பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 25வது நாளாக இன்றும் தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை, அந்நாட்டின் மீது தங்களது தாக்குதல் தொடரும் என ஏமன் அறிவித்துள்ளது. இதனால் அரபு நாடுகளுக்கும் போர் பரவும் அச்சம் எழுந்திருக்கிறது. தற்போது காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்த கடந்த 7ம் தேதி நடந்த சம்பவம்தான் முக்கிய காரணம்.
அன்று யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும். எனவே அது தனது பாதுகாப்புக்காக ‘அயன் டோம்’ அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
“மகனின் மருத்துவ கனவு..” ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் புதிய வாக்குமூலம் இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 24 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 25வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,306 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. போர் நிறுத்தம் குறித்து ஏற்கெனவே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தையும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது.
அதேபோல ஐநா பொது சபையில் போர் நிறுத்தம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதை ஏற்று, அமல்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. எனவே இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக களத்தில் ஏமன் இறங்கியுள்ளது. இது குறித்து ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரி கூறுகையில், “பாலஸ்தீனத்திற்கு தனது எல்லைகளை காத்துக் கொள்ள அதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
இஸ்ரேல் மேலும் தாக்குதலை தொடர்ந்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்கும்” என்று எச்சரித்துள்ளார். இன்று காலை அடையாளம் தெரியாத சில ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தங்களது ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் கூறியிருந்தது. இவை அனைத்தும் செங்கடல் பகுதியிலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் இந்த தாக்குதலுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக கூறியுள்ளனர். இவை அனைத்தும் இஸ்ரேலின் செங்கடல் சுற்றுலாத் தலமான ஈலாட்டை குறி வைத்திருந்தது. இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு மேலும் கவலையை அதிகரித்துள்ளது. ஏனெனில் ஏற்கெனவே ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேல் சண்டை செய்து வருகிறது. இப்படி இருக்கையில் தெற்கிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தினால் நிலைமை மோசமாகக்கூடும்.
எனவே உதவிக்கு இஸ்ரேல், அமெரிக்காவை அழைக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது மத்திய தரைக்கடலில் சுமார் 50 போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிக அளவில் போர் கப்பல்கள் இங்கு நிலை நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. இச்சூழலில் ஹூதி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கினால் போரின் போக்கு மாறி அது அரபு நாடுகள் முழுவதும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.