பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஒரு வாரத்தில் பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இணைய சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
பீகாரில் இந்த ஆண்டு ராம நவமியின் போது பீகார் ஷெரீப் மற்றும் ஸாஸாராம் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்தது. அதன் பிறகு அமைதியை நிலைநாட்ட நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
தர்பங்கா தொடர்பான பல வதந்திகள் மற்றும் தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. எனவே மக்களிடையே நல்லிணக்கத்தை பேணுவதற்காக ஜூலை 27ஆம் தேதி வியாழக்கிழமை மாலை முதல் ஜூலை 30ஆம் தேதி வரை இணைய சேவையை முடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
”தர்பங்காவில் நிலைமை முற்றிலும் அமைதியாக உள்ளது. இணையதளத்திற்கான தடையை நீக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் இணைய சேவைகளுக்கான தடை நீட்டிக்கப்படலாம் அல்லது முன்னதாகவே நீக்கப்படலாம்,” என்று பீகாரின் போலீஸ் தலைமையகத்தின் ஏடிஜி ஜே.எஸ்.கங்வார் கூறினார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் பொதுவாக இதுபோன்ற பதற்றம் காணப்படுவதில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். அப்படியிருந்தும்கூட அப்பகுதியில் இரு சமூகத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
பிரச்னை எப்படி தொடங்கியது?
கடந்த சனிக்கிழமை அதாவது ஜூலை 22ஆம் தேதி தர்பங்காவில் முஹர்ரம் கொடியை ஏற்றுவது தொடர்பாக இந்த தகராறு தொடங்கியது. இந்த பதற்றத்தை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமையன்று, மப்பி ஓபி பகுதியில் உள்ள பஜார் சமிதி செளக் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே முஹர்ரம் கொடிகளை ஏற்றுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு கொடியை ஏற்றுவதற்கு இரண்டாவது தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கொடியை அகற்றச் செய்தனர்.
“இந்தக் கொடி, திருவிழாக் காலங்களில் சில நாட்களுக்கு ஏற்றப்படும். இருந்தபோதிலும் கொடியை அகற்ற இருதரப்பையும் சம்மதிக்க வைத்தோம். ஆனால் இரு தரப்பிலிருந்தும் சில இளைஞர்கள் அமைதியின்மையை உருவாக்க முயன்றனர்,” என்று தர்பங்கா மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரோஷன் தெரிவித்தார்.
இதனையடுத்து இரு தரப்பிலிருந்தும் கற்கள் வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர், போலீசார் தலையிட்டதையடுத்து பிரச்னை தணிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளை தவிர்க்குமாறு தர்பங்கா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
”ஒரு சம்பவம் நடக்கும் போது, சமூகக் கட்டமைப்பின் காரணமாக சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு விடுகிறது. இது பல இடங்களில் காணப்படுகிறது. ஆனால் சமீப காலமாக நடப்பது முற்றிலும் புதிது,” என்று பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறினார்.
இதற்கு முன்னதாக ராம நவமியன்று பீகாரில் வன்முறை வெடித்தது. பல தசாப்தங்களுக்குப் பிறகு பீகார் ஷெரீப் மற்றும் ஸாஸாராம் போன்ற பகுதிகளில் இத்தகைய வன்முறைகள் காணப்பட்டன.
வதந்தி எப்படி பரவியது?
நிர்வாகத்தின் தலையீட்டிற்குப் பிறகு தர்பங்கா நகர் பகுதியில் அமைதி ஏற்பட்டது. ஆனால் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் பரவிய வதந்திகள் காரணமாக இந்தப்பதற்றம் மாவட்டத்தின் பிற பகுதிகளையும் அடைந்தது.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை, கம்தாவுல் காவல் நிலையத்திற்குட்பட்ட தரம்பூர் மால்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஒரு உடலை எரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சடலத்தை எரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த தகனக் கூடத்திற்கு ஒரு தரப்பினர் உரிமை கோரினர். இதன் காரணமாக இரு சமூகத்தினருக்கும் இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.
அந்த நிலம் இடுகாட்டிற்கு சொந்தமானது. முன்பே அளந்து பார்க்கப்பட்டு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதை தர்பங்கா முஹர்ரம் கமிட்டியின் தலைவர் சிப்கதுல்லா கானும் உறுதி செய்துள்ளார் என்று தர்பங்கா மாவட்ட அதிகாரி தெரிவித்தார். “இது சர்ச்சைக்குரிய நிலமாக இருந்தது. பலமுறை இதை அளந்துள்ளோம். இந்த நிலம் சுடுகாட்டிற்கு சொந்தமானது.
