-நஜீப் பின் கபூர்-
ஈரான்-இஸ்ரேல் போரால் நமது தேர்தல்களுக்கு ஆப்பு வருமா?
இந்திய தேர்தலில் ஈழப்பிரச்சினை மருந்துக்குக் கூட இல்லை!
கோத்தாவால் தான் ஏமாற்றப்பட்டேன் பேராயர் மல்கம் ரஞ்சித்!
இந்த வாரத்துக்கான தலைப்பைத் தெரிவு செய்வதிலும் பெரும் இக்கட்டான ஒரு நிலை நமக்கு. சர்வதேச அளவிலும் பிராந்திய அளவிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் பல செய்தித் தலைப்புகள் காட்டுத் தீயாக கடந்த சில தினங்களாக வந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே துவக்கத்தில் இது தொடர்பான சில தகவல்களை தொட்டு விட்டு உள்நாட்டு அரசியல் கொதி நிலை பற்றி சற்று விரிவாக பேசலாம் என்பது நமது நிலைப்பாடாக இருக்கின்றது.
சர்வதே விவகாரங்கள் என்று பார்க்கின்ற போது மத்திய கிழக்கில் என்றும் இஸ்ரவேலை மையமாக வைத்து ஒரு முறுகல் அரசியல் 1948 முதல் இருந்து வருவது நாம் அறிந்த விவகாரம்தான். அமெரிக்க – இஸ்ரேல் நெருக்க உறவும் அந்த உறவின் பின்னால் இருக்கின்ற அமெரிக்க மேலாதிக்கம் – வல்லாதிக்கம் பற்றி சர்வதேச அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். ஈரான் புரட்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கு அரசியல் சம நிலையில் கணிசமான மாறுதல்கள் 1979 முதல் இன்றுவரை இடம் பெற்றிருக்கின்றன.
விலாடிமீர் புட்டின் ரஸ்யா அதிபரானது முதல் அமெரிக்காவுக்கு சர்வதேச அரங்கில் இருந்த ஏக செல்வாக்கு இன்று கணிசமாக சரிவடைந்து போய் இருக்கின்றது. இது மத்திய கிழக்கில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் தாக்கங்களைச் செலுத்தி வருகின்றன. அடுத்து சீனாவின் அபரித பொருளாதார வளர்ச்சி அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய செல்வாக்கிலும் பாரிய தாக்கங்களைச் செலுத்தி வருகின்றன. இதற்கு மத்தியில் ஒரு நடுநிலையான போக்;குடன் இந்தியாவும் இராணுவ பொருளாதார ரீதியில் தனது ஆதிக்கத்தை உலக அரங்கில் தற்போது பதித்துக் கொண்டு வருகின்றது. இது இன்றுவரை நாடுநிலைக்கு நல்ல உதாரணம் என்றுகூட நமக்குச் சொல்ல முடியும். அதனால்தான் உலக அரங்கில் இந்தியாவுக்கு இன்று ஒரு கௌரவமான இடம்.
பனிப் போர் காலத்தில் இருந்தது போல ஒரு அரசியல் இராணுவ பொருளாதார கூட்டமைப்பு இன்று உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருவதையும் நாம் பார்க்க முடிகின்றது. இந்தப் பின்னணியில் பொதுவாக அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய ஆதரவு நாடுகள் மற்றும் ரஸ்யா-சீன ஆதரவு நாடுகள் அவற்றின் செயல்பாடுகளினால் பொதுவாக இன்று உலகம் இரு கூறுகளாக பிரிந்துதான் பயணிக்கின்றது. உக்ரைன் விவகாரத்திலும் தைவான் விவகாரத்திலும் மத்திய கிழக்கிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தான் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழு அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்தி பிராந்தியத்தில் இஸ்ரேல் வல்லாதிக்கத்துக்கு பெரும் சவாலைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் நடாத்திய பதில் தாக்குதலினால் இதுவரை இரு தரப்பிலும் 35000 பேர் வரை அந்தச் சண்டையில் கொல்லப்பட்டாலும் அதில் இருதரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இப்படி ஒரு தாக்குதல் தனக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடாத்தியதற்கு ஈரான்தான் முழுக் காரணம் என்பது இஸரேல் மற்றும் அமெரிக்கா நிலைப்பாடாக இருக்கின்றது. இதில் ஒரு உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது.
ஈரான் ஆதரவுடன் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக உலகளவில் இருக்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் ஈரான் மீது ஒரு ஈர்ப்பும் ஹீரோ அந்தஸ்த்தும் இஸ்லாமியர் மத்தியில் ஏற்பட்டது. இதனால் இஸ்ரேல் அமெரிக்க மட்டுமல்ல சில அரபு நாடுகள் கூட இதனால் எரிச்சல் அடைந்திருக்கின்றன என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் பலஸ்தீனில் நடக்கின்ற இந்தப் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவை வழங்குவதில் சவூதி ஜோர்டான் பஹ்ரைன் போன்ற நாடுகள் பின்னடிக்கின்றன.
பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தில் என்னதான் நியாயங்கள் வலுவாக காரணங்கள் இருந்தாலும் அதனை தமது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக பல செல்வாக்கான அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இன்று பலஸ்தீனில் நடாக்கின்ற போராட்டங்களின் பின்னணியில் ஈரான் இருக்கின்றது என்பதால் ஈரான் நலன்கள் மீது இஸ்ரேல் அமெரிக்க தரப்பினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல்களை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இப்படியான ஒரு தாக்குதல்தான் அண்மையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதுவராலயத்தின் மீது நடந்தது இதனை இஸ்ரேலும் அமெரிக்காவும் பொறுப்பேற்கா விட்டாலும் இது அவர்கள் கைவரிசை என்பதனை ஈரானும் அவர்களது நண்பர்களும் நன்கு அறிவார்கள். இந்தத் தாக்குதல் சர்வதேச சட்ட விதி முறைகளுக்கு எதிரான ஒரு அப்பட்டமான குற்றச் செயல் என்பதை முழு உலகும் ஏற்றுக் கொள்கின்றன. அதனால் இதற்கு எதிர் தாக்குதல் நடாத்தும் உரிமை ஈரானுக்கு சட்ட ரீதியல் கிடைக்கின்றது. அதனைத் தான் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் செய்தும் இருந்தனர்.
அரபு இஸ்ரேல் போருக்குப் பின்னர் எறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரு தாக்குதலை இது வரை மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக எவரும் செய்தது கிடையாது. இது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமெரிக்க வல்லாதிக்கத்துக்கும் விடுக்கப்பட்ட ஒரு மாபெரும் சவால்-தலை குனிவு என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் மட்டுமல்ல அமெரிக்க மற்றும் அவர்களது கூட்டணியினருக்கும் இருக்கின்றன.
ஆனால் ரஸ்யா சீனா வடகொரிய போன்ற செல்வாக்கான நாடுகளின் ஆதரவு முழுமையாக ஈரானுக்கு இருக்கின்றது. அதனால் அவர்கள் ஈரானுக்காக ஆஜராக வேண்டி இருக்கின்றது. அத்துடன் இன்று உலகில் பல நாடுகளின் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகள் காணப்படுகின்றன. ஒரு வகையில் அவை இஸ்ரேலை சுற்றி வளைத்து நிற்கின்றன. இதனால் இஸ்ரேல் ஈரானைத் தண்டிக்க முனைகின்ற போது அது மூன்றாம் உலகப் போருக்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றது.
இதனால் உலகம் இன்று பெரும் அச்சத்தில் இருக்கின்றது. ஆனால் என்னதான் அழிவுகள் வந்தாலும் ஈரானுக்கு பதிலடி என்ற வெறியில் இஸ்ரேலும் அதன் நேச நாடுகளும் இருக்கின்றன. இது மேற்கு நாடுகளின் உலக வல்லாதிக்கத்துக்கு ஒரு கௌரவப் பிரச்சினையும் கூட. ஆனால் தனக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை மீண்டும் நடாத்தினால் நாம் இஸ்ரேலை சம்பலாக்கிப் போடுவேம் இதனைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருக்கின்றது. அப்படி நடந்தால் அது உலக அழிவாகத்தான் அமையும் என்பதும் உண்மையே.
அடுத்து இலங்கையில் நடக்கின்ற தேர்தல்கள் உரிய காலத்துக்கு நடக்குமா என்ற விடயத்தில் இன்னும் பல சந்தேகங்கள் இருந்து வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது. ஈரான்-இஸ்ரேல் போர் வெடித்து அதனால் சர்வதேச அரங்கில் ஏற்படுக்கின்ற அமைதி இன்மையை காரணம் காட்டி உள் நாட்டில் நடக்கின்ற தேர்தலுக்கு ஆப்பு வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை அரசியல்வாதிகளுக்கு இப்படி ஏதாவது ஒரு காரணம் நல்ல வாய்ப்பாக அமைய இடமிருக்கின்றது என்று நாம் எச்சரிக்கின்றோம்.
அடுத்து இந்தியாவில் இப்போது பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த முறை இலங்கை விவகாரத்தை எவருமே மருந்துக்குக் கூட அதனை ஒரு பேசு பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கான அழுத்தங்கள் நமது தமிழ் தரப்பினரால் முன்னெடுக்கப்படாமல் இருந்ததும், தமிழ் அரசியல் தலைமைகள் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பை மையமாக வைத்துத்ததான் இப்போது தமது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துக் கொண்டு போகின்றார்கள். அவர்களுக்கு இன ரீதியான நலன்கள்-சிந்தனைகள் என்பவற்றை விட தமது நாடளுமன்ற உறுப்புரிமை தான் அவர்களது தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் இன்று இருக்கின்றது.
