-நஜீப் பின் கபூர்-
நாம் நம்பிக்கையுடன் சொல்லி வந்த ஜனாதிபதி ரணிலின் 2024 க்கான வரவு செலவு அறிக்கைக்கு எந்த ஆபத்துக்களும் வராது. அதனைப் பெரியவர் மஹிந்த ராஜபக்ஸா பார்த்துக் கொள்வார், என்ற தகவல் அப்படியே உறுதியாகி இருக்கின்றது. நாமல் ராஜபக்ஸ ஊடகங்கள் முன் போடுவது வெரும் நாடகம் என்ற செய்தியும் நடந்திருக்கின்றது.
எனவே இந்த 2024 வரவு செலவு விவகாரத்தை பேசுவது நமக்கு முக்கியமானதால்ல. நாம் எதிர்பார்த்தைவைகள் அப்படியே அரங்கேரி இருக்கின்றது. இதனை வருகின்ற நாட்களில் குடிமக்கள் அனுபவிப்பார்கள். அப்போது அதன் வலியும் வேதனையும் எல்லோருக்கும் புரியும்.
இந்த வரவு செலவு தொடர்பான விவாதத்தின் போது அடிக்கடி நாடாளுமன்றத்துக்கு வந்த ஜனாதிபதி ரணில், மீண்டும் அடுத்த வருடம் 2024 ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நிச்சயம் நடக்கும் என்று மீண்டும் அங்கும் உறுதியான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றார்.
ஆனால் ரணில் வாக்குறுதிகள் எப்போதும் தலைகீழகத்தான் நடக்கின்றது என்பதில் நமக்கு இது விடயத்தில் பெரும் சந்தேகங்கள் தொடர்ந்தும் இருக்கத்தான் செய்கின்றது. அப்படி இருந்தாலும் தேர்தல் தொடர்பாக கள நிலவரம் பற்றி இந்த வாரம் சற்றுப் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது.
இந்தத் தலைப்புப் பற்றி பேசுகின்ற போது ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் என்று பார்க்க வேண்டி இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் என்று வரும் போது அரசியல் கட்சிகள் கூட்டணிகளுக்கு அப்பால் சில தனி நபர்களின் நாமங்களும் இப்போது உச்சரிக்கப்படுகின்றது. குறிப்பாக தம்மிக்க பெரேரா, திலித் ஜயவீர என்போர் இப்போது களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். ஆனால் பொதுத் தேர்தல் முன் கூட்டி வருமாக இருந்தால் அவர்கள் களத்தில் காணாமல் போய் விடுவார்கள்.
இவர்கள் பொதுத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அவர்களிடத்தில் ஆளணியோ கட்சிக் கிளைகளோ தொண்டர்களோ நாட்டில் இல்லை. அப்படி இருந்தாலும் அது தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு இல்லை. தம்மிக்க, திலித் கூட நாடாளுமன்றம் வருவதாக இருந்தால் ஏதோ செல்வாக்கான ஒரு கட்சியில் தொங்கிக் கொண்டு பயணித்தால் மட்டுமே அதுவும் போராடித்தான் கரை சேர வேண்டி வரும். இவர்கள் கடந்த காலங்களில் ராஜபக்ஸாக்களுடன் அரசியல் களத்தில் இருந்ததால் அது கூட எந்தளவுக்கு சாத்தியம் என்பது எமக்குத் தெரியாது.
ஜனாதிபதி தேர்தல் 2024
தேர்தல் நிகழ்ச்சி நிரல் படி முதலில் ஜனாதிபதி தேர்தல் என்றால் யாரெல்லாம் போட்டியாளர்களாக வரக்கூடும் என்பதனை இப்போது பார்ப்பேம். நிச்சயமாக தற்போது ஆளும் மொட்டுக் கட்சியில் இருந்து ஒரு வேட்பாளர் வருவார். அவர் நிச்சயமாக ரணிலாக இருக்க மாட்டார். அதற்காக ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்பதும் நடாக்காது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாசதான் வேட்பாளர். இந்த பதவிக்கு அவர் எந்தளவுக்கு பொருத்தமானவர் என்பதில் அந்தக் கட்சிக்குள் ஒரு குழப்பமும் காணப்படுகின்றது. சஜித்தைவிட பீல்ட் மார்சல் அல்லது சம்பிக்க ஆளுமை மிக்கவர்கள் என்ற வாதமும் அங்கு இருக்கின்றது.
