-யூசுப் என் யூனுஸ்-
அனைவருக்கும் பொது எதிரியாகத் தெரியும் அணுர குமார!
ஆளும் தரப்பு வேட்பாளரை கண்டறிய முடியாத ஒரு நிலை!
மீண்டும் தடியை எடுக்கின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க!
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமாக இருந்தால் அங்கு முக்கோணப் போட்டி ஒன்றுக்கு இடமிருக்கின்றது. இந்த முக்கோணப் போட்டி இரு வகையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தேசிய அளவில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் (என்பிபி) அணுர, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் (ஐமச) சஜித். ஆளும் தரப்பு வேட்பாளர் (மொட்டு) என்று அது அமைய அதிக வாய்ப்புக்கள். ஆனால் இந்த ஆளும்தரப்பு வேட்பாளரை அவர்களால் இன்றுவரை கண்டறிய முடியாதிருக்கின்றது. அதேபோன்று ஆளும் மொட்டுக் கட்சி வேட்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு முக்கோணப் போட்டி அங்கு கடுமையாகக் காணப்படுகின்றது.
வழக்கம் போல பொதுத் தேர்தல் பற்றிய எதிர்பார்ப்புத்தான் இன்னும் எம்மிடத்தில் மேலோங்கி இருக்கின்றது. என்றாலும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன்; வேட்பாளர்கள் பற்றி மக்களிடத்திலும் சிவில் சமூகத்திலும் கட்சிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றன. அதனால் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் அதன் வேட்பாளர்கள் பற்றியுமான பிந்திய தகவல்களை இப்போது பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
மொட்டுக் கட்சியில் ஒரு பொறுத்தமான வேட்பாளரை அவர்களால் இதுவரை கண்டு கொள்ள முடியாமல் இருக்கின்றது. நாம் களத்தில் இறங்காமல் இருப்பதால்தான் பின்னடைவு போல தெரிகின்றது. சனத் நிசந்தாவின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தைப் பார்க்கின்ற போது மீண்டும் பழைய மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நாமல் சகாக்கள் வாதமாக இருக்கின்றது. மெட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நிலை அப்படி இருக்க
ஜனாதிபதி தேர்தலில் அனைத்துப் போட்டியாளர்களும் அணுரகுமாரவைப் பொது எதிரியாகத்தான் இன்று பார்க்கின்றார்கள். அணுராவுக்கு எதிராக ஒரு பொது வேட்பளரைக் கண்டறிகின்ற முயற்சியில் சந்திரிக்காவும் இப்போது பிரவேசித்திருக்கின்றார். அந்த அணியில் தீர்மானம் எடுக்கின்ற அனைத்து அதிகாரங்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடமே கொடுத்தும் இருக்கின்றார்கள். (பொது சன ஐக்கிய முன்னணி) 2015 ஜனாதிபத் தேர்தலில் அவரது அதிரடி ஆட்டம்தான் மஹிந்தவை கவிழ்த்தது என்பது தெரிந்ததே.
முதலில் ஆளும் தரப்பு வோட்பாளர் யார் என்று பார்த்தால் இன்னும் தெளிவான பதில்கள் அங்கிருந்து நமக்கு வரவில்லை. நாம் முன்பொருமுறை குறிப்பிட்டது போல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பற்றி சின்னை சமிக்ஞை மொட்டுக் கட்சி தேசிய மாநாட்டில் வைத்துக் காட்டப்பட்டது. இது மொட்டு கட்சி மாநாட்டை நடாத்துவதற்கு வரும் செலவுக்காக பசில் பார்த்த ஒரு நாடகம் என்று இப்போது தெரிகின்றது.
அதற்காக இந்த தமிக்க பெரும் தொகை பணத்தை செலுவு செய்திருந்ததையும் நாம் அன்றே சொல்லி இருந்தோம். ஆளும் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் தம்மிக்க பெரேராவை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ரணில் அல்லது ராஜபக்ஸாக்களில் ஒருவர்தான் வேட்பாளராக வருவதற்குப் பொருத்தம் என்ற எதிர்பார்ப்பு அங்கு இருக்கின்றது.
