-யூசுப் என் யூனுஸ்-
புடின் கூட சந்தேகிக்கின்றார்!
துருக்கி கை கொடுத்தது!
அமெரிக்கா உதவ மறுத்தது!
இப்ராஹீம் ரைசி பற்றி பேசும் போது அவரது மரணம் அல்லது கொலையுடன் சர்வதேச அரசியல், பலஸ்தீனப் பிரச்சனை, முஸ்லிம்கள் மத்தியில் வளர்க்கப்பட்டிருக்கின்ற சீயா-சுன்னி பேதம் முஸ்லிம் உலக வல்லாதிக்கம் என்பவை பற்றியும் சற்றுப் பார்க்க வேண்டும். இப்ராஹிம் ரைசி போன்ற ஒரு தலைவர் முஸ்லிம் உலகில் நிலைப்பதற்கு உள்ளேயும் வெளியேயும் நிறையவே எதிரிகள் இருக்கின்றார்கள். இதில் பகிரங்கமாக அல்லது வெளிப்படையாகத் தெரிகின்ற எதிரிகள்தான் இஸ்ரேலும் அமெரிக்காவும். அந்த விவகாரங்களையும் சேர்த்துத் இது பற்றி ஆராய வேண்டி இருக்கின்றது.
எல்லாம் தெரிந்தவன் இறைவன்-கடவுள் அதனால் அவனின்றி அணுவும் அசையாது என்பர்கள். இது கடவுளின் வல்லமையை உலகிற்கு பறை சாற்றுகின்ற ஓர் வார்த்தை. எனவே கடவுள் அறிந்திராத எந்த ஒரு விடயமும் இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது. ஆனால் நாம் ஈரானிய அதிபர் பேராசிரியர் இப்பராஹீம் ரைசி மரணம் தொடர்பாக இங்கு எழுதுகின்ற கட்டுரைக்கு கொடுத்திருக்கின்ற தலைப்பு கடவுள் வல்லமையைக்கூட மட்டம் தட்டுகின்ற ஒரு தலைப்பாகத்தான் இருக்க வேண்டும். இப்போது விவகாரத்தை விளக்கமாகப் பார்ப்போம்.
இப்ராஹிம் ரைசியின் மரணம் இயற்கையாக நடைபெற்று ஒரு விபத்தாக இருந்தாலும் அதனை அப்படி நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை என்பதுதான் யதார்த்த நிலையாக இருந்து கொண்டிருக்கின்றது. நாம் கொடுத்திருக்கின்ற தலைப்புக்கு அமைவாக இறைவனே நேரடியாக வந்து இல்லை…இல்லை … இது விபத்துத்தான் நானே நேரடியாகப் பார்த்தேன் என்று சொன்னாலும் அதனை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அசர்பைஜானில் நடந்த ஈரானிய சுரங்க தொழிநுட்ப திட்டமொன்றை திறந்து வைத்த விட்டு நாட்டுக்குத் திரும்புகின்ற போதே அவர் இந்த ஹெலி விபத்தில் சிக்கிக் கொல்லப்பட்டார்.! இதே போன்ற ஒரு திறப்பு விழா ஒன்றுக்கு (உமா ஓயா) அவர் நமது நாட்டுக்கு வந்திருந்தார். ஈரான்-இஸ்ரேல் நெருக்கடி உச்ச கட்டத்தில் இருந்த ஒரு பின்னணியில் அவர் இங்கு வந்தது கூட அன்று ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. அது ஆரோக்கியமான ஒரு பயணமாக அன்று கூட ஈரான் நட்பு வட்டாரங்களினால் பார்க்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
1979 ஈரான் புரட்சி வரை உலக வரை படத்தில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படாத ஒரு நாடாகத்தான் ஈரான் இருந்து வந்தது. என்றாலும் பிராந்தியத்தில் அன்று ஈரான் ஒரு குட்டி அமெரிக்காவாகத்தான் தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. மேற்கத்தியத்துடன் நெருக்க உறவு. கலாச்சாரப் பாரம்பரியங்களில் ஈரானிய ஆண்களும் பெண்களும் பொதுவாக அமெரிக்கர்களைப் போல்தான் அங்கு வாழ்ந்து வந்தார்கள். 