தவர் பந்துல குணவர்தன.
பந்துல பேச்சுக்கு இந்த நாட்டில் மக்கள் எந்தளவுக்கு மதிப்பளிக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். 2500 ரூபாவில் வாழ முடியும் என்று உபதேசம் பண்ணிய பொருளாதார விற்பண்ணர் அல்லவா இந்த பந்து.
ஆனால் அவரது இந்த அரசாங்கத்தின் மன்னிப்பு நாடகம் ஒரு தேர்தல் பரப்புரை. இதனை செய்து விட்டு முஸ்லிம்களின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் எதிர்பார்க்கின்றார் போலும்.! ஆனால் இந்த அரசாங்கத்தின் மன்னிப்பை முஸ்லிம் சமூகத்தினர் ஒரு போதும் ஏற்கத் தயாராக இல்லை. அது சுவரில் எறிந்த பந்து போலாகி விட்டது.
ஆனால் அதனை வைத்து ஒரு கூட்டம் பரப்புரைகளை இப்போது துவங்கி விட்டது என்பதை மட்டும் இப்போது பார்க்க முடிகின்றது.
ஞானசாரர் திருந்தி விட்டாரா!
ஞானசாரர் விடுதலை தொடர்பில் முஸ்லிம்களின் அனுமதி கேட்டு கூட்டம் போட்ட செய்திகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது. அதே நேரம் தான் இது தொடர்பாக ரிசாட், முஜீபர், சாலி அகியோரைச் சந்தித்தாக கூறுகின்ற சமூக செயல்பாட்டாளர் ஓசல, அவர்கள் இது விடயத்தில் தன்னிடத்தில் சாதகமாகப் பேசியதாக ஒரு ஊடகச் சந்திப்பில் கூறி இருந்தார்.
அங்கு ஞானசார் திருந்தி விட்டார். அதனை நானும் பார்த்தேன். தவறுகளைப் புரிந்தவர்கள் உணர்ந்து மன்னிப்புக் கேட்டால் கொடுப்பது மனித நேயமிக்கவர்கள் பண்பு என்றெல்லாம் ஓசல கூறி இருந்தார். விடுதலைக்கு பின்னர் ஞானம் ஊடகங்களில் பேசி இருக்கின்ற வார்த்தைகளில் அவர் தனது தவறை உணர்ந்திருப்பதை ஏதாவது ஓரிடத்தில் பார்க்க முடிகின்றதா என்று நாம் ஓசலவிடத்தில் கேட்கின்றோம்.
அதே ஊடகச் சந்திப்பில் கருத்து கூறிய தரிந்து உடுவரகே என்ற ஜனரஞ்சக ஊடகவியலாளர் ஞானசாரர் விவகாரத்தில் நம்பிக்கை அற்றவராக அங்கு கருத்து வெளியிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் கலைக்கப்படுன்றது!
இந்தச் செய்திக் குறிப்பை நாம் தயாரித்து அச்சுக்கு அனுப்பி வைக்கின்ற நேரம் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்தினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அதில் ஆளும் தரப்புக்கு ஒரு சின்ன வாய்ப்பும் இருக்கின்றது என்று நாமும் நம்புகின்றோம்.
இதனால் மொட்டுக்கு மேலும் சில ஆசனங்களை அதிகம் பெற்றுக் கொள்ள முடியும் என்பது எமது கருத்து. ஆனாலும் அவர்களுக்கு களத்தில் மூன்றாம் இடம்தான் கிடைக்கும். அப்போது சஜித்தும் ராஜபக்ஸாக்களும் இணைந்து ஒரு அரசை அமைக்க முடியும்.
எப்படியும் முதலிடத்தில் அணுர தரப்புக்குத்தான் என்பது நமது எதிர்பார்ப்பும். இதனை நாம் பலமுறை கூறி இருக்கின்றோம். அப்படியானால் சஜித்-ராஜபக்ஸாக்கள் அடுத்த அரசை அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியலில் நண்பர்களும் இல்லை பகைவரும் இல்லை என்பதை ரணில்-ராஜபக்ஸாக்கள் கடந்த காலங்களில் நிரூபித்துத்தானே இருக்கின்றார்கள்.
குரங்கையும் விஞ்சும் பல்டிகள்!
தவளைப் பாய்ச்சல்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அதனை விட மிகவும் விரைவாகவும் வேகமாகவும் குரங்குகள் பல்டிகள் போடுவதையும் மரத்துக்கு மரம் தாவுவதையும் கூட நாம் பார்த்திருக்கின்றோம். அதனையும் விஞ்சுகின்ற பல்டிகளை விரைவாக மக்கள் நமது அரசியல் அரங்குகளில் பார்க்க இருக்கின்றார்கள்.
இந்த பல்டிகள் பணத்துக்காவும் தமது எதிர்கால அரசியல் இருப்புக்காகவும் கூட நடக்கின்றன. சஜித் அணிக்கு குறிப்பிட்ட ஒரு தரப்பினர் தாவ இருக்கின்றார்கள். இதனால் தேர்தலுக்கு பின்னர் அங்கு உட்கட்சி பூசலுக்கும் அதிக இடமிருக்கின்றது. இது தவிர அணுராவின் என்பிபி.
தரப்புக்கும் நிறையப்போர் தாவ இருக்கின்றார்கள். இவர்களின் பெரும்பாலானவர்கள் முன்பு ஆளும் தரப்பில் உயர் பதவிகளில் இருந்த நல்ல நிருவாகிகள் – அதிகாரிகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: 28.07.2024 ஞாயிறு தினக்குரல்