தன்னை மொட்டுக் கட்சியின் கோட் பாதர் ஏமாற்றி விட்டாரோ என்ற ஒரு அங்கலாய்ப்பு தம்மிக்கவுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இதனால்தான் தங்கள் அணிக்குள் உங்களுக்கு எதிராக குரல்கள் வருகின்றதே என்று ஒரு ஊடகச் சந்திப்பில் அவரிடம் கேட்டதற்கு ஆம் அது உண்மை. நானும் இன்னும் இரண்டு மூன்று பேரும் அங்கு இந்தப் பதவிக்காக இருக்கின்றோம்.
இன்னும் சில மாதங்களில் அதற்கு ஒரு தெளிவான பதில் வந்து விடும் என்று அவர் குறிப்பிடுகின்றார். அவரது இந்தக் கதையில் இருந்து அங்கு வேட்பாளர் விவகாரத்தில் குழப்ப நிலை புரிகின்றது. இதனால் நான் தற்போது பின்வாங்கி சற்று அமைதியாக இருக்கின்றோன் என்றும் அந்தச் சந்தியில் தம்மிக்க கூறி இருந்தார்.
தம்மிக்க இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் இருக்கின்ற அதே நேரம், தற்போதய ஜனாதிபதி ரணில் ஆளும் தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக வருகின்ற தனது முயற்ச்சியை தொடர்ந்து மேற் கொண்டிருக்கின்றார். சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் கூட்டமொன்று சிரி கொத்தாவில் நடந்திருக்கின்றது. அப்போது ஜனாதிபதி ரணில் கட்சி ஒருங்கமைப்பு விடயத்தில் தனக்குத் திருப்தி இல்லை என்று அவர் அங்கு சத்தமாகப் பேசி இருக்கின்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக வருவதா இல்லையா என்ற குழப்ப நிலை இருப்பதால்தான் இந்த மந்த நிலை என்று அங்கிருந்தவர்கள் ரணில் முகத்திற்குச் சொல்லியும் இருக்கின்றார்கள். அபோது எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் இதுபற்றி ஒரு சிக்னலை நான் தங்களுக்குத் தருவேன் என்று சொல்லி விட்டு கூட்டத்தில் இருந்து கடுப்பாக எழுந்து சென்றிருக்கின்றார் ரணில். இந்த சிக்னல் கதை கூட நம்பகத் தன்மை அற்றது என்றுதான் கட்சிக்காரர்கள் கருதுகின்றார்கள். அது அப்படித்தான் அமைந்தது.
ஜனாதிபதி ரணில் மொட்டுக் கட்சியிடமிருந்து வேட்பாளரை எதிர்பார்க்கின்றார். அது அவர் கைக்குக் கிடைத்தால் தன்னை பொது வேட்பாளர் என்று அழைத்துக் கொள்வது அவரது அடுத்த எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. இந்த வேட்பாளர் விவகாரத்தில் ராஜபக்ஸாக்கள் ரணிலுக்கு இன்று வரை பச்சைக் கொடி காட்டவில்லை. அப்படி பச்சைக் கொடி காட்டப்பட்ட தம்மிக்க கூட இன்று பாதி வழியில் ரயில் வண்டி தண்டவாலத்தில் சிக்னலுக்காக நிற்பது போல நிற்கின்றார்.
ஆளும் மொட்டுக் கட்சியில் தம்மிக்கவை விட ரணிலுக்கு செல்வாக்கு அதிகம் என்று தெரிகின்றது. புதிதாக நியமனம் பெற்ற இளம் அமைச்சர்களும் பிரசன்ன போன்றவர்களும் இன்னும் ரணிலிடத்தில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்காக அங்கு விசுவாசமாகப் பேசி வருகின்றார்கள். இதற்கிடையில் இந்த இரண்டுபேரையும் ஏற்றுக் கொள்ள முடியாது கட்சியில் இருந்துதான் ஒருவர் வேட்பாளராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அங்கு இருக்கின்றது. நாமல் ராஜபக்ஸ நண்பர்கள் பலர் அவரை வேட்பாளராகக் கொண்டுவர எதிர்பார்க்கின்றார்கள்.
