-நஜீப் பின் கபூர்-
தலைப்பைப் படிக்கின்ற போதே நாம் என்ன பேச வருகின்றோம் என்பது வாசகர்களுக்குப் புரிந்திரிக்கும். கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய விஷேட கூட்டம் தொடர்பான எமது பார்வையைத்தான் நாம் இந்த வாரம் வாசகர்களுடன் பேசப் போகின்றோம். இதற்கு முன்னர் காலநிலை சீர்கேட்டினால் ஒத்திவைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஐதேக. கூட்டம் கடந்த முறையைவிட மேசமான வானிலை நாட்டில் நிழவிய ஒரு பின்னணியில் கொழும்பு-சுகததாச விளையாட்ரங்கில் கட்சித் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தiமையில் நடந்து முடிந்திருக்கின்றது. நாட்டில் நாலபுறங்களில் இருந்து தொகுதி அமைப்பாளர்கள் அந்த விஷேட கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்திருக்கின்றார்கள்.
இந்த ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய கூட்டம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது என்றால், அந்தக் கட்சியின் தலைவர்தான் இன்று நாட்டின் தலைவராக-ஜனாதிபதியாக இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது என்பது எமது கணக்கு. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது மக்களால் நிராகரிக்கபட்ட கட்சி இது. 2020 பொதுத் தேர்தலில் 59 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மொட்டுக் கட்சிக்கு 145 ஆசனங்கள். 25 சதவீதத்தை பெற்றுக் கொண்ட சஜித்தின் தொலைபேசிக்கு 54 ஆசனங்கள்.
அந்தத் தேர்தலில் ரணிலின் யானை பெற்றுக் கொண்ட வாக்கு வெறும் 249435 மட்டுமே. மொத்த வாக்கு எண்ணிக்கையில் இது 2 சதவீதம். அதனால் அதற்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனம். அந்த ஒற்றை பிரதிநிதி ரணில். நமது அரசியல் யாப்பிற்கு பெரிய மனசு. இதனால் அவர் நமது ஜனாதிபதி. எனவே மக்கள் செல்வாக்கைப் பொறுத்தவரை சீல ரத்ன தேரரின் புறவெசி பெறமுனவுக்கும் ரணிலின் ஐதேக.வுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. ரணில் ஜனாதிபதி கதிரையில் இன்று அமர்ந்து கொண்டிருப்பதால் சுகததாசாவில் நடந்த ஐதேக. கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது அவ்வளவுதான்.
கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வருவது தொடர்பில் ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் (srilankaguardiannews.com) என்ற இணையத்தளம் இப்படி ஒரு கணக்கை சொல்லி இருந்தது. இன்று நாட்டில் 340 வரையிலான உள்ளூராட்சி சபைகள் இருக்கின்றன. எனவே அதில் வேட்பாளர்களாக சராசரியாக ஒரு பிரதேச சபைக்கு வட்டார வேட்பாளர் 20 வரை இருப்பார்கள். பட்டியல் உறுப்பினர்கள் என்று இன்னும் ஒரு 15 வரையிலானவர்கள் களத்தில் இருக்கின்றார்கள். 340 என்ற எண்ணிக்கையை 35 பெருக்கம் போது 12000 வரை தேரும்.
இவர்களை 160வரையிலான தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு தமது செலவில் சிலரும் இன்னும் சிலருக்கு கட்சி காசும் கொடுத்து அங்கு அழைத்து வந்திருக்கின்றார்கள். அவர்கள் எப்படி அழைத்து வரப்பட்டார்கள் என்பது எமக்கு முக்கியமானது. அவர்களை எப்படியும் பிடித்து வர அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களும் பேசப்பட்ட விவகாரங்களும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும்தான் எமக்கு முக்கியம். இப்போது அது பற்றிப் பேசுவோம்.
