மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. 5.21 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான மாலத்தீவு பூகோள ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக அமைந்துள்ளது.
மாலத்தீவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சீனா ஆதரவு அதிபர் முகம்மது முய்சு அதிபராக பதவியேற்ற பின் அந்த நாடு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டியது. இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு சென்றார்.
லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடி தொடர்பாக இனவெறியுடன் கருத்துக்களை கூறி விமர்சித்தனர். இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.
சிறப்பு கூட்டம்
இந்தியர்கள் பலரும் மாலத்தீவு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததை ரத்து செய்தனர். இதனால் சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பிக்கொண்டு இருந்த மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
மாலத்தீவு ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் முகம்மது சோலி இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பது கவனிக்கத்தக்கது.
இது ஒருபக்கம் இருக்க இன்று மாலத்திவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதிபர் முகம்மது முய்சுவில் புதிதாக 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் பெறும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
ஆனால், அவை கூடியதும் அதிபர் முகம்மது முய்சுவுக்கு ஆதரவு கட்சிகளான மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC), மாலத்தீவு முற்போக்க கட்சிக்கும் முன்னாள் அதிபர் முகம்மது சோலியின் மாலத்தீவு ஜனநாயக கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கைகலப்பு
ކެނދިކުޅުދޫ ދާއިރާގެ މެމްބަރު އީސާގެ ފައިގައި ހިފައި ކަނޑިތީމު މެމްބަރު ޝަހީމް ވައްޓާލާ މަންޒަރު. އެމްޑީޕީ ދޫކޮށް ޕީއެންސީއާ ގުޅުނު ސަރުކާރުގެ މެމްބަރުން މަޖިލީހަށް ހުރަސް އެޅުމާއެކު ތަޅުމުގައި ހަމަނުޖެހުން އަންނަނީ ހިނގަމުން. pic.twitter.com/mnmzvYKsrO
— Adhadhu (@AdhadhuMV) January 28, 2024
மாலத்தீவு நாடாளுமனறத்தில் எதிர்க் கட்சிக்கே பெரும்பான்மை உள்ளது. அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதற்கு நடைபெறும் வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்கக்ட்சி கோரியது. இதனால், ஆளும் கட்சிக்கு எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் கைகலைப்பு ஏற்பட்டது.
தெருச்சண்டை போல மாலத்தீவு நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் அடித்து உருண்டனர். சபாநாயகர் முன்பு இருந்த மைக்குகளையும் எம்பிக்கள் சிலர் பிடுங்கி எறிந்தனர். நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அடித்துக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.