மொட்டுக் கட்சி வேட்பாளர் யார் என்ற தெளிவு இன்மையால் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எதிர்பார்ப்புக்களில் ஒரு குழப்ப நிலை முழு நாட்டில் இருக்கின்றது. மொட்டுக் கட்சியில் குறிப்பாக ராஜபக்ஸாக்கள் மத்தியிலும் தமது வேட்பாளர் தெரிவு பற்றிய முடிவெடுப்பதில் பெரும் தடுமாற்றம். அதனால் இன்னும் இந்த ஜனாதிபத் தேர்தல் முழுமையாக சூடுபிடிக்காமல் இருக்கின்றது. மொட்டுக் கட்சி தனது வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்ற போதுதான் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய நம்பிகை நாட்டில் உறுதியாகும். அதுவரைக்கும் இதில் சந்தேகங்களும் நம்பகத் தன்மையின்மையும் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.
இதற்கிடையில் தமக்குத் தேர்தல்களில் செலவு செய்ய பணம் இல்லை. எனவே வாகனப் பேர்மிட்டுக்களைத் தந்தால்தான் தமக்கு அதனை விற்றாவது தேர்தல்களில் காசு செலவு செய்ய முடியும். அல்லது தாம் தேர்தல் நடவடிக்கைளில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டி வரும் என்று பல நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்கள் மேலிடத்தில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையில் சீசனுக்கு மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குழுங்குவது போல அரசியல் கூட்டணிகள் நாள்தோரும் பிறக்கின்றன.
நிமல் லன்சா தலைமையில் அண்மையில் ஒரு கூட்டணி உருவாகி இருக்கின்றது. மேலும் ரொசான் ரணசிங்ஹவும் ஒரு கூட்டணியை சமைத்திருக்கின்றார். விமால் தரப்பினரும் ஒரு கூட்டணியாக வர இருப்பதாக கூறுகின்றார்கள். இப்படியான கூட்டணிகள் குறித்து நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.
இவர்கள் கடைசியில் எங்களுடன்தான் வந்து சேருவார்கள். பொருத்திருந்து பாருங்கள் என்ற மஹிந்த ராஜபக்ஸ ஒரு ஊடகச் சந்திப்பில் சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். நிமல் லன்சா பகலில் சந்தியில் இப்படிப் கூட்டணி பற்றி பேசி விட்டு இரவு நேரத்தில் சகோதரன் கோட்டா வீட்டில்தான் வழக்கமாகப் போய் நிற்பார் என்று உதயங்க வீரதுங்ஹவும் ஒரு முறை சொல்லி இருந்தது நமக்கு நினைவில் வருகின்றது.
மொட்டுக் கட்சி கோட்பாதர் பசில் இன்னும் சில நாட்களில் நாட்டுக்கு வந்ததும் தேர்தல் பணிகள் விரைவு படுத்தப்படும் என்று சொல்லப்படுகின்றது. வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் இந்த ஓட்டத்தில் தாக்குப் பிடிப்பது கஸ்டம் என்பதனை அறிந்து வைத்திருக்கின்ற மஹிந்த ராஜபக்ஸ தனது அரசியல் வாரிசை வருகின்ற தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் ஆசனத்தில் அமத்திவிட்டால் அது கூட தனக்குப் பெரும் நிம்மதி என்று இருப்பதாக சில கதைகளில் தெரிய வருகின்றது. இப்படி ஒரு நெருக்கடி நிலை இருப்பதால்தான் அவர்கள் தேர்தல் பற்றிய தெளிவான வார்த்தைகளை இன்னும் உச்சரிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்-அல்லது தவிர்க்கின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமரணதுங்ஹ மீண்டும் தேர்தல் களத்தில் தனது விளையாட்டுக்களை முன்னெடுக்க இருப்பதாகப் பரவலான கதைகள். அதன்படி மைத்திரி விட்டுக் கொடுக்க இருப்பதாகவும், மீண்டும் சந்திரிக்க கட்சி தலைமைப் பதவியை ஏற்பதுடன் தலைமைத்துவ சபை ஒன்றை அமைத்து சு.கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப இருப்பதாகத் தெரிகின்றது.
