-நஜீப் பின் கபூர்-
நாம் கடந்த காலங்களில் நிறையவே ஆளும் தரப்பு, குறிப்பாக ரணில்-ராஜபக்ஸாக்கள் தேர்தல் தொடர்பில் நடாத்திக் கொண்டிருக்கின்ற நாடகங்கள் ஏமாற்றுக்கள், அக்கிரமங்கள் அதற்கு அரசு சார்பு ஊடகங்கள் கொடுக்கின்ற முக்கியத்துவம், இது விவகாரங்களில் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்ற நோக்கில்தான் அவை பற்றி நாம் அளவுக்கதிகமாக பேசி இருக்கின்றோம் என்பது எமக்குத் தெரியும். எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் தொடர்ப்பில் நாம் இதற்கு மேல் பேசுவதை முடியுமான மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். ஆனால் ஆட்சியாளர்கள் தேர்தல் விவகாரத்தில் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் வருகின்றார்கள் என்பதனை குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பும் எச்சரிகையாகவும் இருந்தது-இருக்கின்றது.
இப்போது நாட்டில் மிகப் பெரிய இசுவாக இருப்பது சமூர்தி தொடர்பான செய்திகளே இருக்கின்றன. இன்று ஐஎம்எப் வழங்கி இருக்கின்ற ஆலோசனைகளின் பிரகாரம் அரசு மக்களுக்கு கொடுக்கும் நன்கொடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்-குறைக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கின்றது. இந்தப் பணிகளை கிராம அதிகாரிகள் மற்றும் சமூர்தி உத்தியோகஸ்தர்கள் தலையில் அரசு கட்டிவிட முயன்றாலும் அவர்கள் இதில் மக்களிடம் வரும் எதிர்ப்பை அறிந்த தாங்களால் இந்தக் காரியத்தை செய்ய முடியாது என்று பின் வாங்கியதால், நாடுபூராவிலும் உள்ள இளைஞர் படையணி ஒன்றை களத்தில் இறக்கி இந்தக் காரியத்தை செய்திருக்கின்றது. இப்போது அது பெரும் கண்டனங்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் இலக்காகி வருகின்றது.
ஆளும் தரப்பில் இருக்கின்றவர்கள் இதுவரை காலமும் இந்த சமூர்தியை ஒரு பணயக் கைதியாக வைத்துத்தான் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து வந்தார்கள். இப்போது சமூர்தி பயனாளிகளின் எண்ணிக்கை குறைப்புச் செய்யும் போது மக்களின் கோபத்திலிருந்து தப்புவதற்கு என்ன செய்யலாம் என்று ஆளும் தரப்புக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றது. இப்போது அஸ்வெசும என்ற பெயரில் புதிதாக இந்த சமூர்தியை வழங்குகின்றபோது ஆளும் தரப்புக்குள் இதில் ரணில் தலைமையிலான ஐதேக. அதிக இலாபங்களை அடைந்துவிடும் என்று மொட்டுக் கட்சியினர் அஞ்சுகின்றார்கள். எனவேதான் அவர்கள் இதில் கை வைத்தால் மொட்டுக் கட்சிக்கு நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை ஒன்று தோன்றும் என்று அவர்கள் பயப்படுகின்றார்கள்.
இதனால் அவர்கள் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் போல இப்போது தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்-காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ராஜபக்ஸாக்கள் குறிப்பாக மஹிந்த பசில் நாமல் போன்றவர்கள் பகிரங்கமாகவே இதில் நடந்திருப்பது மிகப்பெரிய அநீயாயம் என்று ஊடகங்களில் பேசுகின்றனர். குறிப்பாக நாமல் அரசாங்கம் சமூர்தி பயனாளிகள் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும், மக்கள் பாதிக்கப்படுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி இருக்கின்றார். இந்தக் கதையைப் பார்க்கின்ற போது மனிதன் எதோ எதிர்க் கட்சி உறுப்பினர் போல அல்லவா இந்த நாட்களில் பேசி வருகின்றார் என்பது சிறு குழந்தைக்குக் கூட புரியும்.
ஐஎம்எப்.சொல்வது போல இதில் குறைப்புச் செய்தால்தான் அடுத்த கட்ட நிதி உதவி கிடைக்கும் என்ற நிலை இருக்கின்றது. கட்டுப்பாடு இருக்கின்றது. இதற்கு முன்னர் ஆட்சியாளர்கள் இது போன்ற நிதி நிறுவனங்களை இனி இல்லை என்ற அளவுக்கு ஏமாற்றித் தான் கடன்களைப் பெற்று வந்திருக்கின்றார்கள். எனவே இந்த சமூர்தி பயனாளிகளைக் குறைப்புச் செய்வதில் இருந்து ஆட்சியாளர்கள் விலகிச் செல்ல முடியாது என்று நிலைதான் இருக்கின்றது. அந்தப் பெறுப்பை யார் ஏற்பது.? அடுத்து புதிதாக அந்தப் பட்டியலை தயாரிக்கின்ற போது அதில் அரசியல் நன்மையை அதாவது வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்று ஒரு போட்டி நிலை இன்று ஆளும் தரப்புக்குல் காணப்படுகின்றது. மொட்டுக் காட்சியினர் இதனால் வரும் எதிர்ப்பை ஜனாதிபதி ரணில் தலையில் கட்டிவிட முனைகின்றனர்.