இதற்கிடையில் ஆளும் மொட்டுக் கட்சியில் இருந்து எதிர்க் கட்சிக்குத் தாவியவர்கள் கூட்டணி போட்டு ஒரு வேட்பாளரை களத்துக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அவர்களுக்கிடையில் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலை இல்லை. எனவே இவர்கள் சஜித்தை எந்தளவுக்கு பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் தெரியாது. ஆனால் அவர்களில் எவரும் இந்த ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியையோ ஆளுமையையோ கொண்டிருக்கவில்லை என்பது எமது கருத்து. தகுதி என்று நாம் இங்கு குறிப்பிடுவது களத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் என்பது நமது கணக்கு இது.
அடுத்து களத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு அரசியல் இயக்கமாக ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள சக்தி காணப்படுகின்றது. அவர்கள் களத்தில் மிகவும் வலுவாக நிலையில் இருக்கின்றார்கள் என்பதை வஞ்சகத் தன்மையின்றி இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதே நேரம் நாம் முன்பு சொன்னது போல தமிழ் தரப்பினர் சார்பில் ஒரு வேட்பாளர் பற்றிய கருத்துது உச்சரிக்கபட்டாலும் அது உணர்வுபூர்மான நகர்வுகளை முன் னெடுக்கபடுகின்றதா என்று பார்த்தால் அப்படி இல்லை.
எனவே அந்த வேட்பாளர் பற்றி அவர்களுக்குள்ளே ஒரு துவக்க கலந்துரையாடலோ இல்லாத நிலையில் அது பற்றி நாம் இங்கு விவாதிக்க முடியாதிருக்கின்றது. அப்படி ஒருவர் வந்தாலும் அவர் எந்தளவுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றவராக இருப்பார்.? அவருக்கு அரசியல் கட்சிகள்- செயல்பாட்டாளர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதிலும் பெரும் சந்தேகங்கள் நமக்கு இருக்கின்றது.
எனவே ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சில பணம் படைத்த தனி நபர்கள், இன்னும் சில சில்லரைகள் என்று ஒரு பத்து இருபது பேர் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு களத்துக்கு வருவார்கள். இந்த நிலையில் மூக்கோணப் போட்டிக்கான நிலை நாட்டில் இருக்கின்றது. அதில் அந்த அணிகள் அல்லது தனி நபர்களின் செல்வாக்கு எப்படி அமையும் என்ற விவகாரத்தில் நம்மிடம் சில தெளிவான கணக்குகளும் கணிப்புகள் இருந்தாலும் அவற்றை வருகின்ற கட்டுரைகளில் புள்ளி விபரங்களுடன் சுட்டிக் காட்டலாம் என்று இருப்பதால் அது பற்றிய தகவல்களை இப்போது தவிர்த்துக் கொள்கின்றோம்.
பொதுத் தேர்தல் 2024
நிகழ்ச்சி நிரல்படி முன்கூட்டி ஜனாதிபத் தேர்தல் என்று இருந்தாலும் முதலில் வருவது பொதுத் தேர்தலாகவே இருக்கும் என்பது நமது நம்பிக்கை. இதே ஜனாதிபதியை வைத்து பொதுத் தேர்தலை சந்திப்பது மொட்டுக் கட்சிக்கு வாய்ப்பாக இருக்கும். நாம் இங்கு குறிப்பிடுகின்ற வாய்ப்பு என்பது தில்லு முல்லுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமே. அப்படி தேர்தலில் தில்லுமுல்லுகள் அடவடித்தனங்கள் நடந்தால் அதனை ஜனாதிபதி ரணில் தலையில் சுமத்தி விட இவர்களுக்கு வாய்ப்பு இருக்கின்றது.