இதற்கிடையில் சில பேரின ஊடகங்கள் சந்திரிக்கா தனது மகன்-மிருக வைத்தியராக இங்கிலாந்தில் தொழில் பார்க்கின்ற விமுக்தியை கொண்டு வந்து அரசியல் களத்தில் இருக்க இருப்பதாகவும் கதைகள் வருகின்றது. அப்படி ஒரு முட்டால் வேலையை அவர் பார்ப்பார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் கடும்போக்காளராக செயல்பட்ட சம்பிக ரணவகாவை அவர்கள் களத்தில் இறக்கலாம் என்ற ஒரு கதையும் இருக்கின்றது.
இலக்கு யார்!
ஆனாலும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அணுர திசாநாயக்காவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும் வேட்பாளர்கள் என்பது உறுதி என்ற நிலையில் இருக்கின்றது. அதில் மாற்றங்களுக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. ஆனாலும் சஜித்தை விட வேறு ஆள் அங்கு இல்லையா என்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்தக் குரல்கள் கனதியானதல்ல. அதனால் அதனைப் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. புதிதாக அந்த அணியுடன் யாரும் கூட்டணிக்கு வந்தாலும் வேட்பாளர் விடயத்தில் அவர்களுக்கு அங்கு வாய்திறக்கும் அளவுக்கு செல்வாக்குக் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்கிதியுடன் கூட்டணிக்கு வருகின்ற கட்சிகள் அல்லது தனிநபார்கள் தமது நாடாளுமன்ற உறுப்புரிமை எதிர்பார்ப்புக்காக வேட்புரிமையைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி வாக்குகளைக் கொள்ளயடிக்கத்தான் அங்கு வருகின்றார்கள். அதானல் அவர்கள் இந்த வேட்பாளர் விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ள முடியாது. அவர்கள் அப்படி அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.
நாட்டிலுள்ள அனைத்து சிங்கள ஊடகங்கங்களும் ஜேவிபி தலைவர் அணுராவை பிரதான வேட்பாளராக சித்தரித்துத்தான் செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் அதற்கும் பல மடங்கு மேலேநின்று அணுராவை தனிக் குதிரை என்றுதான் சொல்லி வருகின்றன. அவருக்கு இதனால் அவருக்கு உயிராபத்துக் கூட கண்ணெதிரில் இருக்கின்றது என்றும் எச்சரிக்கைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலும் அணுர தனக்கு அரச படைகளின் பாதுகாப்பை நிராகரித்து தனது கட்சி தொடண்டர்களின் பாதுகாப்பை வைத்திருக்கவே விரும்புகின்றார். இதுதான் அவரது கட்சியின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது.
அணைத்து அரசியல் கட்சிகளும் ஜேவிபி. தலைவர் அணுர குமாரவை தமது பிரதான எதிரியாக இலக்கு வைத்துத்தான் தனது தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றன. பொதுவாக ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிராகத்தான் இப்படி ஒரு நிலை தேர்தல் களத்தில் இருப்பது வழக்கம். ஆனால் அணுர விடயத்தில் இது தலை கீழாக நிற்க்கின்றது. இதிலிருந்து பிரதான போட்டியாளர் அணுரதான் என்பதனை அவரது அரசியல் எதிரிகளே அவருக்கு களத்தை சமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கனின் அரசியல் பலத்தை சர்வதேசத்துக்கு காட்சிப்படுத்த அவர்கள் தரப்பில் இருந்து ஒரு ஜனாதிபதி வேட்பாளர் அவசியம் பற்றியும் பல இடங்களில் கதைகள் வருகின்றன. இது நல்லதொரு பரீட்சார்த்தம் என்று எடுத்துக் கொண்டாலும் கடந்த காலங்களில் இப்படி வந்த வேட்பாளர்களால் சாதிக்க முடியாமல் போய் விட்டது.