(2048 -1948=100)
ரணில் அரசியல்வாதியாக இருந்து இந்த நாட்டு மக்களுக்கு நிறையவே வாக்குறுதிகளைக் கடந்த காலங்களில் வழங்கி வந்திருக்கின்றார். அவர் ஜனாதிபதியான பின்னரும் இது போன்ற பல வக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றார். அப்படி அவர் கொடுத்கும் வாக்குறுதிகளை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது அவர் வாக்குறுதிகள் பற்றிய குடிகள் கணக்கு. இப்போது ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தல் மாகாணசபைத் தேர்தல் என்று நிறையவே தேர்தல்கள் தொடர்பாக வாக்குறுதிகளை அவர் அட்டவணை போட்டுச் சொல்லி இருக்கின்றார்.
இவர்தானே உள்ளாட்சித் தேர்தலுக்கும் கடந்த காலங்களில் ஆப்பு வைத்திருக்கின்றார். அவரது நெருங்கிய சாகாக்கள் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று மேடைகள் தோரும் பேசி வருகின்றார்கள். ரணில் கூட அதே நிலைப்பாட்டில்தான் இருந்தார். ஆனால் திடீரென மூன்று தேர்தலுக்கு இவர் திகதி குறித்திருப்பது எமக்குப் பெருத்த சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றது. காரணம் இவர் கொடுக்கின்ற எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத ஒரு அரசியல்வாதி என்றுதான் மக்களிடத்தில் அறியப்பட்டிருக்கின்றார். அதனால்தான் நாமும் இப்படிப் பேசுகின்றோம். இதே ரணில் நாளை இதற்கு மாற்றமான ஒரு கருத்தை சொன்னாலும் கூட மக்கள் ஆச்சர்யப்பட மாட்டார்கள்.
தற்போது மத்திய கிழக்கில் இஸ்ரோல்-பலஸ்தீன சண்டையை வைத்து தேர்தலுக்கு ஆப்பு வைக்கின்ற ஒரு முயற்சி நடந்தாலும் நாம் அதிர்ச்சியடைய மாட்டடோம். இதுதான் ரணிலும் அவர் சகாக்களும் இன்று பண்ணிக் கொண்டிருக்கின்ற அரசியலாக இருக்கின்றது. இந்த நாட்டை சிங்கப்பூராக்குவது பற்றி அவரது மாமனார் நமக்கு ஒரு கதை சொன்னார். ஆனால் ஒரு வகையில் அதனை ஜனாதிபதி ரணில் தனது காலத்தில் இப்போது நிறைவு செய்திருக்கின்றாரோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது.
இன்று ஆசியாவில் மின் கட்டணம் அதிகமாக அறவிடப்படும் முதல் நாடாக சிங்கப்பூர் இருக்கின்றது. நாம் அதில் இப்போது இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கின்றோம். அந்தவகையில் சிங்கப்பூரை நாம் விரைவில் வெற்றி கொண்டு முதலாம் இடத்திற்கு வர இடமிருக்கின்றது. சிங்கப்பூர் மிகவும் செல்வந்த நாடு ஆனால் நாம் வங்குரோத்து நாடு என்று அனைவரலாலும் அறியப்பட்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளர் வஜிர அபேவர்தன விரைவில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெண்கள் நமது வீட்டு வேலைகளுக்கு வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று பேசி இருக்கின்றார். கடவுளே இப்படி எல்லாம் பேசுகின்றபோது கைதட்டி அந்தக் கதைகளை கேட்கின்ற ஒரு கூட்டமும் இங்கு இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.
அதே மனிதன் இப்போது அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் நமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் நூறு (100) இலட்சம் வாக்குகளைப் பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டுவார் என்றும் இந்த ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய விஷேட கூட்டத்தில் பேசிய போதும் அதற்கும் பெரும் தொகையானவர்கள் கரகோசம் செய்து உற்சாகம் பண்ணி இருந்ததை அங்கு அவதானிக்க முடிந்தது.
