குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாக ராஜ்கோட் காவல்துறை தலைவர் (ஐஜி) அஷோக் யாதவ் தெரிவித்துள்ளார்.
- குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
- சுமார் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாலம், பழுது நீக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
குஜராத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், விமானப் படை, ராணுவம், கடற்படை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 177க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவில் மீட்புப் பணிகளை தொடர்வது மிக கடினமாக இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இன்று காலை அருகாமை பகுதிகளில் உள்ள 200 பேர் மீட்புப் பணியில் இணைந்தனர்.
மீட்புக் குழுவினர் சிறிய படகுகளில் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றின் சேறு கலந்த நீரில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடினமாக உள்ளதாக மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றுக்கு மேல் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டு இருந்ததால் பாலத்தில் அதிகளவிலான மக்கள் இருந்தனர். இந்த பாலம் நேற்று மாலை 6.40 மணியளவில் இடிந்து விழுந்தது.
“குழந்தைகளுக்கு தீபாவளி விடுமுறை என்பதால் பாலத்தை காண பலர் சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தனர்” என சம்பவத்தை நேரில் பார்த்த சுக்ராம் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தார்.
“ஒருவர் மீது ஒருவர் என அனைவரும் கீழே விழுந்தனர். அதிக கூட்டம் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்தது,” என அவர் தெரிவித்தார்.
பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
அந்த நேரத்தில் 400 பேர் கட்டடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இது நடந்திருக்கிறது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாலம் இடிந்த நேரத்தில் அங்கு சுமார் 400 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, “இந்த சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார்.
இருள் சூழ்ந்ததால் தண்ணீரில் சிக்கியவர்களைக் காப்பாற்ற பார்வையாளர்கள் முயற்சிக்கும் போது காட்சிகளை வீடியோக்கள் காட்டுகின்றன.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்முவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியிருக்கிறார்.
மீட்புப் பணிகளில் உதவ அண்டை மாவட்டங்களில் இருந்து அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால், மூன்று குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காந்திநகரில் இருந்து இரண்டு குழுவும், பரோடாவில் இருந்து ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் பூபேந்திர படேல் “மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்தது வருத்தமளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு 5 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது
தீபாவளிக்குப் பிறகு குஜராத்தி புத்தாண்டு அன்றுதான் இந்தப் புதிய பாலம் திறக்கப்பட்டது.மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த ஊஞ்சல் பாலம் நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோர்பிக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது.மோர்பி நகரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், இந்த பாலம் பொறியியலின் அதிசயம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது.இந்த விபத்து குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறுகையில், “மாலை 6.30 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு 150 பேர் கூடியிருந்தனர்.” என்றார்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் 15 நிமிடங்களில் அங்கு வந்தனர். இதனுடன், கலெக்டர், மாவட்ட எஸ்பி, டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அங்கு வந்தனர். தாமும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
8 பேர் கைது
இந்த விபத்து தொடர்பாக போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ராகுல் திரிபாதி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை 141 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தற்போதும், பல்வேறு குழுக்கள் ஆற்றங்கரையில் முகாமிட்டு காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.
புஜ்ஜில் இருந்து 50 கடற்படை வீரர்களும் ஜாம்நகரில் இருந்து 60 கடற்படை வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 33 ஆம்புலன்ஸ்கள், 7 தீயணைப்பு வாகனங்கள், ராஜ்கோட் மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இருந்து 30 மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோபிர் பாலத்தின் வரலாறு ?
இந்த பாலம் நூற்றாண்டு பழைமையானது. மோர்பியின் அரச காலத்தை நினைவூட்டும் விதமாக இந்த பாலம் இருந்தது.
மோர்பியின் மன்னர் சர் வாஜி தாகூர், நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்தைக் கட்டினார்.
அந்த நேரத்தில் இதுவொரு கலை மற்றும் தொழில்நுட்ப அதிசயம் என்று அழைக்கப்பட்டது.
இந்த பாலம், 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியன்று மும்பையின் அப்போதைய கவர்னர் ரிச்சர்ட் டெம்பிளால் திறந்து வைக்கப்பட்டது.
குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மோர்பியில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 141 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது 230 மீ (754 அடி) பாலம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பாலம் பழுது நீக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டது.