அதே போன்று புதிய பட்டியலைத் தயாரிக்கும் போது ரணில்தான் நமக்கு சமூர்தி தந்தார் என்று மக்கள் ஒரு கணக்குப் போட்டு அதனை ஐதேக. தமக்கான வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் என்ற அச்சமும் மொட்டுக் கட்சியினருக்கு இந்த சமூர்திப் பட்டியல் தயாரிப்பதில் இருக்கின்றது. இதனால்தான் இன்று மொட்டுக் கட்சியினர் இது விவகாரத்தில் பொது மக்கள் பக்கம் நின்று பேசி வருகின்றார்கள். இப்போது இந்த சமூர்தி பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் பட்டியலுக்கு சமூர்தி கிடைத்திருக்கின்றது. தமது கட்சி ஆதரவாலர்கள் சமூர்தி பெறத் தகுதி இல்லாதவர்களாக இருந்த போதிலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு அரசியல் செல்வாக்குக் காரணமாக கிடைத்தது. இப்போது ஆளும் தரப்பினருக்கு இதனை வைத்து கூட்டத்துக் ஆட்களை சேர்ப்பதற்கு பாவிக்க ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ அல்லது சமூர்தி பட்டியல் கணிப்பீடும் செய்யும் ஒழுங்குகள் பற்றி சற்றுப்பார்ப்போம்.
2022.10.10. திகதி வெளியான ஒரு வர்த்தமானி அறிவித்தலில் இதற்கான தககுதி பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. சமூர்தி அல்லது அஸ்வெசும பயனாளர்கள் எப்படிப் இதற்கான தகுதி மட்டத்தை அடைகின்றார்கள் என்பதற்கு சில தகவல்கள் திரட்டப்பட்டன. அதில் நிறையவே விடயங்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இங்கு அதனை நாம் சுருக்கமாக இனம்காட்ட முனைகின்றோம் அதன்படி
1.கல்வி மட்டம்.
2.சுகாதார நிலை
3.பொருளாதார வசதி
4.செல்வம் அல்லது சொத்துக்கள்
5.வீட்டின் தரம்
6.குடும்ப நிலை என்று…
மேற்சொன்ன ஒவ்வொரு தலைப்பிலும் பல கோணங்களில் இது மதிப்பீடு செய்யப்படுகின்றது. உதாரணம் கல்வி என்ற தலைப்பில் கபொத. சாதாரண தரத்துக்கு கீழ், சுகாதாரம் என்று வரும் போது நிரந்தர நோயாளிகள் குறைபாடுள்ளவர்கள் என்பன போன்ற நிறையவே விவரங்கள் ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரும் செல்வந்தர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்குக் கூட இதில் சில இடங்களில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
ஏற்கெனவே நெடுங்காலமாக சமூர்தி பெற்று வந்தவர்கள் ‘அஸ்வெசும’ அல்லது சமூர்தி புதிய பட்டியலில் உள்வாங்கப்பட்டாமல் விடப்பட்டிருக்கின்றனர் என்று பொது மக்களும் அரசியல்வாதிகள் பகிரங்கமாக ஊடகங்களில் சுட்டிக் காட்டி அரசை விமர்சித்து வருகின்றார்கள். எனவே ஆளும் தரப்பினரும் எதிரணயினரும் இந்த சமூர்தி புதிய பட்டியலைப் தமது பிழைப்புக்காகப் பாவித்துக் கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் குறைந்தது 40 இலட்சம் வாக்காளர்களை தன்பக்கம் ஈர்க்கலாம் என்று ரணிலும் ராஜபக்ஸாக்களும் அல்லது யானையும் மொட்டும் எதிர்பார்க்கின்றது. அந்தளவுக்கு முட்டால்கள் நாட்டில் இருக்கின்றார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. 20 இலட்சம் பேருக்கு ‘அஸ்வெசும’ கிடைக்கின்ற போது அவர்களில் இன்னும் ஒருவர் தங்கி இருக்கின்றார் என்று வைத்துத்தான் இந்தக் கணக்கை அவர்கள் பார்க்கின்றார்கள். ஆளும் தரப்பினர் மத்தியில் அப்படி ஒரு கணக்கும் நம்பிக்கையும் இருக்கின்றது.
