பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, தான் விமானப்படையில் விமானியாக பணியாற்றியதாக தெரிவித்திருந்த தகவலை, இலங்கை விமானப்படையின் விமானிகள் குழாமும் மறுத்துள்ளது.
அருந்திக்க பெர்ணான்டோ, விமானியாக இருந்ததாக தங்களிடம் எந்த பதிவும் இல்லை என்று விமானப்படையின் விமானிகள் குழாம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி வன்முறையின் போது குழு ஒன்று தனது வீட்டிற்கு தீ வைத்ததால் தனது வீடு மற்றும் தாம் விமானப்படையில் பணியாற்றியமை தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக கடந்த வாரம் நாடாளுமன்றில் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.
அத்துடன் விமானப்படையிலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிலும் இருந்ததை காட்டுவதற்கு இன்று தன்னிடம் எதுவும் இல்லை என்றும் அருந்திக பெர்ணான்டோ குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் காலத்தில், ஒரு விமானம் புறப்படும்போது, கணினி வசதி இல்லாததால், logs என்ற பதிவு புத்தகங்களே நடைமுறையில் இருந்தன.
எனினும் தமது வீடு எரியூட்டப்பட்டமையால், அந்த பதிவுகள் அனைத்தும் அழிந்துவிட்டன என்று பெர்ணான்டோ குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அருந்திக்க பெர்ணான்டோ, விமானப்படையில் பணியாற்றியதாக எந்தப் பதிவும் இல்லை என்று இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க, கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஒருமுறை பறக்கும் திறன் தேர்வில் கலந்து கொண்டு அருந்திக பெர்ணான்டோ தோல்வியடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து விமானிகள் குழாமும் பெர்னாண்டோவின் கூற்றை மறுத்துள்ளது.