இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற நிலையில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் மீது சர்வதேச சமூகம் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளும், சகோதரர்களுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய உள்ளிட்ட நால்வருக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்துள்ளது.

கனடா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயத்தை , அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மேலதிகமாக பணியாளர் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டிஆராய்ச்சி ஆகியோருக்கும் கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையான காலம் வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் திட்டமிட்டு, மனித உரிமை மீறிமீறப்பட்டதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நபர்களுக்கு கனடாவில் காணப்படும் அனைத்து சொத்துக்களும் தடை செய்யப்படுவதுடன், குறித்த நபர்களுக்கு எந்தவொரு விதத்திலும் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது எனவும் அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

குறித்த நபர்கள் தமது சொத்துக்கள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது நிதி வழங்குவதையோ கனடா மற்றும் கனடாவிற்கு வெளியிலுள்ள கனேடியர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு தசாப்த ஆயுத போரினால், பொருளாதாரம், அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் மனித உரிமை பாரியளவில் மீறப்பட்டமை காரணமாக, இலங்கை மக்கள் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளதாக கனடா வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய

”இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை அடைவதில் கனடா உறுதியாக உள்ளது. சர்வதேச சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சர்வதேச தண்டனைகளை வழங்க கனடா இன்று தீர்மானமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதன் மூலம் சமாதானமான செழிப்பான இலங்கைக்கு ஆதரவளிக்க கனடா தயாராக உள்ளது.” என கனடா வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தமிழர் தரப்பினர் கூறி வருகின்றனர்.

அத்துடன், ஆயிரக்கணக்கான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறி, வடக்கில் இன்றும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமக்கான நீதியை உள்நாட்டில் எதிர்பார்க்க முடியாது எனவும், சர்வதேச நாடுகள் தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் வடக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கனடா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

கோட்டாபய

ராஜபக்ஷ தரப்பின் பதில்

இந்த விடயம் தொடர்பில் ராஜபக்ஷ தரப்பின் பதிலை பெற்றுக்கொள்வதற்காக பிபிசி தமிழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுதேஷ்வர பண்டாரவை தொடர்புக்கொண்டு வினவியது.

தாம் இந்த விடயம் தொடர்பில் அறியவில்லை என அவர் பதிலளித்தார்.