-நஜீப்-
ரணில் மஹிந்த தீர்மானங்கள்!
தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஆளும் மொட்டுக் கட்சியினருக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையில் ஒரு முறுகல் நிலை இருப்பது போல் தெரிகின்றது. மொட்டுக் கட்சியில் இருக்கின்ற சிலர் ஜனாதிபதி ரணிலுக்கு விசுவாசமாகவும், இன்னும் பலர் ரணில் நடவடிக்கையில் அதிர்ப்தியில்.
தமக்கு அமைச்சுக்கள் இன்னும் கிடைக்காமை இதற்கான காரணம். இன்னும் பலர் நாட்டில் என்ன நடந்தாலும் ராஜபக்ஸா விசுவாச அரசியல் என்று இருக்கின்றார்கள். மொட்டில் இருக்கும் கணிசமானவர்கள் அடுத்த தேர்தலில் தாம் ஓரம் போவதை தெளிவாக அறிந்தவர்கள். இந்த மோதல்கள், இனக்கப்பாடுகளுக்கு மத்தியிலும் ரணில்-ராஜபக்ஸ உறவுகள் சுமுகமாகத்தான் இருக்கின்றது.
இதனால் தற்போது ஆளும் தரப்பு சலசலப்புக்களைக் கலைவதற்கு சில உத்திகளைக் கையாள்வது தொடர்பாக இருவரும் கருத்துப் பறிமாறி இருக்கின்றார்கள். பசிலும் இது தொடர்பில் மஹிந்தவுடன் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றார்.
நமக்குக் கிடைத்த பிந்திய தகவல்கள்படி 2024 வரவு செலவுத் திட்டத்திற்கு மொட்டு கட்சி பச்சை கொடி. அதனை மஹிந்த பார்த்துக் கொள்வார்.!
மருந்துக்குப் பதிலாக விசம்!
இந்த நாட்களில் இப்படி ஒரு தலைப்பை போட்டதும் காசாவில் அல்லது இஸ்ரேலில் நடக்கின்ற கதையை நாமும் இங்கு சொல்லப் போகின்றோம் என்றுதான் அனைவரும் போல எதிர்பார்க்க இடமிருக்கின்றது. ஆனால் இது நமது நட்டில் நடக்கின்ற அரசியல்வாதிகள் அதிகாரிகள் வியாபாரரிகளின் வைத்தியசாலைகளுக்கு மருந்துக்குப் பதிலாக விசம் விநியோகம் செய்த விவகாரம்.
ஓசைபடாது நடக்கும் மனிதப் படுகொலைகள் இது. எமது வார்த்தைகள் தொடர்பில் தீர்மானங்கள் வழக்கம் போல் வாசகர்களுடையதே. போலியா ஆவணங்களைத் தயாரித்து நமது வைத்தியசாலைகளுக்கு மருந்து அல்லாதவற்றை மருந்தாக விநியோகித்தவர் சிக்கிய விவகாரம்தான் இது.
இதனால் நிகழும் மரணங்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது. இந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட பயோ டெக்ஸ் நிறுவன உரிமையாளர் சுகத் ஜனக்க பர்ணாந்து அல்லது அருன தீப்தி என்பவர் கொழும்பு-மாளிகாவத்தை நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்ட போது, தவறை ஒத்துக் கொண்ட அவர், இதில் தான் ஒரு சிறு பங்குதாரி மட்டுமே இதன் பின்னால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருக்கின்றார்கள் என்று அதிரடி வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்.
மோசடியின் பெருமதி இரண்டு பில்லியன் வரை. குறிப்பு: இது தொடர்பான இன்னும் சில தகவல்களை பிரிதோர் இடத்திலும் பதிந்திருக்கின்றோம்.
டலஸ் அணி சஜிதிடம் சரண்!
தற்போது தேர்தல் தொடர்பான கதைகள் துவங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் பெரும்பாலும் பொதுத் தேர்தல்தான் முன்கூட்டி வரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகின்ற நிலையில், ஜேவிபியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போய் டலஸ் அலகப்பெரும அணி மூக்குடைபட்ட கதைகளை நாம் முன்பு சொல்லி இருந்தோம்.
இப்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் சுமார் எட்டுப் பேர்வரை சஜித் அணியுடன் இணைந்து கொள்வது உறுதி என்று தெரிகின்றது. விமலுடன் இணைந்து அரசியல் செய்தால் தமக்கு முகவரி இல்லாமல் போய்வடும் என்று கருதும் அவர்களில் பலர் சஜித் கட்சி செயலாளர் சஞ்சித் மத்துமபண்டாரவைச் சந்தித்து தாம் வருவதாக இருந்தால் கட்சி தமக்கு தரும் தொகுதி பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
நம்முடன் டலஸூம் எஞ்சி இருக்கின்றவர்களும் வந்தால் ஆரோக்கியமாக இருக்கும், இல்லவிட்டால் அவர்கள் அரசியல் அநாதைகளாகிவிடுவர்கள் என்றும் சஜித் அணியினர் பகிரங்கமாக இப்போது பேசி வருகின்றார்கள். இப்படி ஒரு மாற்றம் வந்தால் விமல், கம்மன்பில பேன்றவர்கள் மீண்டும் மொட்டு கட்சியில் போய் சரணடைவதைத் தவிர வேறு மார்க்கங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
அஸ்வெசும தேர்தல் நாடகமா?
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதனை உலகிற்கு கற்றுக் கொடுக்கின்ற அரசியல் தலைவர்கள் டசன் கணக்கில் வாழ்கின்ற ஒரே நாடு இலங்கை. இனவாதம், மதவாதம், பயங்கரவாதம், புறளிகள், அபாண்டங்கள், குண்டு வெடிப்புக்கள், படுகொலைகள், வன்முறைகள் எல்லாவற்றையும் நாம் நிறையவே நமது அரசியலில் பார்த்திருக்கின்றோம்.
இந்த முயற்சிகளில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள் பலர். அப்படி வந்து இடையில் கதிரையை விட்டு ஓடிப்போனவர்கள் கதைகளும் இருக்கின்றது. இப்படியான வரலாற்றைக் கொண்ட நமது அரசியலில், இப்போது அரசு அறிவுப்புச் செய்திருக்கின்ற ‘அஸ்வெஸ்ம வாரப் பிரகடனம்’ எமக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
அஸ்வெஸ்ம பயனாளிகளைத் தெரிவு செய்த ஒழுங்கில் துவக்கம் முதலே பெரும் குறைபாடுகள் என்று அரசாங்கமே சொல்லி இருந்தது. இப்போது மீண்டும் புதிதாக அஸ்வெஸ்ம வாரம் என்று ஒன்றை அறிமுகம் செய்து கிடைக்காதவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் ஒரு முயற்சியில் அரசு ஈடுபடுகின்றதோ என்ற சந்தேகம் வருகின்றது.
தேர்தல் வரை அரசு இப்படி நாடகம் நடாத்தி, அப்பாவிகளின் வாக்குகளைக் கொள்ளை அடிக்கப் போகின்றதோ என்னவோ தெரியாது.
நன்றி: 05.11.2023 ஞாயிறு தினக்குரல்