இன்று நாடுபூராவிலும் இந்த சமூர்தி பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்படடிருக்கின்றது என்று போராட்டங்கள் துவங்கி இருக்கின்றது. தமக்கு புதிய பட்டியலில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான முறைப்பாடுகளை அவர்கள் ஜூலை முதலிரு வாரங்கள் வரை சமர்ப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. என்னதான் முறைப்பாடுகள் கொடுத்ததாலும் இந்த முறை சமூர்தி பொறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.
அந்தப் பலியை ராஜபக்ஸாக்கள் ரணிலின் தலையில் கட்டி அதன் மூலம் தமக்கு ஏற்பட்ட சரிவை சரி செய்ய அவர்கள் முனைக்கின்றார்கள். ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்க மாட்டாது என்ற தேரணையில் கதையைக் கட்டவிழத்து விடுவது. அதே போன்று புதிய பட்டியலில் ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதில் இலாபம் பெறமுனைவதும் தெரிகின்றது. இதனை வைத்து அரசியல் பிழைப்புக்கள் நாட்டில் வரும் நாட்களில் துவங்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
புதிதாக 3720000 விண்ணப்பங்கள் ‘அஸ்வெசும’ அல்லது சமூர்தி பெற விண்ணப்பித்திருக்கின்றார்கள். இப்போது 2350000 பேர் இந்தச் சமூர்தியைப் பொறுகின்றார்கள். புதிய பட்டியலில் 20 இலட்சம் பேர் மட்டுமே தெரிவாகி இருக்கின்றார்கள். அல்லது உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே உதவியை எதிர்பார்ப்பவர்களில் 1720000 பேர் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். ஏற்கெனவே உதவி பெற்று வந்தவர்கள் புதிய பட்டியலில் 350000 பேர் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.
தெரிவு செய்யப்பட்டவர்கள் பிரதேச செயலாளர்களுக்குக் கிடைத்த தகவல்களை மூவர் அடங்கிய குழு ஆராய்ந்து அதனை மாவட்ட ஆணையாளருக்கு அனுப்பி அதன் பின்னர்தான் புதிய தெரிவு அமைந்தது என்று தெரிகின்றது. இதற்காக தகவல்களை சேகரிக்க களத்தில் இறக்கிவிடப்பட்வர்கள் அனுபவமற்றவர்கள், கல்வித் தரம் குறைந்தவர்கள். அவர்களுக்கு 300 ரூபா கொடுப்பனவு என்று சொல்லிவிட்டு வெறும் 150 ரூபா மட்டுக் கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.
லேன் ஏசியன் நிறுவனம் தருகின்ற ஒரு தகவலில் 2019ல் நாட்டில் 30 இலட்சம் பேர் வருமைக் கோட்டில் இருந்ததாகவும் அது இன்று-2023ல் 40 இலட்சம் என்ற அளவுக்கு வளர்ந்து விட்டதாகவும் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கின்றது. எனவே 37 இலட்சத்திற்கும் மேற்பட்வர்கள் ‘அஸ்வெசும’ உதவி பெறுவதற்கு விண்ணப்பித்தது யதார்தத்மானதுதான். ஐஎம்எப். கடனைப் பெறுகின்றபோது இவற்றை எல்லாம் செய்கின்றோம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புக்கின்றோம் என்று சொல்லித்தானே அந்தக் கடனை ஆட்சியாளர்கள் பெற்றார்கள் என்பதும் தெரிந்ததே.
ஜேவிபி. ஹதுன்ஹெத்தி கூற்றுப்படி இன்று நாட்டில் இருக்கின்ற மக்களில் 68 சதவீதமானவர்கள் மூன்று நேரம் சாப்பிடுவதில்லை. 68 சதவீதம் என்பது ஒரு கோடி ஐம்பது இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎம்எப். பிற்குக் கொடுத்த வாக்குறுதிப்படி இதனைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். பொறுத்தமானவர்களுக்கு இதனை எப்படி பகிர்ந்து கொடுப்பது என்ற கோள்வி இருக்கின்றது. அதனை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். அது எமக்கும் புரிகின்றது. இது கடந்த 75 வருடங்களாக ஆட்சி செய்தவர்களினால் ஏற்பட்ட நிலை.
எங்களுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் ஒரு வாரத்தில் சமூர்தி பெறுவதற்குப் பொறுத்தமானவர்களை எம்மால் தெரிவு செய்து தரமுடியும் என்றும் அவர் ஒரு ஊடகச் சந்திப்பில் பகிரங்கமாகக் குறிப்பிட்டார். செஞ் சட்டைக்காரர்களுக்கு சிறப்பான ஒரு ஆளணி நாடுபூராவிலும் இருப்பது தெரிந்ததுதான். ஆனால் ஆட்சியாளர்கள் இந்தப் பொறுப்பை ஒரு போதும் அவர்கள் கேட்பது போலக் கொடுக்க மாட்டார்கள் என்பதும் தெரிந்ததுதான்.
நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்