1950களில் அமெரிக்கா உதவியுடன் அதிகாரத்துக்கு வந்த ஈரானிய ரீசா பாலஹ்வி அரச குடும்பம் அதிகாரத்தில் இருந்து விரடியக்கப்படும் வரை மேற்கத்திய ஆட்சியாளர்கள் போல் வாழ்ந்து நாட்டு மக்களையும் அந்த வழியிலே நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்தப் பின்னணியில் ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக அயாத்துல்லாக்கள் என்ற சமயக் குழு மக்களை சிந்தனை ரீதியாக நெறிப்படுத்தி நாட்டில் வரலாறு காணாத ஒரு புரட்சியை உண்டு பண்ணினார்கள். இந்தப் புரட்சிக்கு அயாத்துல்லா ரூகுல்லா கோமெய்னி என்பவர் பிரான்சில் வாழ்ந்து கொண்டு அதற்குத் தலைமை தாங்கினார். ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றார் என்பதற்காக அவரது குடும்பத்தில் நூற்றுக் கணக்கானவர்களையும் பொது மக்கள் தரப்பில் பல ஆயிரம் பேர்வரை அரச படைகளின் கொல்லப்பட்டனர். புரட்சியின் இறுதி நாட்களில் இதே படையினர் புரட்சியாளர்களுடன் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்ட இந்த சிந்தனையை தனக்கு எதிராக உலகில் தலையெடுக்கின்ற ஒரு ஆபத்தான சக்தி என்பதை அமெரிக்கா அன்றே தெரிந்து வைத்திருந்தது. இதனால் ஈரானிய இஸ்லாமிப் புரட்சிக்கு எதிரான அது பெரும் பொருளாதார நிதிக் கட்டுப்பாடுகளை உலக அரங்கில் தனது செல்வாக்கை பாவித்து விதித்தது. அந்த ஒரு நேரத்தில்தான் ஈரானில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை டெஹ்ரான் பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டு ஈரான் மீது விதிக்கபட்டிருக்கின்ற பொருளாதாரக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்த போராட்டமொன்று நடாத்திக் கொண்டிருந்தனர்.
அன்று அதற்குப் பணிந்த அமெரிக்க நிருவாகம் ஈரானுக்குச் சொந்தமான பெரும் தொகையான தங்கத்தை பதினாறு (16) விமானங்களில் ஏற்றி ஈரானிடம் கையளித்து (54) ஐம்பத்தி நாழு தமது பணயக் கைதிகளை மீட்டுக் கொண்டது. இன்று வரை உலக வரலாற்றில் இப்படி மிகப் பெரிய ஒரு தங்கப் பறிமாற்று நடைபெற்றது முதல் தடவையாக இன்றுவரை கருதப்படுகின்றது. ரைசி மரணத்துக்கும் இதற்கும் என்ன முடிச்சு ஏனா ஒருவர் யோசிக்கலாம். துவக்கமே அங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது. அதனால்தான் வரலாற்றை சற்று பேசுகின்றோம்.
தனக்கு எதிராக என்தான் பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் கொடுத்தாலும் ஈரான் ஆட்சியாளர்கள் அதற்கு இன்று வரை அடிபணியவில்லை. இதனால் அமெரிக்க-ஈரான் முறுகலும் முடிவில்லாது தொடர்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அணு விவகாரத்தில் ஈரான் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றது. தமது உச்ச தலைவர் அயத்துல்லா கமெய்னி கட்டளையிட்டால் ஒரு மாத காலத்துக்குல் எம்மால் அதனை தயரித்து விடமுடியும் என்று அவர்கள் கூறி இருந்தார்கள். ஈரான் கைகளில் அணு குண்டுகளை கிடைப்பதை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு போதும் விரும்பாது ஏற்றுக் கொள்ள மாட்டாது. ரைசி பதவியேற்றது முதல் இந்தத் திட்டத்தில் அவர் முனைப்புக் காட்டி வந்திருந்தார் என்பதும் உலகம் அறிந்ததே.
