இஸ்ரேல் போர் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பரபர உத்தரவு
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது குறித்து சர்வதேச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே போர் நடந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி முதலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேநேரம் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இப்போது முக்கியமான தீர்ப்பைக் கொடுத்துள்ளது.
சர்வதேச நீதிமன்றம்
இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டது. அதேநேரம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடரும் நிலையில், காசாவில் போர்நிறுத்தத்திற்கு உத்தரவிடச் சர்வதேச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
காசா பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், சர்வதேச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவில், இஸ்ரேல் தனது வீரர்கள் இனப்படுகொலை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காசாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கவலை தருகிறது: இது குறித்து சர்வதேச நீதிமன்றம் கூறுகையில், “அங்கிருந்து வரும் தகவல்கள் கவலை தருவதாக இருக்கிறது. அங்கு நிலவும் சூழல் மோசமாக இருக்கிறது. தொடர்ச்சியாக உயிரிழப்பு குறித்த தகவல்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. மேலும், அங்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இந்த உத்தரவை நிறைவேற்ற இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டது.
சர்வதேச நீதிமன்றம் அப்படி உத்தரவிட்டாலும் கூட சர்வதேச நீதிமன்றத்திற்குத் தனது தீர்ப்பை அமல்படுத்த எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் பிரதமர்: இந்த உத்தரவுக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இனப்படுகொலை வழக்கை “அட்டூழியமானது” என்றும், தன்னை தற்காத்துக் கொள்ள “தேவையானதை” இஸ்ரேல் தொடர்ந்து செய்யும் என்றும் கூறியுள்ளார்.
ஹமாஸ் வசம் இருக்கும் பெண்கள்.. கர்ப்பமடைவதாக குற்றச்சாட்டு! இஸ்ரேலில் வெடிக்கும் புது பிரச்னை! பின்னணி என்ன: முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்,காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறுவதாகத் தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியது. கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய போதிலும், அதற்கு முன்பே இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததைத் தென்னாப்பிரிக்கா தனது வாதத்தில் குறிப்பிட்டது.
இருப்பினும், இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்த இஸ்ரேல், இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில் தான் சர்வதேச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விமர்சித்துள்ளார். இனப் படுகொலை என்று தங்கள் மீது போடப்பட்ட வழக்கு முழுக்க அட்டூழியமானது என்று குறிப்பிட்ட அவர், தன்னை தற்காத்துக் கொள்ளத் தேவையானதை இஸ்ரேல் தொடர்ந்து செய்யும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.