உடலை எரிப்பதை தடுத்தவர் தவறு செய்துள்ளார். நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருந்தால் மட்டும் என்ன? அந்த நிலம் எங்கும் போகாது. உடல் எரிந்து சாம்பலாக ஆகியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே திங்கட்கிழமை மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. மதச் சடங்குகளுக்காக கர்பலா மண்ணைக் கொண்டு வரும் வழி தொடர்பாக தகராறு தொடங்கியது. கர்பலா மண்ணை கொண்டு வரும் வழிக்கு உரிமம் இருந்தது.
அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் இந்தப்பாதைவழியாகத்தான் மண் கொண்டு வரப்படுகிறது என்று தர்பங்காமாவட்ட அதிகாரி குறிப்பிட்டார்.‘‘இருந்தபோதிலும் இந்த முறை இந்தப்பாதை வழியாக மண்ணைகொண்டுசெல்ல அனுமதிக்க மாட்டோம் என்று சிலர் கூறினர்,”என்று அவர் தெரிவித்தார்.”அங்கேதான் சர்ச்சை ஆரம்பமானது. இவர்கள் வெளியூரில் இருந்துவந்தவர்கள். மண் எடுத்துச்செல்ல இவர்கள்தான் அனுமதிமறுத்தனர். இவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.”
எங்கே தவறு நடந்தது
இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாக தர்பங்கா போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் போலீசார் மற்றும் நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அமைதி நிலவுகிறது. ஆனால் வதந்திகள் குறித்த அச்சத்தில் நிர்வாகம் உள்ளது.
ஒரு தரப்பைத் திருப்திப்படுத்தும் கொள்கையை நிர்வாகம் பின்பற்றுகிறது. எனவேதான் இதுபோன்ற
சூழ்நிலைகள் ஏற்படுகின்றன என்று பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்தப்பண்டிகையின்போது ஒவ்வொரு முறையும் பதற்றம் அதிகரிக்கிறது. காவல் நிலையத்திற்குள் அமைதிக் குழுக்கூட்டத்தை அரசு ஏற்பாடு செய்கிறது. அதில் இரு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். ஏதோ ஒரு சம்பவம் நடந்தால், அமைதிக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. போலீஸ் அல்லது நிர்வாகம் மீது அல்ல. நிர்வாகத்தால் தன் பொறுப்பை ஏன் சரியாக நிறைவேற்ற முடியவில்லை?,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தர்பங்காவில் இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை என்று தர்பங்காவின் மூத்த செய்தியாளர் டாக்டர் வினய் குமார் ஜா தெரிவித்தார். ”இந்த முறை இரண்டு மூன்று இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை சரியான நேரத்தில் விழிப்புடன் இருந்திருந்தால், இது நடந்திருக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆனாலும் இணையத்தை முடக்குவது ஒரு பெரிய நடவடிக்கை. இன்றைய காலகட்டத்தில் எல்லாமே இணையம் மூலமாகத்தான் நடக்கிறது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. இணைய முடக்கம் காரணமாக மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்,” என்று வினய் குமார் ஜா கூறுகிறார்.
தர்பங்காவில் நிலவும் அமைதியின்மையின் பின்னணியில் வெளியாட்களும் இருக்கலாம் என்று உள்ளூர் நிர்வாகம் சந்தேகிக்கிறது. ஒவ்வொரு சமூகத்திலும்
கெட்டவர்கள் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் உள்ளூர் மக்களுக்குபெரும் பங்கு இருக்கிறது என்று வினய் ஜா கருதுகிறார்.
”நிர்வாகம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் ஏதாவது பெரிய அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டால் அது தர்பங்காவுக்கு அவமானகரமான விஷயம்,” என்றார் அவர்.
விழிப்புடன் இருந்து ஒவ்வொரு முறையும் நிலைமையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தியதாகவும், பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் நிர்வாகம் கூறுகிறது.
தற்போது காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் மேற்பார்வையில் தர்பங்கா நகரில் பதற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இணைய தடை நீக்கப்பட்ட பிறகு, வதந்திகள் மற்றும் தவறான செய்திகள் பரவும் சாத்தியக்கூறுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.