ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் உள்ள கவாகோய் நகரில் பாகிஸ்தான் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு மசூதி கட்டப்பட்டது. இருப்பினும், நகர திட்டமிடல் மற்றும் கட்டுமான விதிகளை மீறி இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதால் இந்த மசூதியை உடனடியாக இடித்து அகற்றும்படி ஜப்பான் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது பேசுபொருளாகியுள்ளது.

ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் உள்ள கவாகோய் நகரில் உள்ள இந்த மசூதியின் பெயர் ‘ஜப்பான் ஜாமே மஸ்ஜித் ரம்ஜான்’.. கவாகோய் நகரின் ஷிமோ-அகாசகா என்ற பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் சட்டங்களின்படி முறையான கட்டிட அனுமதிகள் எதையும் பெறாமல் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நிறுவனம்
இதற்கிடையில், இந்த மசூதி அமைந்துள்ள நிலத்தின் உரிமையானது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் நடத்தும் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் சமர்ப்பித்த திருத்தத் திட்டத்தில், இந்த மசூதியை இறுதியில் அகற்றிவிடுவதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024 அக்டோபர் மாதத்தில், உள்ளூர் மக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில்தான் இந்தச் சட்டவிரோதக் கட்டுமானம் குறித்து கவாகோய் நகர அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்வதற்குள், மசூதியின் வெளிப்புறக் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்திருந்தன.
![]()
கேட்கவில்லை
கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகள் பலமுறை நேரில் சென்று எச்சரித்த போதிலும், அதையெல்லாம் காதில் வாங்காமல் மசூதியின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.. மேலும், இந்த மசூதி ஆரம்பத்தில் முறைப்படி பதிவு செய்யப்படாததால், இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதிலும் அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்துள்ளது.

ஜப்பானிய நகராட்சி அதிகாரிகள் இந்த மசூதியை இடிக்க உத்தரவிட்டதற்கு மிக முக்கியமான காரணம்.. அது கட்டப்பட்டுள்ள இடம் தான்! இந்த மசூதியானது நகரமயமாக்கல் கட்டுப்பாட்டு மண்டலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கவாகோய் நகர அதிகாரிகள் கூறுகிறார்கள்.. அதாவது இந்த மண்டலங்களில் திட்டமிடப்படாத நகர விரிவாக்கத்தைத் தடுக்கவும், நிலக் கொள்கைகளைப் பாதுகாக்கவும் புதிய கட்டுமானங்களுக்கும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருக்கும்.
என்ன காரணம்
இந்த விதிமுறைகளை ஒட்டுமொத்தமாக மீறியதால்தான், கட்டிடத்தை உடனடியாக இடிக்க வேண்டும் என நிலத்தின் உரிமையாளருக்கு கவாகோய் நகரம் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரத்திற்கும் மதத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று ஜப்பானிய அதிகாரிகள் திட்டவட்டமாக விளக்கியுள்ளனர்.
அனுமதி இல்லாமல் ஒரு தடை செய்யப்பட்ட பகுதியில் எந்த ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும், அதன்படிதான் இந்த மசூதி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடுமையான சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் போய்க்கொண்டிருந்த போதிலும், கடந்த ஏப்ரல் 3ம் தேதி இந்த மசூதி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜப்பானுக்கான பாகிஸ்தான் தூதர் மற்றும் உள்ளூர் பாகிஸ்தான் சமூகத்தைச் சேர்ந்த பல முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்
சம்பந்தப்பட்ட அந்த பாகிