-நஜீப் பின் கபூர்-
கசிகின்ற அந்தரங்க தகவல்கள்
கழுவும் மீனில் நழுவும் வியூகம்
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மொட்டுக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு கடந்த வாரம் முற்றுப் பெற்றிருக்கின்றது. இப்போது அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் துவங்கி இருக்கின்றன. இது தொடர்பாக ஒரு நடுநிலையான பார்வையை இந்த வாரம் செய்ய எதிர் பார்க்கின்றோம். குறுகிய காலத்தக்குள் உருவாகிய மொட்டுக் கட்சி தனது முதலாவது வருடத்திலே உள்ளூராட்சித் தேர்தல்களை வெற்றி கொண்டதன் மூலம் தனது பலத்தை நாட்டுக்குக் காட்சிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் என்பவற்றிலும் அது அமேக மக்கள் ஆதரவைப் பெற்றது. குறிப்பாக ஒட்டு மொத்த பேரினச் சமூகமும் அன்று மொட்டுக் கட்சி பின்னால் அணி திரண்டது.
சுதந்திரக் கட்சிக்கு எதிராக மெதமூலன-ராஜபக்ஸ ஆதிக்கத்தை நாட்டில் நிலை நிறுத்துவதுதான் இந்தக் கட்சியின் அடிப்படை இலக்காகவும் இருந்தது. மைத்திரி 2015 தேர்தலில் மஹிந்தாவுக்கு அதிரடியாக ஆப்பு வைத்து தேர்தலில் வெற்றி பெற்றதுடன், அந்த அதிகார அரசியலால் மஹிந்த ராஜபக்ஸ வசம் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் மைத்திரி தன்வசபடுத்திக் கொண்டார். தனது தோல்வியின் பின்னால் சந்திரிக்க பண்டாரநாயக்க குமரணதுங்ஹ இருந்ததால் அவரைப் பலிவாங்கி இலங்கை அரசியலில் பண்டாரநாயக்கர்களின் அரசியல் ஆதிக்கத்தை துடைத்தெரிவதும் ராஜபக்ஸாக்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
இந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை தோற்றுவிப்பதில் முக்கிய பங்குவகித்தவர் பசில் ராஜபக்ஸ, அத்துடன் துவக்க காலத்தில் பேராசிரியர் ஜீ.எல்லும் இதற்குத் தனது கனிசமான பங்களிப்பை செலுத்தி வந்தார். நாட்கள் செல்லச் செல்ல இந்த மொட்டுக் கட்சியின் மேலாதிக்கத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாது மைத்திரி-ரணில் நல்லாட்சி தல்லாடியது. ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையேயான கருத்து மோதல்களினால் நல்லாட்சியால் அரசியல் ரீதியில் எதனையும் சாதிக்க முடியவில்லை. அரசு இன்று கவிழும் நாளை கவிழும் என்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரி மஹிந்த ராஜபக்ஸாவை பிரதமராக்கியதும் அதனை நீதி மன்றம் நிராகரித்ததது. அதன் பின்னர் மைத்திரி ராஜபக்ஸாக்களிடம் சரணகதி அரசியலுக்குச் சென்றதும் அனைவரும் அறிந்ததே.
அசுர வேகத்தில் அரசியல் ஆதிக்கம் பெற்ற மொட்டுக் கட்சி ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸாவின் தான்தோன்றித்தன அரசியல் தீர்மானங்கள் மற்றும் சிறுபான்மைக்கு எதிரான இனவாத செயல்பாடுகளினாலும் குறுகிய காலத்துக்குள் வீழச்சியடைந்தது. உச்ச அரசியல் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஸாக்கள் நாட்டிலிருந்துது ஓடி ஒழித்துக் கொள்ள வேண்டிய வந்ததும் அண்மைக்கால நிகழ்வுகள். அது மக்கள் கண்னெதிரே நிற்பதால் அதனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டி அவசியல் இல்லை. இந்தப் பின்னணியில் இன்று நாடு வங்குரோத்து அடைந்த நாடாக உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் நாட்டு மக்கள் இன்று பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி இருக்கின்றார்கள்.
நாடாளுமன்றத்தில் மொட்டுக் கட்சிக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை மையமாகக் கொண்டு மக்களால் விரடியடிக்கப் பட்ட ரணில் அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவிக்கு வந்து இன்று ராஜபக்ஸாக்களின் துணையுடன் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. இதனால் மொட்டுக் கட்சி தனது தேர்தல் தொடர்பான பணிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதற்கிணங்க மொட்டுக் கட்சி தனது இரண்டாவது தேசிய மாநாட்டை கொழும்பு -சுகததாச உள்ளக அரங்கில் கடந்த வாரம் மிகவும் விமர்சையாக நடாத்தியது.
இந்த நிலையில் நாட்டில் அரசியல் செல்வாக்குத் தொடர்பான ஆய்வுகளை வெளியிடுவோர் மொட்டுக் கட்சி செல்வாக்குத் தொடர்பாக மிகவும் மட்டமான தரவுகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. அவர்கள் இலங்கை அரசியல்லிருந்து துடைத்து எறியப்பட்டு விட்டார்கள். அவர்கள் செல்வாக்கு மக்கள் மத்தியில் வெறும் நான்கு ஐந்து சதவீதம் கூடக்கிடையாது என்றெல்லாம் செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாம் அந்தக் கருத்துக் கணிப்புகளை நிராகரிக்கின்றோம். அத்துடன் இதே கருத்துக்கணிப்புக்கள் கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட வென்றெடுக்க முடியாதுபோன ரணிலின் ஐதேக. பதிணைந்து இருபது சதவீதம் வரையிலான ஆதரவை பெற்றிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் அனைத்த கணிப்புகளும் ஜேவிபி தலைவர் அணுர குமாரதிசாநாயக்க முதலாம் இடத்திலும் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்திலும் இருப்பதை உறுதி செய்கின்றன. இதில் நமக்கும் உடன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் மொட்டுக் கட்சி பற்றிய மிகவும் மோசமான கணிப்பை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு மக்கள் மத்தியில் பதிணைந்து இருபது சதவீதம் வரையிலான ஆதரவு இருந்து வருகின்றது என்பது நமது கணிப்பு. எனவே தேர்தல் களத்தில் அவர்கள் சற்று வலுவாகத்தான் இருக்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியும்.
நமது ஆய்வுகளின்படி ரணில் தலைமையிலான ஐதேக.வுக்கு இரண்டு சதவீதம் வரையிலானவர்களே ஆதரவாக இருக்கின்றார்கள். இப்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மொட்டுக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு தொடர்பாக பார்ப்போம். இது தொடர்பாக நமக்கு கிடைத்திருக்கின்ற பல சுவரஸ்யமான தகவல்களும் இருக்கின்றன.
மிகவும் குறுகிய நேரமே இந்தக் கூட்டம் நடை பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். (ஒரு மணி நாற்பது நிமிடம் 1 மணி 40 நிமிடம்) நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் வார்த்தை ஜாலங்கள் அதற்கான மொழிபெயர்ப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் விவரனப் படம் சம்பிரதாயமான வரவேற்புரை, நன்றியுரை என்பவற்றை எல்லாம் நீக்கிவிட்டு பார்த்தால் கூட்டம் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் (45) வரைதான் நடந்திருக்கின்றது. அத்துடன் பொதுவாக மொட்டுக் கட்சியில் கவர்ச்சிகரமான பேச்சாளர்களோ செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களோ கிடையாது. அங்கு ராஜபக்ஸாக்களை முதன்மைபடுத்தி கூஜாத் தூக்கும் ஒரு அரசியல்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த சுற்றில் மொட்டுக் கட்சிக்கு வாய்ப்புக் குறைவு என்பதால் ராஜபக்ஸாக்கள் அரங்கிலிருந்து கொண்டு டம்மியை ஊதிப் பெருப்பிக்கும் ஒரு முயற்சியில் தான் அங்கு நடக்கின்றது என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது.
வழக்கமாக முதன்மை ஆசனத்தில் அமர்கின்ற ராஜபக்hக்கள் வரிசையில் தேசத்தினதும் இனத்தினதும் மீட்பாளர் கோட்டாவை அங்கு கண்டுகொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக முதன்மை ஆசன அமர்வில் இந்த முறை தம்மிக்க பெரேராவுக்கு ஆசனம் ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது. அது ஏன்? அத்துடன் பதவிக்கு நியமனங்கள் செய்கின்ற போது கட்சியின் கோட்பாதார் பசில் வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவிக்கு இந்த முறை அவர் நியமனம் செய்யப்படவில்லை. அந்தப் பதவி இந்க கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் வரை வெறுமனேதான் இருக்கின்றது. அது தொடர்பாக முரண்பாடான தகவல்கள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. இளம் தலைவர் ஒருவருக்கு அதாவது நாமலுக்கு அந்த இடம் என்ற ஒரு கருத்தும், அடுத்து வரும் ஜனாதிபதி வேட்பாளருக்கு அந்தப் பதவி என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால் அவர் யாராக இருக்க முடியும்.?
மாநாடு நடந்த அடுத்த நாள் சனிக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வீட்டில் நடைபெற்றது. ஆனால் கூட்டம் நடப்பதாக சொல்லப்பட்ட நேரத்தில் அது ஆரம்பமாகவில்லை. இது பற்றி தேடிப் பார்த்த போது அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்படும் தம்மிக்க பெரேரா ராகு காலத்தில் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் அந்த நேரம் கடந்து போகும் வரை கூட்டம் சற்றுத் தள்ளிப் போய் இருக்கின்றது. இது தம்மிக்க வேண்டுகோளுக்கு இசைவாக சுப நேரம் வரும் வரையிலான தாமதமாம்.! இதனால் கூட்டத்துக்கு நேரத்து வந்த சிலர் பக்கத்தில் இருந்த ரெஸ்ட்டோரன்டுக்கு டீ குடிக்கப் போய் இருக்கின்றார்கள். இப்போது அந்த இடத்தில் நடந்த சில கருத்துப் பறிமாறல்கள் பற்றிப் பார்ப்போம்.
கட்சியில் சிரேஸ்டமானவர்களுக்கு இல்லாத முக்கியத்துவம் நேற்று நடந்த கூட்டத்தில் தம்பிக்க பெரேராவுக்கு கொடுக்கப்பட்டது தொடர்பாக அங்கு பேசப்பட்டிருக்கின்றது. அப்போது ராஜபக்ஸாக்களுக்கு நெருக்கமான ஒருவர் அப்படி விசயம் தெரியாமல் கதைக்க வேண்டாம். இந்த மாநாட்டுக்கு ஆட்களை அழைத்து வரும் பஸ்கள் மற்றும் அதற்குத் தேவையான உணவு மற்றும் வசதிகளை செய்து கொடுக்க தம்மி ஒரு கோடி நாற்பது இலட்சம் வரை செலவு செய்திருக்கின்றார். மேலும் மொட்டுக் கட்சி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் இப்போது மாதாந்தம் ஒரு இலட்சம் என்று கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சிரோஸ்டமானவர்கள் கூட பலர் இதனை பெற்று வருகின்றார்கள் என்று ராஜபக்ஸ விசுவாசி அங்கு பதில் கொடுத்திருக்கின்றார். அப்படியாக இருந்தால் கோடிஸ்வர வர்தத்கர் தம்மிக்க தான் மொட்டு ஜனாதிபதி வேட்பாளர்.?
அவரை ஜனாதிபதி வேட்பாளர் என்று சொல்லி கட்சிக்காக பணம் செலவு செய்யும் வேலையைத்தான் ராஜபக்ஸாக்கள் இப்போது செய்து கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து மொட்டுக் கட்சி வேட்பாளர் ரணில் கிடையாது என்ற நமது நெடுநாள் வாதம் மேலும் உறுதியாகின்றது. ஜனாதிபதி ரணில் இல்லை முதலில் வருவது பொதுத் தேர்தல்தான் என்றால் தம்மிக்க நடுத் தெருவில் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் செலவு செய்யும் காசும் மண்தான். பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சிக்கு முதலாம் இரண்டாம் இடங்கள் இல்லை என்றால், தம்மி கனவு இளவு காத்த கிளியின் நிலைதான்.