1980களில் ரிச்சர்ட் டி செய்சா (படுகொலை செய்யப்பட்ட) அன்று எழுத்தி இருந்த ஒரு கட்டுரையில் இருபத்தி ஓராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவுக்குத் தலைவலி கொடுக்கின்ற உலகின் மிகப் பெரிய நாடாக ஈரான் மாறும் என்று ஓரிடத்தி எழுதி இருந்து இன்று நமக்கு நினைவிற்கு வருகின்றது. அந்த நாட்களில் இப்படி எங்கே நடக்கப் போகின்றது என்று நாம் எண்ணி இருந்தோம்.
இப்படி ஈரான் அரசுக்கு எதிராக பல சதிகள் தெந்தரவுகள் செய்யப்பட்டு வந்தும் இன்று வரை அது உலக அரங்கில் மண்டியிடவில்லை. சில சமயங்களில் ஈரான் நாட்ளுமன்றமே சதிகாரர்களினால் குண்டு வைத்து தகர்க்கபட்டு நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் -தலைவர்களும் கொல்லப்பட்ட நிகழ்வுகளும் அங்கு நடந்து இருக்கின்றன. இது தவிர டசன் கணக்கான ஈரானிய விஞ்ஞானிகள் சிந்தனையாளர்களை சிஐஏ மற்றும் மெசாட் உவளிகள் அல்லது அவர்களின் இஸ்லாமிய முகவர்களினால் படுகொலை செய்ப்பட்டிருக்கின்றார்கள். இது அனைவரும் அறிந்த செய்திகள்தான்.
இதில் உலகப் புகழ் பெற்ற ஈரானிய இராணுவத் தளபதி கசீம் சுல்லைமானி அணு விஞ்ஞானி ஹூசைன் பக்ரிசாடா போன்றோர் கொல்லபட்டது ஈரானுக்கு மிகப் பெரிய துயரமான நிகழ்வுகளாகவே பார்க்கப்படுகின்றது. இத்தனை அழிவுகளுக்கு-இழப்புக்களுக்கு மத்தியிலும் ஈரான் இராணுவ பொருளாதார தொழிநுட்ப ரீதியில் தன்னை வெகுவாக வளர்த்தக் கொண்டுதான் வந்திருக்கின்றது. இது அமெரிக்க தலைமையிலான மேற்றுகு நாடுகளுக்கு கடும் வலியையும் கோபத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்கள் மத்தியில் சீயா-சுன்னி பேதங்களை வளர்த்து அவர்கள் மத்தியில் குரோதங்களiயும் சண்டை சச்சரவுகளையும் மூட்டிவிடுவதற்கு இஸ்ரோலும் அமெரிக்காவும் பல பில்லியன் டொலர்களை வருடாந்தம் செலவு செய்து கொண்டிருக்கின்றன. இது தமது அரசியல் இருப்புக்ககுப் பாதுகாப்பு என்று கருதும் அரபுத் தலைவர்கள் தாமும் இந்த சீயா-சுன்னி பிளவுக்கு ஒத்தழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது நடந்து கொண்டிருக்கின்ற ஈரான் இஸ்ரேல் நெருக்கடிகளின் போது ஜோர்டான் சவுதி பஹ்ரைன் போன்ற அரபு நாட்டு மன்னர்கள் இஸ்ரேலுக்கு நேரடியாகவும் மறைமுகவாகம் ஆதரவுகளை வழங்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தே. ஆனால் அங்குள்ள மக்கள் உணர்வுகள் இதற்கு மாற்றமாக இருந்து வருகின்றது. இது போன்ற காரணங்களினால் என்றுமே ஈரானிய தலைவர்களுக்கு அச்சுருத்தால் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.