ரணில் கட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆதரவானவர்கள் கைகளைத் தூக்கமாறு கேட்ட போது அவர் பின்னால் அமர்ந்திருந்த நூற்றுக் கணக்கானவர்களில் இரு பெண்கள் மட்டுமே அதற்கு ஆதரவாக கைகளைத் தூக்கி வாக்களித்திருந்தார்கள். நமது இந்தக் கருத்தை செய்தி வாசிக்கின்ற போது உன்னிப்பாக அவதானித்தவர்கள் பார்த்திருக்க முடியும்.
அதே போன்று இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கைகளை உயர்த்தும் படி அங்கு கேட்டிருக்க வேண்டும். ஆனால் எதிர்ப்பவர்கள் இருக்கின்றீர்களா என்று கேட்டு ரணில் தனது பேச்சை தொடர்ந்தார். எதிர்ப்பவர்களுக்கு கைகளை உயர்த்துவதற்கு வாய்ப்புக் கொடுத்தால் வில்லங்மாகி விடும் என்பதால் அந்த யுத்தி அங்கு கையாளப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது. இந்தக் கூட்டத்தில் சிறுபான்மைக் கட்சி பிரதிநிதிகள் எவருக்கும் பேசுவற்க்கு வாய்ப்புக் கொடுக்கப்படாமல் இருந்தது தற்போது விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
அங்கு டிஜிடல் முறையில் செயல்படும் ஒரே அரசியல் கட்சியாக இன்று முதல் ஐக்கிய தேசியக் கட்சி செயல்படும் என்றும் ரணில் குறிப்பிட்டார். நாட்டில் இப்படியான ஒரே அரசியல் கட்சி நமது ஐதேக கட்சிதான். அத்துடன் இந்த டிஜிடல் முறை செயல்பாடு தென் கொரியாவில் கூட கிடையாது என்றும் அங்கு பேசப்பட்டது. இப்படி எல்லாம் கதை விடுகின்ற ஐதேகாவுக்கு இந்த நாட்டில் தேர்தலில் எந்தளவுக்கு மக்கள் வாக்குப் போடுகின்றார்கள் என்பதனை நாம் ஒரு தேர்தலில்தான் காணமுடியும். அதுவரைக்கும் இவர்கள் சொல்லுகின்ற கதைகளை எல்லாம் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
இந்த விஷேட கூட்டத்தில் பிரதான பிரமுகர்கள் ஆசனத்தில் ஜனாதிபதி ரணிலுடன் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் ஏதோ வகையில் பதவிகளை பெற்றுக் கொண்டு அரசால் பிழைக்கின்ற கூட்டமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் கௌரவமானவர்கள் அவர்கள் யாரிடமும் கடன் வாங்க மாட்டார்கள் என்று பெறுமையாக ரணில் பேசிய போது சிலர் அதற்கு கைதட்டி அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஐதேக. ஜனாதிபதி ரணிலின் ஆட்சியில் நாடே உலகத்தில் எல்லா நாடுகளிடத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றது. எனவே பேச்சுக்கும் நடைமுறைக்கும் என்னதான் தொடர்பு என்றும் கேட்கத் தோன்றுகின்றது.?
இந்தக் கூட்டத்தின் பிராதான நோக்கம் ரணிலை ஆளும் தரப்பு வேட்பாளராக களமிறக்குவதற்கான பலத்தைக் காட்சிப்படுத்துவதுதான். ஆனால் அதற்கு வாய்ப்புக்கள் கம்மி என நாம் நம்புகின்றோம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ரவி கருணாநாயக்காவும் இந்தக் கூட்டத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றிருந்தார். அவர் நாம் கட்சி சார்பில்லாத பொது ஜனாதிபதி வேட்பாளராக ரணிலைக் கொண்டு வரவோம் என்று அங்கு குறிப்பிட்டார். எனவே 2023 நாம் டிஜிட்டல் வேட்பாளராக ரணிலைப் பார்க்க முடியும்.!
இந்தக் கூட்டத்தில் ரணில் கருஜயசூரியவின் பெயரையும் இடையில் உச்சரித்து அவரும் தன்னுடன் இருப்பது போல அங்கு காட்டிக் கொண்டார். மேலும் பிரித்ததானிய பாராளுமன்ற சம்பிரதாயங்களை நாம் இங்கு அறிமுகம் செய்ய இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார். பிரித்தானியாவுக்கே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்ததை நாம் பார்த்தோம்.