வெற்றி வாய்ப்புக் கிடைக்கிடைக்காத இந்த சுற்றில் ராஜபக்ஸாக்கள் பண முதலைகளை களத்தில் இறக்கி வேடிக்கை பார்க்க முனைகின்றார்களோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. அதே போன்று நாம் எதிர்பார்ப்பது போல முதலில் வருவது பொதுத் தேர்தல் என்றால் தம்மிக்க நிலை என்ன? தம்மிக்க மொட்டு வேட்பாளராக வருவதை ஏற்றுக் கொள்ளாத பலர் மொட்டில் இருக்கின்றார்கள். ஆனால் அவர் இப்போது வாய்க்கு அரசிபோடுவதால் அவரைப் பகைத்துக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இன்னும் இரண்டு வருடங்கள் நாடாளுமன்ற ஆயுல் இருப்பதால் அதனை அனுபவிக்கும் வரை பொதுத் தேர்தல் நடப்பதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். நாடாளுமன்ற ஆயுல் முடியும்வரை கலைக்க மாட்டோன் என்று வேறு ரணில் மொட்டுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்குறுதியும் கொடுத்திருக்கின்றார்.
இந்த கூட்டத்தில் விமர்சனங்கள் பேச்சுக்கள் அனைத்தும் போல ஜேவிபியை இலக்கு வைத்ததாகதான் அமைந்திருந்தது. எனவே இவர்கள் அணுர குமாரவுக்கு அஞ்சுவது தெளிவு. இந்த மாநாடு எருமைகளின் தேசிய மாநாடு என்று சமூக ஊடகங்கள் கடுமையாக விமர்சித்திருந்தன. அத்துடன் பாதை நெடுகில் வைக்கோலும் புல்லும் கம்பங்களில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நீதி மன்றமே ராஜபக்ஸாக்களை அரசியல் குற்றவாளிகள் என்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்திருக்கின்ற இந்த நேரத்தில் ராஜபக்;ஸாக்கள் தலைமையில் நடக்கின்ற கூட்டத்துக் போகின்றவர்கள் மூளைகளை பரிசோதிக்க வேண்டும். அத்துடன் அவர்களை புனருத்தாபன முகாங்களுக்கு அனுப்பி கைக்க வேண்டும் என்று பேசி இருக்கின்றார் மிஹிதலை விகாரையின் பிரதம குரு வலவாஹென்குநவெ தம்மரத்ன தேரர்.
கட்சியின் செயலாளர் சாகர காரியவாசம் நாட்டில் மூன்று வீதம் தவறான பிறப்புக்கள் தொடர்பாக போசிய கதையும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. தொழிகள் ஏதுமே செய்யாது குடிமக்கள் காசில் சுகபோக வாழ்வை அனுபவிக்கின்ற ராஜபக்ஸாக்களின் மூன்று பிள்ளைகள் பற்றித்தான் மொட்டுக் கட்சித் செயலாளர் அங்கு பேசினார் என்றும் கதைகள்? கூட்டம் முடிந்து வீடுகளுக்கு போகும் போது மஞ்சல் கோடுகளினால் கடந்து செல்லுமாறு பசில் கதையும் தொண்டர்கள் போதை தலைக்கேரி இருப்பதால்தான் அவர் கட்சிக்காரர்களுக்கு அப்படி உபதேசம் பண்ணினார் என்றும் விமர்சனம். பசில் மாநாட்டில் பேசுகின்ற போது உலறுகின்ற ஒருபாணி இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் பொது பெரமுன என்று உச்சரிப்பதற்குப் பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்று சொல்ல வந்து பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டார்.
தொகுதி மாவட்ட பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கின்ற போதுதான் மொட்டுக் கட்சி தனது சமகால அரசியல் செல்வாக்கை மதிபீடு செய்ய முடியும். எப்படி இருந்தாலும் வருகின்ற தேர்தல்களுக்கு காசு செலவு செய்யும் காரியமும் தம்மிக்க தலையில் கட்டிவிடப்படுமே என்னவோ தெரியாது. எனவேதான் பசில் தேசிய அமைப்பாளர் பதவியை தம்மி தலையில் கட்டிவிட பிடியாக இருப்பதாகவும் தகவல்கள். ராஜபக்ஸாக்கள் இந்தத் தேர்தலில் கழுவும் மீனில் நைசாக நழுவும் வியூகத்தை; கையால்கின்றார்கள் போலும்.
நன்றி: 24.12.2023 ஞாயிறு தினக்குரல்