நஜீப்-
நாடாளுமன்றம் கலைகின்றது!
இன்னும் ஓரிரு தினங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட இருக்கின்றது என்று ஒரு கதை காட்டுத் தீயாக பரவி வருகின்றது. ஜனாதிபதி யாழ்.விஜயத்தின் பின்னர் இது நடக்கும் என்று பலர் பேசி வருகின்றார்கள்.
ஜனாதிபதி ரணில் அப்படியான ஒரு முடிவை எடுக்கத் தவறினால் நாம் ஒரு பிரேரணையை முன்வைத்து நாடாளுமன்றத்தை கலைக்கின்ற வேலையைச் செய்வோம் என்று மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஒரு கதை.
நாமல் இந்தக் கேரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்த போது, நான் நாடாளுமன்றை காலம் முடியும் வரை கலைக்க மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கின்றேன். எனவே முன்கூட்டி தன்னால் நாடாளுமன்றைக் கலைக்க முடியாது என்று சொல்லி இருந்ததும் தெரிந்ததே.
இந்தப் பின்னணியில்தான் இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட இருக்கின்ற கதை மீண்டும் பேசப்படுகின்றது. இதிலுள்ள யதார்த்தம் என்னவென்றால் எதிர்வரும் நாட்கள் மிகவும் மோசமாக அமைய இருப்பதால் ஆளும் தரப்பினருக்கு பெரும் நெருக்கடிகள் வர இருக்கின்றன.
இதனால் மக்கள் தெருவுக்கு வரும் நிலை ஏற்படும் முன்னர் தேர்தலை சந்தித்து நாடளுமன்றில் எதிரணியிலாவது வந்து அமர்வதுதான் இவர்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.
எல்லோரும் பொது வேட்பாளர்!
ஜனாதிபதி தேர்தல் வருமாக இருந்தால் அதில் போட்டியிடுவோர் பற்றிய தகவல்கள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் அனைரும் போல தன்னை பொது வேட்பாளர் என்று அறிமுகம் செய்து கொள்ளும் ஒரு நிலை இன்று காணப்படுகின்றது.
ஜனாதிபதி ரணிலுடன் எவரும் போட்டடிக்கு வரக்கூடாது என்று அவரது கையாட்கள் சொல்லிக் கொண்டு வருகின்றார்கள் எனவே அப்படிப் பார்க்கின்ற போது ரணிலும் ஒரு பொது வேட்பாளர். அதே போன்று ஆளும் மொட்டுக் கட்சி சார்பில் வருகின்ற தம்மிக்க பெரேரா கூட மொட்டுக் கட்சி வேட்பாளராக தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் பொது வேட்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள முனைவதாகவும் தெரிகின்றது.
அதே போன்று சுதந்திரக் கட்சியில் இருந்து விரட்டப்பட்ட தயாசிரியும் தனக்கு அழைப்பு வருமாக இருந்தால் பொது வேட்பாளராக வரத் தயாரர் என்று சொல்லி வருகின்றார். அதே போன்று தமிழர் தரப்பிலும் ஒரு பொது வேட்பாளர் கதை. இதற்கும் பல பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. இந்த பொது வேட்பாளர்கள் அனைவரும் யாருக்கு எதிராக என்ற கேள்வி வருகின்றது.
முட்டால்களுக்குத் தான் தேர்தல்!
தமக்கு வாய்ப்பில்லாத நேரத்தில் தேர்தல்களை நடாத்துவதற்கு நாங்கள் ஒன்றும் முட்டால்கள் அல்ல என்று ஆளும் மொட்டுக் கட்சியின் வர்த்தக அமைச்சர் நளின் பர்ணாந்து ஊடகச் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் கதைப் படி பார்க்கின்ற போது 2048டு வரைக்கும் நாட்டில் தேர்தல்கள் ஏதுவுமே கிடையாது என்றுதான் நாம் எடுத்தக் கொள்ள வேண்டும். இதற்குச் சமாந்திரமான கதையைத்தான் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனாவும் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டு வருகின்றார்.
அத்துடன் ஐ.எம்.எப் போன்ற அமைப்புக்கள் இந்த நேரத்தில் தேர்தல் பற்றி பேசுகின்றவர்களுக்கு எதிராக தமது கருத்துக்களை வெளயிட வேண்டும் என்று வஜிர குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து நாட்டில் குறிப்பிட படி தேர்தல்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகின்றது.
அவர்கள் கருத்துப்படி நாட்டில் தற்போது இருக்கின்ற அரசியல் யாப்பைக் கூட குப்பையில் தூக்கி எறிந்து விட்டு ரணில் ஜனாதிபதி கதிரையில் அமரப் போகின்றார் என்றுதான் இதனை நாம் எடுத்துக் கொள்ள முடியும் ஆனால் நடைமுறையில் இது எந்தளவுக்குச் சாத்தியம்.?
ஜேவிபி.யில் டலசுக்கு இடம்!
கடந்த வாரம் மொட்டுக் கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அணியில் இருந்த பலர் சஜித் அணியில் இணைந்து கொண்டார்கள் அவர்களுக்கு பதவிகளும் தொகுதிகளும் கூட ஓகே. இதனைத் தொடர்ந்து சு.கட்சியில் இருந்தும் பலர் சஜித்துடன் இணைந்து கொண்டார்கள். அவர்களுக்கும் தொகுதிகள் பதவிகள் ஓகே.
இந்த நிலையில் டலஸ் செயல்பாடுகள் தொடர்ப்பில் அவருடன் நெருக்கமாக இருந்த டிலான் பெரேரா தற்போது பல தகவல்களை சொல்லி வருகின்றார். சஜித்துடன் இணைகின்ற விவகாரத்தில் டலஸ் ஆர்வம் இல்லாது நடந்து கொண்டது தமக்குப் புரிந்ததால் நாம் இப்படி முடிவுகளை எடுத்ததாக அங்கு சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
டலஸ் அணுரகுமாரவுடன் இணைவதில்தான் ஆர்மாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அதற்குப் பச்சைக் கொடி காட்டவில்லை. என்றாலும் டலஸ் இன்னும் ஜேவிபியுடன் இணைவதில்தான் நம்பிக்கையுடன் இருக்கின்றார். சில வேலைகளில் அவர்கள் டலசுக்கு (ஜேவிபி) இடம் கொடுக்கவும் வாய்ப்புள்ளது என டிலான் பெரேரா அங்கு பகிரங்கமாக பேசி இருக்கின்றார்.
ராஜபக்ஸாக்களுடன் விசுவாச அரசியல் செய்தவர்களை நாம் ஏற்கமாட்டோம் என்றுதான் ஜேவிபி இருக்கின்றது. ஆனால் டிலான் முரணாக பேசுகின்றார்.
நன்றி: 07.01.2024 ஞாயிறு தினக்குரல்