குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் இந்தக் கிராமத்தில் இதுவரை ஒரு வாசிகசாலை இல்லாத குறை இருந்து வந்தது. பல பேர் நூலகம் பற்றிக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தனர். அந்தக் கனவு கடந்த 21.07.2023 ம் திகதிதான் நனவானது.
இந்த வாசிகசாலை ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னாள் அதிபர் எம்.ஜீ. நிலாப்தீன் மற்றும் ஜனாப் எம்.என்.எம்.ரம்ழான் அவர்களும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நூலகத்தை திறந்து வைக்கின்ற பணிக்காக நாடறிந்த சமயப் போதகரும் பன்நூலாசிரியருமான மர்ஹூம் டாக்டர் கனி அவர்களின் மறுமகன்மாரான ஜனாப்களான முஹம்மட் முக்தார் ஜெமால்தீன் மற்றும் ஜே.மீராமொஹிதீன் (முஸ்லிம் சமயப் பன்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர்) அவர்களும் பிரதம அதிதிகளாக அந்த வைபவத்துக்கு வருகை தந்திருந்தனர்.
உடதலவின்ன கலதெனிய சந்தியில் அன்றைய தினம் அதிதிகளால் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி அஸ்ரஃப் கேட்போர் கூடத்தில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
அப்போது வாசிகசாலைக்கு நிரந்தரக் கட்டிடம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாப் முக்தார் ஜெமால்தீன் அவர்களினால் காணி வழங்கி வைக்கின்ற நிகழ்வும் அங்கு நடைபெற்றது. குறிப்பிட்ட காணியில் நூலகத்துக்கான நிரந்தர கட்டிடமும் அமைக்கப்படும் என்று முக்தார் ஜெமால்தீன் அந்த வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
செய்தியும் தகவலும்: எம்.என்.எம்.ரம்ழான் (ஓசோன்)