2023 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் 2025 பொதுத் தேர்தல். 2025 துவக்கத்தில் மாகாணசபைத் தேர்தல். என்றெல்லாம் அங்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார் ரணில். அவர் கதைகளைப் பார்க்கின்ற போது அவர்தான் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்து இதையெல்லாம் செய்யப் போகின்றார் என்ற ஒரு தோற்றம் நமக்கு ஏற்படுகின்றது. எனவே இவர் வன்முறையிலாவது பதவியல் இருக்க முனைகின்றார் போல் அல்லவா தோன்றுகின்றது.
இதற்கிடையில் போட்டிப் பரீட்சைகளைத் தவிர்த்து 5000பேருக்கு அதிபர் நியமனங்களை அரசு இன்னும் சில நாட்களில் வழங்க இருக்கின்றது. மேலும் ஆசிரியர்களுக்கு 2024 வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பும் இருக்கின்றது, என்றெல்லாம் ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டிருக்கின்ற ஒரு மலையக அரசியல்வாதி இந்த நாட்களில் பேசிக் கொண்டிருக்கின்றார். அத்துடன் அரச சேவைகளுக்கு புதிய முறையில் எதிர்காலத்தில் ஊழியர்களை சேர்த்துக் கொள்ள இருப்பதாகவும் அரச தரப்பில் தற்போது பேசப்பட்டு வருகின்றது. இவை எல்லாம் வாக்காளர்களையும் அரச ஊழியர்களையும் தம்முடன் குறுக்கு வழியில் வைத்தக் கொள்ள எடுக்கும் முயற்சி என்றுதான் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதி ரணிலின் சகாக்கள் தேர்தல் இன்றி இன்னும் சில ஆண்டுகளுக்கு அவரை பதவியில் வைத்திருப்பது பற்றித்தான் இன்று வரை பேசிக் கொண்டிருந்தார்கள். ரணில் இதற்கு மாற்றமாக இப்போது பேசுகின்றார். அது ஏன்? எனவே ஜனாதிபதி ரணிலின் தேர்தல் பற்றிய நிகழச்சி நிரல் வஞ்சனை மிக்கது. இதனை நாடு மிகவும் எச்சரிக்கையுடன்தான் நோக்க வேண்டி இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலை விட பொதுத் தேர்தல்தான் இன்றைய நிலையில் ஆளும் தரப்புக்கு வாய்ப்பாக இருக்கும். ஜனாதிபத் தேர்தலை முதலில் சந்திப்பது ஐதேக. வுக்கும் மொட்டுக் கட்சிக்கும் ஆரோக்கியமானதல்ல. எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற ஒரு கருத்து இருப்பதால் காசை வைத்து அரசை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற கணக்கையும் ரணில்-ராஜபக்ஸாக்கள் போட்டுப் பார்த்திருக்கக் கூடும். அப்படியானால் முதலில் வருவது பொதுத் தோர்தலாகத்தான் இருக்கும்.
எதிர் காலத்தில் மொட்டுக் கட்சியினர் மேடைகளில் பேசுகின்ற போது சஜித் அணி மீது கடும் தொணியில் கருத்துக்களை உச்சரிப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று மேலிடத்தால் ஆலோசனை சொல்லப்பட்டிருக்கின்றது. தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை வராத போது, கூட்டணிக்கான முன்னேற்பாடாகவும் இது இருக்கலாம். இன்னும் சில நாட்களில் வருகின்ற வரவு செலவு அறிக்கையில் தேர்தல் தொடர்பாக நமக்கு மேலும் சில தகவல்கள் வந்து சேரும். தேர்தல் ஆணையகமும் ஜனாதிபத் தேர்தலுக்கு தமக்கு 1000 கோடிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.
நன்றி: 29.10.2023 ஞாயிறு தினக்குரல்