-நஜீப்-
ரணில் வேட்பாளர் கதை!
தற்போதய ஜனாதிபதி ரணில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து 2024-ல் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தான் வருவதாக அறிவித்து ஆதரவும் கோரி இருக்கின்றார். பல ஊடகங்கள் இதனை உத்தியோகபூர்வ அறிவிப்பாக எடுத்தக் கொண்டு தலைப்புச் செய்திகளையும் சொல்லி இருக்கின்றன.
ஆனால் நம்மைப் பொறுத்தவரை இது கவனத்தை திசை திருப்புகின்ற ஒரு நாடகம் மட்டுமே. மொட்டுக் கட்சி தேசிய கூட்டத்தில் தம்மிக்க பெரோராவுக்குத் தான் வேட்பாளர் வாய்ப்பு என்று ஒரு செய்கை கட்டப்பட்டிருப்பதால் அதற்குப் பதிலடியாகத்தான் ரணில் இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றது என்பது எமது கருத்து.
ரணில் தான் சொல்லிய ஏதையாவது செய்திருக்கின்றாரா? அடுத்து ஐதேக.வில் இருப்பவர்களுக்குக் கூட இந்த அறிவிப்பு வரும்வரை ஏதும் தெரிந்திருக்கவில்லை. மொட்டு தன்னை ஓரம்கட்டி அரசியல் ரீதியில் காயப்படுத்திய வலியில்தான் ரணில் இப்படி ஒரு போடு போட்டிருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புச் செய்யப்பட்டு நியமனப் பத்திரங்கள் தாக்கலாகும் வரை இதுபோன்று வரும் வேட்பாளர்கள் பற்றிய கதைகளை மக்கள் மனதில் போட்டுக் கொண்டு அதனை ஒரு இசுவாக எடுத்துக் கொள்வதே மட்டமான- முடல்தனமான சிந்தனையாக இருக்கும்.
அரசிலிருந்து மஹிந்த விலகல்!
இந்த தலைப்பை ஜீரணித்துக் கொள்வது வாசகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் நமது குறிப்பை படித்து முடிகின்றபோது இதிலுள்ள நியாயம் புரியும். 2024 வரவு செலவு அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது மக்களை துன்பங்களுக்கு ஆளாக்கின்றது என்று நாமல் ராஜபக்ஸ காரணம் கூறி இருந்தார்.
ஆனால் அப்பன் மஹிந்த அதனை ஆதரித்திருந்தார். அப்பனுக்கும் மகனுக்கும் இதில் முரண்பாடு. இது பற்றி முன்பும் சொல்லி இருந்தோம். ஆனால் கொழும்பில் நிர்மானிக்கப்பட்டிருக்கும் ஐசிரி ஹோட்டலை அண்மையில் பார்வையிடச் சென்ற இடத்தில் ஊடகவியலாளர் கேள்விகளுக்கு மஹிந்த ராஜபக்ஸ பதில் கொடுக்கும் போது, ‘ஆம் இப்படியான ஒரு அரசு பதவியில் இருப்பதால்தான் இந்த நிலை.
எனவே நாங்கள் எங்களது அரசாங்கம் ஒன்றை விரைவாகப் பதவிக்கு கொண்டு வர வேண்டும்’ என மஹிந்த அங்கு உறுதியாக சுட்டிக் கட்டி இருந்தார். மஹிந்த கதைப்படி இது அவரது மொட்டு அரசல்ல. இதனை ஐதேக. ஒற்றை உறுப்பினரதும் ஜனாதிபதி ரணிலின் அரசு என்றுதான் மஹிந்த சொல்;ல வருகின்றார். கடவுளே இது என்ன நியதி.! என்ன தேசம்!
ஐமச.யில் தயாவுக்கு உயர் பதவி!
சு.கட்சியிலிருந்து மைத்திரியால் விரட்டியடிக்கப்பட்ட தயாசிரிக்கு சஜித் உயர் பதவி கொடுத்து தனது அணியில் இணைத்துக் கொள்ள இருப்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. தயாசிரி ஒரு கவர்ச்சியான அரசியல்வாதியும் கூட. முன்பு சஜித்துடன் நெருக்கமாக இருந்தவர்.
கட்சியில் தயா வரவுக்கு பெரும்பான்மையான தொண்டர்கள் ஆதரவாக இருந்தாலும் தாம் பின்னுக்குத் தள்ளப்படுவோம் என்ற வஞ்க எண்ணத்துடன் இதனைப் பார்க்கின்ற பலர் தயா வரவை ஜீரணித்துக் கொள்ளத் தயாராக இல்லை. வருகின்ற ஜனவரியில் டசன் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பிலிருந்து சஜித் அணியில் இணைந்து கொள்ள இருக்கின்றனர்.