இந்த சீயா-சுன்னி பேதங்கள் எந்தளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விதைக்கப்படடிருக்கின்றது என்றால் நமது நாட்டில் இருக்கின்ற சிலர் கூட ஈரானை விட இஸ்ரேலுக்காக பேசுகின்றவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்தளவுக்கு இங்கு கூட முஸ்லிம் மக்கள் மூளைச்சை சலவை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதற்கென்றே சில அரபு கல்லூரிகளில் பாடமும் கற்றுக் கொடுக்கப்படுகினிறது.
ஆனால் உலகில் மிகவும் செல்வாக்கான இஸ்லாமியப் பேரரிஞரான யூசுப் கர்ளாவியிடம் இந்த சீயா-சுன்னி பேதங்கள் பற்றி கேள்வி எழுப்பிய போது சீயாக்களை வழிகெட்டவர்கள் என்று கூறி என்னை ஒரு வழிகெட்ட மனிதனாக இறைவன் சன்னிதானத்தில் நான் பெயர் வாங்கிக் கொள்ள தயாராக இல்லை என்று அப்போது கூறி இருந்தார். ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்குப் பின்னர்தான் இந்த சீயா-சுன்னி குரோத சிந்தனைகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இது ஏன் என்று புரிந்து கொள்ளக் கூடியதே. 1979 க்கு முன்னர் இப்படியான பிளவுகளை பெரிதாக அவதானிக்க முடியவில்லை. எனவே இந்த பரப்புரைகளின் பின்னால் அரபு-சியோனிச காசு இருக்கின்றது. சீயா-சுன்னி பிளவை வைத்து முஸ்லிம்கள் மத்தியில் குரோதங்களை வளர்ப்பது இஸ்ரேலுக்கு ஒரு பாதுகாகாப்பு ஏற்பாடுதான்.
மத்திய கிழக்கில் தனது செல்லப் பிள்ளையான இஸ்ரோலின் இருப்புக்கு ஈரான் பெரும் ஆபத்து என்பது அமெரிக்காவுக்கு தெரியும். பலஸ்தீனப் பிரச்சினைகள் ஈரானுடன் நேரடியாகத் தொடர்பில்லாத முற்றிலும் அரபுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரம். இருந்தாலும் வீதியில் போகும் பாம்பை மடியில் போட்டுக் கொண்டது போல 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் விவகாரத்தை ஈரான் தன்னுடைய பிரச்சனையாக எடுத்துக் கொண்டது. இன்று அதற்கு பக்க துணையாக நின்று செயலாற்றிக் வருகின்றது.
இதனால் இஸ்ரேலைச் சுற்றி அது தனது ஆயுதக் குழுக்களை வைத்து இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் உண்மையே. இஸ்ரேலைச் சுற்றி இருக்கின்ற பலஸ்தீன அரபியக் குழுக்கள் அனைத்தும் இன்று ஈரானிய ஆதரவுக் குழுக்களாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. இது அரபுக்கள் மத்தியில் ஈரானுக்கு அண்மைக்காலமாக பெரும் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இதனால் தான் அண்மையில் பலஸ்தீனக் குழுக்கள் இஸ்ரேலுக்குல் புகுந்து அதிரடித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரம் பேர்வரை கொன்று குவித்து பலநூறு சிறைக் கைதிகளை பிடித்துக் கொண்டும் சென்றது. இது இப்ராஹீம் ரைசி அதிகாரத்தில் இருந்த போது நடந்த நிகழ்வு. இதனால் அவர் மீது இஸ்ரோல் கடும் கோபத்தில் இருந்தது.