தமிழ் மக்களின் உணர்வுகளை கட்சி அரசியலுக்கு அப்பால் தட்டி எழுப்ப முடியுமாக இருந்தால் இது நல்ல முயற்சி. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதில் ஆயிரம் ஆயிரம் நெருக்கடிகள் இருக்கின்றன என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் ரணிலே அடுத்த ஜனாதிபதிக்கான நல்ல தெரிவு அவருக்கே தனது அணி ஆதரவு என்று நாடாளுமன்ற உறுப்பினர் விக்ணேஹ்வரன் பேசி வருகின்றார்.
ஜேவிபி.யிலிருந்து பிரிந்து சொன்று அரசியல் செய்கின்ற சோஸலிச முன்னணியினர் இந்த முறை தமது தரப்பில் வசந்த முதலிகேயை ஜனாதிபதி வேட்பாளராகக் களத்தில் இறக்க முனைவதாகத் தெரிகின்றது. அவர் ஒரு கவர்ச்சியான போராட்டக்காரர்தான். ஆனால் அவர் இதற்கு எவ்வளவு தூரம் பொறுத்தம் என்பது தெரியவில்லை. இந்த வசந்த முதலிகேயில் ஜனரஞ்சகத்தை முன்னிருத்தி முன்னிலை சோஸலிஸ்டுக்கள் காய்பறிக்க நினைப்பது எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் அவர்களுக்கு அதற்கான இருக்கும் உரிமையை நாம் விமர்சிக்க முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இதே முன்னிலை சோஸலிச முன்னணி சார்பில் 2019 ஜனாதிபதி தேர்தலில் நின்ற துமிந்த நாகமுவ வெறும் எட்டாயிரத்து இருநூற்றி பத்தொன்பது (8219) வாக்குகளை மட்டுமே பெற்றார். நமது நாட்டில் 14000 வரையிலான கிராம சேவர்கர் பிரிவுகள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு வாக்கு விழுந்தாலும் இதனை விட அவர்கள் அதிக வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது அப்படி நடக்கவில்லை.
திலித் ஜயவீர போன்றவர்களும் தமது பரப்புரைகளைத் துவங்கி இருக்கின்றார்கள். இதுதவிர இன்னும் பல கூட்டணிகள் பற்றிய கலந்துரையாடல்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் வருகின்றன. என்னதான் ஆயிரம் கூட்டணிகள்-வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வந்திறங்கினாலும் இந்த சுற்றில் அதாவது 2024 ஜனாதிபதித் தேர்தலில் முக்கோணப் போட்டி என்றுதான் அமையும். இரண்டு பேருக்கிடையில்தான் பிரதான போட்டி என்றாலும் மூன்றாவது வருகின்றவரும் கடந்த காலங்களைவிட சற்று அதிகமான வாக்குகளை இந்தத் தேர்தலில் பெறக்கூடும்.
இன்னும் சில அரசியல்வாதிகள் தமது கூட்டணிக்குள் வந்து இணைந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும் அவர்களை உள்வாங்கிக் கொண்டால் தமக்குக் கிடைக்கின்ற வாக்குகளும் இல்லாமால் போய்விடும் என்ற எண்ணத்தில் அவர்களைத் தள்ளி வைப்பதில்தான் கட்சித் தலைவர்கள் ஆர்வமாக இருப்பதும் தெரிய வருகின்றது.
நன்றி: 11.02.2024 ஞாயிறு தினக்குரல்