-நஜீப்-
தமிழர்கள் தலைவிதி இதுதான்!
இன்னும் ஓரிரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் திணைக்களம் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. தெற்கில் டசன் கணக்கானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்ப்பில் தமது விருப்பத்தை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள்.
மிகப் பிந்திய தகவல்களின் படி நீதி அமைச்சர் விஜேதாசாவுக்கும் அப்படியான ஆசை-அழைப்பு கிடைத்திருப்பதாக கூறுகின்றார். இப்போதெல்லாம் மக்கள் அரசியல் கட்சிகள் மீது விசுவாசத்துடன் இல்லை. அவர்கள் தனி மனிதர்களில்தான் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்று மனிதன் தனக்குத் தானே ஒரு விளம்பரம்!
இதற்கிடையில் தமிழ் தரப்பினர் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தமது தன்னல அரசியல் இருப்புக் கருதி அவர்கள் யாரை பொது வேட்பாளராக நிறுத்தினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அதனால்தான் தேர்தல் பகிஸ்கரிப்பு என்ற ஒரு கருவை நாம் சில வாரங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தோம். இன விமோசன முடிவுகள் என்பதை விட தன்னல சிந்தனைதான் அவர்களுக்கு முக்கியமாக இருப்பதால், ஐக்கியமான ஒரு தீர்மானத்தக்கு இவர்கள் வராது அதற்கு நொண்டிக் காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதுதான் தமிழர் தலைவிதி.!
நன்றி: 21.04.2024 ஞாயிறு தினக்குரல்
பசிலுக்கும் நமக்கும் மூக்குடைவு!
ரணிலிடம் பசில் தோற்றுப் போன கதையைச் சொல்லும் முன்னர் இந்தக் குறிப்பை எழுதுகின்ற நாமும் தனிப்பட்ட ரீதியில் மூக்குடைபட்டுப் போன ஒரு விவகாரம்தான் இது. ஏறக்குறைய ஒரு வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் முதலில் பொதுத் தேர்தல்தான் என்பதனை சொல்லி வந்திருக்கின்றோம்.
ஆனால் நாம் இந்த விவகாரத்தில் தோற்றுப் போய்விட்டோம் என்பதனை இப்போது பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. காரணம் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதாக இருந்தால் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அதற்கான அறிவிப்பு வர வேண்டும். ஆனால் வாய்ப்பு மிகவும் கம்;மி. எனவேதான் நாமும் தோல்வியை இப்போது ஏற்றுக் கொள்கின்றோம்.
நாம் முதலில் வருவது பொதுத் தேர்தல்தான் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தற்கு முக்கிய காரணம், தற்போது அதிகாரத்தில் இருக்கின்றவர்களுக்கு முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் மிகப் பெரிய பாதிப்புக்களுக்கு இடமிருக்கின்றது.
அவர்கள் இந்தப் சேதாரத்தை ஒரு போதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் நாமும் இருந்ததால் எமது கணிப்பு அப்படித் தப்பாக அமைந்தது. ஆனால் பசில் ராஜபக்ஸ என்னதான் அலுத்தங்கள் கொடுத்தாலும் ரணில் விட்டுக் கொடுக்காததால் இப்போது ஜனாதிபதித் தேர்தல்.!
நன்றி: 21.04.2024 ஞாயிறு தினக்குரல்
பாலித கற்றுத் தரும் பாடம்!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவில் நமக்குக் கிடைத்த ஒரு சோகமான செய்தி, முன்னாள் பிரதி அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவப் பெருமாவின் அகால மரணம். மரணங்கள் எந்த ரூபத்திலும் வராலாம். ஆனால் சிலரது மரணங்கள் மக்கள் அதிர்ச்சியையும்-சோகத்தையும் சில மரணங்கள் அதற்கு மாற்றமான உணர்வுகளையும் தருகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரத்தில் இருக்கின்ற போது விபத்தில் கொல்லப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மரணத்தையும் இந்த பாலித தேவப்பெரும இழப்பையும் மக்கள் ஒரு முறை எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
மானிடத் துயரங்களின் போது துனைக்கு வந்த தேவப்பெரும, விபத்தில் சிக்குப்படுவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்னர்தான் தனது கல்லறையைத் தோட்டத்திலே கட்டி முடித்திருந்தார். அத்துடன் மரணத்தின் பின்னர் தனது உடல் அவசரமாக அடக்கம் செய்யப்பட வேண்டும், கல்லறைக்கு உடல் எடுத்துச் செல்லப்படும் போது பாடப்பட வேண்டிய ஒரு கீதத்தைக் கூட அவர் தயாரித்து வைத்திருந்தார்.
