என்ன நடந்தது ஈராக் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படை ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் குர்திஸ்தானின் தலைநகரான அர்பிலில் அமைந்துள்ள உளவுத் துறை அலுவலகம் மீது தாக்குதல் நடந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான உளவுத் தகவல்களை சேகரிக்கும் பயங்கரவாதக் குழுக்களின் இருப்பிடங்களை அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
தாக்குதல்
இந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் உள்ள பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீ என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈராக் மட்டுமின்றி சிரியாவில் உள்ள இலக்குகளைக் குறிவைத்தும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் இடங்கள், பயங்கரவாதிகள் தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. இதற்கு முன்பு ஈரான் மீது சிரியா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக சிரியா மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.. ஈரானின் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த தாக்குதல்களைப் பொறுப்பற்றது என்று கூறியுள்ளது.
அமெரிக்கா
இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று எர்பிலில் ஈரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. ஈராக்கை பாதிக்கும் வகையில் ஈரான் நடத்திய பொறுப்பற்ற ஏவுகணைத் தாக்குதல்களை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மத்தியதரைக்கடல் திசையில் இருந்து வந்த 4 ஏவுகணைகள் இங்கே விழுந்தன, முன்னதாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி கெர்மானில் மறைந்த ஜெனரல் காசிம் சுலைமானியின் சமாதிக்கு அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்று இருந்தது. அதேபோல ராஸ்கில் உள்ள போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 11 ஈரான் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானால் தடுப்புப்பட்டியலில் உள்ள ஜிகாதிஸ்ட் குழு ஜெய்ஷ் அல்-அட்ல் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருந்தது.
மொசாட் உளவு அமைப்பு
ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பகுதியில் உள்ள இஸ்ரேல் உளவு தலைமையகத்தைத் தாக்கியது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் அலுவலகம் ஈராக்கில் அமைந்துள்ள நிலையில், அங்கே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. உலகில் தலைசிறந்த உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் அலுவலகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.