அத்துடன் ஆளும் மெட்டுக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி போட்டோ அல்லது தனித்தே பொதுத் தேர்தலைச் சந்திப்பது தமக்கு வசதியாக இருக்கும் என்று ரணில் விசிரிகள் கருதுகின்றார்கள். அதே நேரம் மொட்டுக் கட்சி தனது கூட்டணியில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியை இணைத்துக் கொள்வதிலும் அவர்களுக்கு நெருக்கடிகள் இருக்கின்றது.
பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தனது வழக்கமான சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டணியாகவே களத்துக்கு வருவார்கள். அதில் முஸ்லிம் கட்சிகள் மலையகத் தமிழ் கட்சிகள் மற்றும் தப்போது மொட்டுக் கட்சியில் இருந்து பிரிந்து நிற்க்கின்ற பலர் தனியாகவோ தமது கட்சிகளுடனோ இந்தக் கூட்டணியுடன் இணைந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதில் விமல் கம்மன்பில போன்றவர்களின் நிலை திண்டாட்டமாக இருக்கலாம்.
அவர்கள் நிலை இருதலைக் கொல்லி நிலையாக இருக்கின்றது. தற்போது ஆளும் தரப்பில் இருக்கின்ற இன்னும் சிலர் சஜித் கூட்டணியில் வந்து இணைந்து கொள்ள இடமிருக்கின்றது. எனவே ஓரளவுக்கு பொதுத் தேர்தலுக்கு வரும் அந்தக் கூட்டணி சற்றுப் பலமாகத் தெரிகின்றது.
ஜனாதிபத் தேர்தலைப் போன்றே அணுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலிலும் தனது வலுவான அணியை களத்தில் நிறுத்தும். அவர்கள் கட்சிகளுடன் எந்தக் கூட்டணிகளையும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். கூட்டணிக்கு பலர் முன்றாலும் அவர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முடியுமானால் தனிப்பட்ட ரீதியில் தேசிய மக்கள் சக்தியுடன் நீங்கள் வந்து இணைந்து கொள்ள முடியும் என்று அவர்களிடத்தில் அவர்கள் ஏற்கெனவே சொல்லி விட்டார்கள்.
ஏற்கெனவே ஊழல் பேர்வலிகளுடன் இணைந்து அரசியல் செய்தவர்களை தம்முடன் இணைத்துக் கொள்வது தம் மீது இன்று மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அது கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கும் என்ற அவர்கள் அஞ்சுகின்றார்கள். எனவே அவர்கள் தனித்து நம்பிக்கையுடன் இந்த 2024 தேர்தலுக்கு முகம் கொடுப்பது என்று இருக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்த சுதந்திரக் கட்சி நிலை இந்தத் தேர்தலில் இன்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கின்றது. அதில் இருக்கின்ற பலர் சஜித் அணியில் போய் சரணடைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. முன்னாள் செயலாளர் தயாசிரி நிலைகூட அப்படித்தான் இருக்கின்றது. எப்படி இருந்தாலும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி தனித்து இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டி வரும்.கூட்டணி போட்டாலும் அவர்களை எவரும் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்று அவர்களும் பொதுத் தேர்தல் களத்தில் காட்சி பொருளாக இருந்துதான் அரசியல் செய்ய வேண்டி வரும்.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறி சுதந்திர உறுப்பினர்களாக செயலாற்றுபவர்களும் சுதந்திரக் கட்சியில் இருக்கின்ற சிலரும் சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க தலைமையில் ஒரு கூட்டணியாக செயலாற்றும் முயற்ச்சிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் சந்திரிக்க எக்காரணம் கொண்டும் மீண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு வரப் போவதில்லை என்ற விவகாரத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றார் என்றும் தெரிகின்றது.
வாய்ப்பும் வர்த்தகமும்!
வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் வழக்கம் போல தமது நாடாளுமன்ற ஆசனத்துக்கான பிரதிநிதித்துவத்துக்காக தமது அணி சார்ப்பில் ஆட்களை களத்துக்கு கொண்டு வருவார்கள். இந்த முறை பெரிதாக அவர்கள் குறிப்பாக சம்பந்தன் தலைமையிலனா அணியின் தெற்கு அரசியல் தலைமைகளின் பேசி உரிமைகளை பெற்றுத் தருகின்றோம் என்று பேச முடியாது. இந்த விவகாரத்தில் அவர்கள் முடியுமான மட்டும் தமிழர்களை ஏமாற்றி அரசியல் வியாபாரம் பண்ணி இருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கில் ஒரு முற்போக்கு இளம் அரசியல் இயக்கத்துக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும் அதற்கான அதற்கான விதை கூட அந்த மண்ணில் கண்ணுக்கு தெரியவில்லை. எனவே அங்கு சம்பிரதாய அரசியல் வியாபாரிகள்தான் இந்த முறையும் 2024 தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
பொதுத் தேர்தலில் தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் செயல்பாடுகளில் அந்த சமூகத்திற்கு நிறையவே கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் அவை இன்னும் ஹக்கீம், ரிசாட், பிரதேச வாரியாக ஹிஸ்புல்லா, அதவுல்லா என்றுதான் இந்தத் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் ஹக்கீம் தலைமையிலான மு.காவுக்கு ரிசாட் ஒரு நெருக்கமாக போட்டியை இந்த முறை கொடுக்க இடமிருக்கின்றது. மொத்தத்தில் இவர்கள் யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் தன்னலம் சார்ந்த அரசியலுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். எனவே அங்கு அரசியல் வியாபாரத்தையே நாம் பார்க்க முடியும்.
மலையகத்தில் சஜித் கூட்டணியில் நின்று ஆசனத்தை பெற்றக் கொள்வதைத் தவிர மனோ. திகா, ரதா, வடிவேலு அணிகளுக்கு வேறு தெரிவுகள் இல்லை. தொண்டா தரப்பினர் தனித்து (ஜீவன்-செந்தில்) நின்றுதான் தேர்தலைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
எப்படியும் வருகின்ற 2024 பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றைப் புறட்டிப் போடுகின்ற ஒன்றாகத்தான் அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கான போட்டியில் திசைகாட்டி தொலைபேசி மொட்டு என முக்கோணப் போட்டியாகத்தான் இருக்கும். நாம் முன்பு குறிப்பிட்டது போன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் சம்பிரதாயபூர்வமானதாகவே இந்த முறையும் அமையும். அதே போன்று முஸ்லிம் தனித்துவ அரசியல் பிரதிநித்துவங்களும் தன்னலத்துக்கு முன்னுரிமை வழங்குவதகத்தான் இருக்கும். அதில் மாற்றங்களுக்கு வாய்ப்புக்கள் கிடையாது.
வரவு செலவு பற்றிய குறிப்பு!
இந்த வாரம் வரவு செலவு பற்றிய தகவல்களை நாம் விரிவாகப் பேசவிட்டாலும், ஜனாதிபதி ரணிலின் இந்த வரவு செலவுத் திட்டத்திலுள்ள மிகப் பெரிய முரணப்பாடுகளுக்கு ஒரு சின்ன உதாரணத்தை மட்டும் குடிகளின் பார்வைக்கு இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். பொது மக்களை சிக்கனமாக வாழச் செல்லும் இவர்களின் செகுசு வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கும்.
2023 வரவு செலவுத் திட்டதில் ஜனாதிபதி ரணிலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முன்னூற்றி எழுபத்தி எட்டு (378) கோடி ரூபாய்.
இது 2024ல் இந்த வருடத்தில் அறுநூற்றி அறுபது (660) கோடி ரூபாய்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 2023ல் ஓதுக்கீடு எட்டுக் கோடி. (8) 2024ல் இது பதினொறு கோடியாக (11) அதிகரித்திருக்கின்றது.
இது எந்த வகையில் நியாயமானது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முரண்பாட்டுக்கு இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.!
நன்றி: 26.11.2023 ஞாயிறு தினக்குரல்