அப்போது அவர்களது புதிய கூட்டணி ஒன்றும் களத்துக்கு வரும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால் அப்படி வருகின்றவர்களிடத்தில் சொல்லும்படி வாக்குவங்கி ஏதும் கிடையாது. ஐமச. வாக்குகளை சுருட்டிக் கொண்டு நாடாளுமன்றம் போகத்தான் பலர் அங்கு வருகின்றார்கள்.
இது அங்குள்ளவர்களுக்கும் தெரியும். வருகின்றவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்தல் தொகுதிகள் தொடர்பில் சிக்கல்கள் இன்னும் முடிவாகவில்லை.
அரச விழாவில் அதிதிக்கு பளார்!
இந்த நிகழ்வு ஏதாவது வெளிநாட்டில் நடந்த ஒரு சம்பவமாக இருக்கும் என்றுதான் தலைப்பை படித்ததும் ஒருவருக்கு எண்ணத் தோன்றும். ஐம்பதாவது (50) முறையாகவும் நாடக கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு மாரகம-இளைஞர் சேவா மன்ற அரஙிகில் நடந்ததது.
வைபவத்திற்கு ஜனாதிபதி ரணில் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவும் வருகை தந்திருந்தார்கள். விருதுக்கான நபர்களைத் தெரிவு செய்யும் குழுவுக்கு செல்வாக்கு மிக்க கலைஞர் பரக்கிரம நிரியெல்ல தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றிய நிரியெல்ல விருதுகளுக்கான நபர்களை எனது தலைமையில் நியமிக்கப்பட்ட குழு தெரிவு செய்திருந்தது.
அதனை காலாச்சார அமைச்சரும் அவரின் பணிப்பாளரும் தன்னிஸ்டத்தக்கு மாற்றி இருக்கின்றார்கள். இப்படி உலகில் எங்கும் இதுவரை நடந்ததில்லை. இது எப்படி நடந்தது என விசாரித்த போது அமைச்சரின் கட்டளைப்படிதான் என்று தனக்குச் சொல்லப்பட்டது என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார். இப்படியான ஒரு குழுவில் தானும் ஏனைய உறுப்பினரும் இனியும் பதவி வகிக்க தயாரில்லை என்று அதிதிகளுக்கு கண்ணத்தில் சாத்தினார்.
அப்போது முழு மண்டபமும் அதிர்ந்தது. அனைவரும் தமது கதிரைகளில் இருந்து எழுந்து நின்று ஆரவராம் செய்து கைதட்டி விசிலடித்தும் நிரியெல்லவுக்கு தமது ஒருமைப்பாட்டை தெரியப்படுத்தினார்கள். அப்போது அதிதிகளுக்கு அசடு வழிந்தது.
விமல் தரப்பிலும் வேட்பாளராம்!
நாடு முழுவதிலும் தேர்தல் ஜூரம். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இது பற்றிய சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள். இதனை வெற்றிகரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார் அணுரகுமார திசாநாயக்க. இப்போது விமலுக்கும் ஈகோ போலும். அவரும் இங்கிலாந்து போய் தனது ஆதரவாலர்களை சந்தித்து ஒரு கூட்டம் போட்டிருக்கின்றார்.
ஒரு ஐம்பது ஆறுபது பேரை மேசை போட்டு அங்கு பரத்தி அமர்த்தி வைத்திருக்கின்றர்கள். கூலிக்கு மாரடிக்க அங்கு சிலர் வந்திருக்கின்றார்கள். அவர்களிடம் பேசிய விமல் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகியபோது பசிலை அந்த இடத்துக்கு கொண்டுவர இந்தியா கோட்டாவுக்கு கடுமையாக அழுத்தம் கொடுத்தது. அதற்கு கோட்டா தயாராகவும் இருந்தார்.
ஆனால் நடக்கவில்லை. அத்துடன் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை அல்லிக் கொண்டு போய் சிறையில் அடைக்கும் ஒரு திட்டம் கோட்டாவுக்கு இருந்தது. இதனை இந்தியாவின் ‘றோ’ வன்மையாக எதிர்த்து தடுத்து விட்டது என்றும் விமல் சொன்னார். வரும் ஜனாதிபத் தேர்தலில் தமது தரப்பிலும் ஒருவர் களத்துக்கு வருவார் என்று விமல் அங்கு குறிப்பிட்டார்.
தமது இனத்தின் சார்பில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுக்கும் போதுதான் விமல் தனது வேட்பாளர் பற்றி சுட்டிக்காட்டினார்.
நன்றி: 24.12.2023 ஞாயிறு தினக்குரல்