ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதி வழிப் போராட்டம் ஒன்றுக்கு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அமைதி வழிப் போராட்டம்
நாளைய தினம் (15.01.2023) பிற்பகல் 3 மணியளவில் இப்பொங்கல் நிகழ்வு நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் நடைபெற இருக்கின்ற தருணத்தில், பிற்பகல் ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றிலில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாகப் பொங்கல் நிகழ்வு இடம்பெறும் இடத்துக்குச் சென்று நிறைவடையும்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கேட்போர் கூடத்தில் நேற்று (13.01.2023) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அமைதி வழிப் போராட்டத்துக்கான அழைப்பை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளது.
வட கிழக்கு மக்கள் பிரச்சினை
இது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
எங்களுடைய தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு, தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளும் இன்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்றன்றனர்.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் என அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட இனப்பிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையிலும், தேசிய பொங்கல் விழா ஒன்றை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?
பிரச்சினைகளுக்கு தீர்வு
ஜனாதிபதி பொங்கல் விழாவை மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது.
தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றை வழங்கிய பின்னர் அவர் அந்தப் பொங்கல் நிகழ்வை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.
ஆகவே, முதலில் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இது தீர்க்கப்படாது மேற்கொள்ளப்படுகின்ற இந்தப் பொங்கல் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் சிவில் அமைப்புகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக தீர்மானம் எடுத்துள்ளோம்.
கவனயீர்ப்புப் போராட்டம்
அதே நிலையில் இந்த பொங்கல் நிகழ்வை வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் உட்பட்டவர்கள் அரசியல் பேதமின்றி முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்தச் சாத்வீகப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
அனைத்து சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.