பெட்டிக்குச் செலவு செய்யும் பணத்தை ஏழை பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களுக்காக செலவு செய்யுமாறும் சொல்லி இருந்ததுடன். ஆதற்குத் தானே ஒரு சவப் பெட்டியையும் தயாரித்து வைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: 21.04.2024 ஞாயிறு தினக்குரல்
ஆளுநராக ஹாபீஸ் நியமனம்!
வருகின்ற தேர்தல்களை முன்னிட்டு தற்போது அதிகாரம் மிக்க பதவிகளில் பல மாற்றங்கள் நடக்க இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. அதன்படி முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மு.கா. நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதிகாரத்தில் இருந்த ஹாபீஸ் நசீருக்கு நிமல் லன்சாவின் கடுமையான அலுத்தம் காரணமாக வட மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் அவரை நியமிக்க இருக்கின்றார் என்று தெரிகின்றது.
ஹாபீஸ் நசீரிடம் இருக்கின்ற நுவாக் கட்சியை அவர் லன்சாவுக்கு கையளிக்க இருக்கின்றார் என்றும் தெரிகின்றது. அதே போன்று தற்போது தெற்கு ஆளுநராக இருக்கும் விலி கமகே இடத்துக்கு தற்போது வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கின்ற லக்ஸ்மன் யாப்பாவும் நியமிக்கப்பட இருக்கின்றார்கள்.
இது விடயத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேக்கர ஜனாதிபதி ரணிலைக் கட்டாயப்படுத்தி வருவதாகவும் தெரிகின்றது. இது தவிர மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பலருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் பசிலுக்கு உறுதி மொழி வழங்கி இருக்கின்றார். என்றும் அந்தத் தகவல்கள் மேலும் நமக்குத் தெரிவிக்கின்றன.
நன்றி: 21.04.2024 ஞாயிறு தினக்குரல்
பிரசன்ன ரணிலுக்கு ஆப்பு!
அண்மைக் காலமாக மொட்டுக் கட்சிக்குள் எதிரும் புதருமாக இருந்து அரசியல் செய்து கொண்டிருந்தவர்கள் தான் பிரசன்ன ரணதுங்ஹாவும் நாமல் ராஜபக்ஸாவும். ரணில் விசுவாசியாக இருந்து அவருக்காக பொது இடங்களில் பகிரங்கமாகக் குரல் கொடுத்தவர்தான் இந்த பிரசன்ன ரணதுங்ஹ.
அதே போன்று பிரசன்னவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் நாமல் ராஜபக்ஸ. இவர்கள் இருவரும் அண்மையில் அம்பறையில் வீரசிங்ஹ என்ற மொட்டு நாடளுமன்ற உறுப்பினர் வீட்டில் நடந்த ஒரு வைபவத்தில் ஒன்றாக சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மனம் விட்டுப் பேசி இருக்கின்றார்கள்.
இதனைப் பார்த்த பக்கத்தில் இருந்த அவர்களது நண்பர்கள் தொலைக் காட்சி நாடகங்களில் வருகின்ற காட்சிகளைப் போல் அல்லவா உங்கள் இருவரினதும் நாடகங்களும் அமைந்திருக்கின்றன. ஊடகங்கள் முன் எப்படி எல்லாம் பேசிக் கொண்டு இங்கு ஒன்றுமே நடக்காதது போல பேசிக் கொள்கின்றீர்களே என ஒரு ஊடகத்தார் அங்கு கேள்வி எழுப்பி போது சகோதரன் பிரசன்னவுடன் நமக்குள்ள உறவை எவராலும் பிரிக்க முடியாது.
நாம் எதையாவது சொன்னால் அதனை ஊடகங்கள் தலைகீழாக சொல்லி விடுகின்றன என்று சாளித்திருக்கின்றார் நாமல். புரிகின்றதா இவர்களது வேசம். பிரசன்ன-நாமல் உறவு ரணிலுக்கு ஆப்பா என்ற நமக்குக் கேட்கத் தோன்றுகின்றது.
நன்றி: 21.04.2024 ஞாயிறு தினக்குரல்