அரபுத் தலைவர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டால் பலஸ்தீனப் பிரச்சினை என்பது இரண்டு மூன்று மணி நேரத்தில் தீர்க்கக் கூடிய ஒரு விவகாரம். ஆனால் அரபுத் தலைமைகளுக்கு அப்படி ஒரு எண்ணம் கனவில் கூட இல்லை. அவர்கள் கையாளாகாதவர்களாக இருக்கின்றார்கள். இதனால் இப்ராஹீம் ரைசி போன்ற ஒரு ஆளுமை மிக்க தலைவர் ஈரானில் இருப்பதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஜீரணிப்பதற்கு கஸ்டமாகத்தான் இருந்திருக்கும். அதனால் அவரை தீர்த்தக் கட்ட நேரம் பார்த்து அவர்கள் இருந்திருப்பார்கள்.
இன்று அனைத்து முஸ்லிம்களுக்கும் இப்ராஹீம் ரைசி மற்றும் ஈரான் மீதும் ஒரு நல்லெண்ணம் ஏற்பட்டிருக்கின்றது. ரைசி முஸ்லிம் இளசுகள் மத்தியில் இப்போது ஹீரோவாகி விட்டார். இதனால் சீயா-சுன்னி பேதம் கலைந்து முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கியம் வலுப்படவும் ரைசி இழப்பு துணை புரியக் கூடும். இப்ராஹீம் ரைசியுடன் கொல்லப்பட்டவர்களில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீரப்புல்லா ஹியன் மற்றும் பல அதிகாரிகள் அடங்கி இருந்தனர்.
இந்த இப்ராஹீம் ரைசி மிகவும் இளவயதில் மிக உயர்வான பதவிகள் பலவற்றை அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் மட்டத் தலைவராக இருந்த இந்த ரைசி தற்போதய ஈரானிய உச்ச தலைவர் பதவில் இருக்கின்ற அயாத்தல்லா கமெய்னிக்குப் பின்னர் அந்தப் பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கபட்டதும் குறிப்பிடத்தக்கது. தனது காலத்தில் ஈரானை இன்னும் பல படிகள் உயர்த்துவதற்கான திட்டங்னை அவர் வடிவமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரைசி பயணம் செய்த ஹெலி மிகவும் பழைமையானது அது 1960களில் கணடாவால் ஈரானுக்கு கையளிக்கபட்டது. அதனால் அதில் தொழிநுட்பங்கள் குறைவு என்று எல்லாம் இப்போது விமர்சனங்கள். இன்று தொழிநுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்திருக்கின்ற ஈரானுக்கு இதனை விட வசதியான ஒரு ஹெலியை ஜனாதிபதிக்கு வழங்கி இருக்க முடியாத? அல்லது தனது நட்பு நாடுகளான ரஸ்யா அல்லது சீனாவிடம் இருந்து பெற்றுக் கொடுத்திருக்க முடியாதா என்று நாம் திருப்பிக் கேட்கின்றோம். ரிவர்ஸ் இன்ஜினியரிங் தொழிநுட்பத்தில் ஈஈரானியர்கள் விண்ணர்களாக இருக்கின்றார்கள். இராணுவத் தளபதி காசிம் சுலைமானி மற்றும் அணு விஞ்ஞானி ஹுசைன் பக்ரீஷடா போன்ற முக்கிய புள்ளிகளை ஈரான் எப்படி பறி கொடுத்தது? அந்தப் பாணியில்தான் இது நடந்திருக்கின்றது.
அத்துடன் பாதுகாப்புக்காக மேலும் இரு ஹெலிகள் போய் இருக்கின்றன. பாதுகாப்புக்காக போகின்ற அந்த ஹெலிகள் ஜனாதிபதி பயணிக்கின்ற ஹெலிக்கு நெருக்கமாகத் தான் போய் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒரிரு நிமிடங்களுக்குள் விபத்து நடந்த இடத்தில் அவை தரை இறங்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தும் விபத்து நடந்த இடத்தை கண்டறிய ஏறக்குறைய ஒரு நாளே போய் இருக்கின்றது.? ரைசி சென்ற ஹெலி லேசர் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகின்றது. ஈரான் ஜனாதிபதி போன ஹெலி காணமால் போனதாக சொல்லப்பட்ட நேரம் இந்தக் கட்டுரையாளனுக்கு அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும் வந்தது என்பதனையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.
