இரு வெவ்வேறு தடுப்பூசிகளை முறையே இரு டோஸ் (மொத்தம் நான்கு டோஸ்) தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்திலிருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் ஒருவர் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார்.
அந்த பெண் ஏற்கனவே இரு நாடுகளில் இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளின் 4 டோஸ்களையும் செலுத்தியுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைவெளியில் அந்த பெண் சீனாவின் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இந்தூரிலிருந்து விமானம் மூலம் துபாய் செல்ல அந்த பெண் திட்டமிட்டிருந்தார். இதற்காக, பயண நாளான நேற்று அவர் இந்தூர் விமான நிலையம் வந்தார். விமானத்தில் பயணிப்பதற்கு முன்னர் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 4 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.