இந்த சிந்தனையால்தான் இனப் பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை தமிழர் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் பகிஸ்கரிப்பு என்ற கோசங்கள் பாதிக்கும் என்று பெரியவர் சம்பந்தன் இன்று பகிரங்கமாக பேசி வருகின்றார். இது அவரது அரசியல் இராஜதந்திரம் என்பதiவிட ஆயுல் பூராவிலும் அவரது அடிமைத் தனத்தையும் ஏமாளித்தனத்தையும் காட்சிப் படுத்துகின்றது என்றுதான் நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இனக்க அரசியலால் நீங்கள் உங்கள் தலைமையில் இதுவரை தமிழ் சமூகத்தினருக்கு பெற்றுக் கொடுத்தது என்று ஏதாவது காட்ட இருக்கின்றதா என்று நமக்கு பெரியவரிடத்தில் கேட்கத் தோன்றுகின்றது.
இந்த முறையும் (2024) மோடிக்கு ஆபத்து என்று கருத்துக் கணிப்புக்கள் சொல்லிக் கொண்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறையும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் அன்று மீண்டும் மோடிதான் பதவிக்கு வருகின்றார் என்று நாம் இந்தியத் தேர்தல் தொடர்பாக எமது கருத்தை சொல்லி இருந்தோம் என்பது நமது கட்டுரைகளில் தெளிவாக அன்று சொல்லப்பட்டிருந்தது என்பதனை ஒரு முறை நினைவு படுத்த விரும்புகின்றோம். இப்போது மீண்டும் இந்திய அரசியல் அரங்கும் நெருப்பாகி பற்றி எறிந்து கொண்டிருப்பதை இந்த நாட்களில் பார்க்க முடிகின்றது. வழக்கத்துக்கு மாற்றமாக இந்த முறை தமிழகத்தில் அண்ணாமலை வெற்றிக்காக கச்சதீவு விவகாரத்தை மோடி தரப்பினர் ஒரு அரசியல் இசுவாக கையில் எடுத்திருக்கின்றார்கள். இது வெறும் நாடகம்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அந்த தாக்குதல் நடந்து முடிந்த முதல் வாரத்தில் இந்த தாக்குதல்களை முஸ்லிம் பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் செய்திருந்தாலும் இதன் பின்னணியில் ஒரு மாnரும் அரசியல் சதியும் நிகழ்ச்சி நிரலும் இருக்கின்றது என்று அந்தக் கட்டுரையில் இதே வார்த்தைகளில் நாம் சொல்லி இருந்தோம். இப்போது அதுவும் உறுதியாகி அதற்காக ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்பட்ட அறிக்கை வெளிவந்து அதன் பல பக்கங்கள் இன்றும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு இருப்பதால் இதில் பெரும் குழறுபடிகள் இருப்பதை அது உறுதி செய்கின்றது.
அத்துடன் இந்த விவகாரத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஒரு மனநோயாளிபோல் இன்று பேசிக் கொண்டிருப்பது கடும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது. இந்த விவகாரத்தில் முக்கிய ஒருவராகப் பார்க்கப்படுகின்ற கார்தினால் மல்கம் ரஞ்சித் தான் இந்த விடயத்தில் கோட்டா வாக்குறுதிகளை நம்பி தான் ஏமாற்றபட்டதை இப்போது பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு அதற்காக தனது சமூகத்திடம் அவர் மன்னிப்பும் கோரி வருகின்றார். இதற்கு சர்வதேச விசாரணை உறுதி என்று பதவி ஏற்கும் போது பகிரங்கமாக பேசிய இன்றைய ஜனாதிபதி ரணில், இப்போது தான் அப்படிப் எங்காவது பேசி இருக்கின்றேனா என்று கேட்கின்ற அளவில்தான் அவரது பங்களிப்பு இந்த விவகாரத்தில் இருந்து வருகின்றது.
நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம் அணுரகுமார தலைமையிலான என்பிபி. யினர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாம் அதிகாரத்துக்கு வந்தால் கண்டிப்பாக விசரணைகள் உரிய விதத்தில் நடக்கும் என்று எழுத்து மூல உறுதியை பேராயர் ரஞ்சித்துக்கு வழங்கி இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்திருந்தது. அதற்கான ஆவணங்களை என்பிபி. யிடம் பெற்றுக் கொள்கின்ற போதுதான் என்னை கோட்டா ஏமாற்றி விட்டார்.
அவருக்கு ஐந்து இலட்சம் வாக்குகள் வரை கிடைப்பதற்கு தான் காரணமாக இருந்தோன் என்று இப்போது ஆதாங்கப்படுவதாகவும் பகிரங்கமாகக் இந்த நிகழ்வில் பேராயர் பேசி இருக்கின்றார். அன்று தான் கோதாவுக்கு ஆதரவான கருத்துக்களை சொன்னதற்காக என்னைத் திட்டிய ஒருவர் பிற்காலத்தில் அதே மொட்டு அமைச்சரவையில் இன்று பேய் இணைந்து இருக்கின்றார் என்றும் பேராயர் மல்கம் கூறி வருகின்றார்.
நன்றி: 21.04.2024 ஞாயிறு தினக்குரல்