ஹெலி விபத்து அல்லது மற்றுமொரு விபத்தில் இப்ராஹீம் ரைசிக்கு ஆபத்து தொடர்ந்து கொண்டுதான் வந்திருக்கின்றது. எதிரிகள் பக்கத்தில் அவர்களுக்கும் சில நியாயங்கள் இருக்கின்றன. இதன் பின்னர் கூட ஈரானியத் தலைவர்களுக்கு செயல்பாட்டாளர்களக்கு இப்படியான ஆபத்துக்கள் இருந்து கொண்டுதான் வரும். இதனை அவர்களும் அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள்.
அடிப்படைவாத சிந்தனையாளர்கள் இப்படியான இழப்புக்களைக் கண்டு கலக்கமே கவலையே கொள்ள மாட்டார்கள். மறு புறத்தில் தமது இருப்புக்கு இப்படியான தலைவர்களை நாம் தீர்த்துக் கட்டாமல் வேறு வழியில்லை என்ற நியதின்படி இஸ்ரேலும் ஏட்டிக்குப் போட்டியாக ஒன்றை செய்து கொண்டு இருக்கும்.
ரஸ்யா அதிபர் விலாடீமீர் புட்டின் கூட ரைசி மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். விபத்து நடந்ததும் ஈரான் அமரிக்காவிடமும் உதவி கோரி இருக்கின்றது. ஆனால் அவர்கள் அதனை நிராகரித்து விட்டிருக்கின்றனர். துருக்கிய உதவியே ஈரானுக்கு ரைசி விவகாரத்தில் பெரும் உதவி புரிந்திருக்கின்றது.
இப்றாஹிம் ரைசி மரணத்தை ஈரானியர்கள் கொண்டாடியதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அங்கு அப்படி நடந்ததற்கான ஆதராங்கள் இல்லை. வெளிநாடுகளிலுள்ள ஈரான் விரோதிகள் சில இடங்களில் தமது சந்தோசத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். அவர்கள் ரைசியை டெஹ்ரான் கசாப்புக் கடைக்காரன் என்று திட்டி இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் நீதித்துறையில் அவர் வழங்கிய தீர்ப்புக்கள் என்று சொல்லப்படுகின்றது.
இதற்கிடையில் புதிய ஈரான் அதிபர் நியமனத்தக்கு அங்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஈரான் ஆன்மீகத் தலைவர் அலி கொமெய்னியின் இரண்டாவது மகன் முஸ்தபா என்பவர் இப்ராஹீம் ரைசி இடத்திற்கு வரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் யார் அதிபரானாலும் ஈரான் ஜனாதிபதி என்பது அதிகார மட்டத்தில் இரணாடாம் நிலைத் தலைவர்தான். அதற்கு மேல் ஒரு அதிகார அமைப்பு ஈரான் அரசியலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஏட்டிக்குப் போட்டி நிலை, எப்போதோ ஒரு நாள் இந்த உலகை ஒரு மா பெரும் சிக்கலில் மாட்டி விட நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது. நமது கணக்குப்படி தனது இராணுவத் தளபதி காஷpம் சுலைமானி அணுவிஞ்ஞானி ஹீசைன் பக்ரீஷடா ஆகியோர் படு கொலைக்குக் கூட ஈரான் தனது தரப்பில் இன்னும் சரியான பதிலைக் கொடுக்கவில்லை. இப்படியான ஒரு நிலையில்தான் அந்தப் பட்டியலில் இப்ராஹீம் ரைசியின் கணக்கும் பதிவில் வருகின்றது. எனவே பிராந்தியத்தில் வன்மமும் வைராக்கியமும் இனி இல்லை என்ற அளவில் உச்சம் தொட்டு நிற்க்கின்றது. இது உலக அமைதிக்கு பெரும் ஆபத்தான ஒன்றே.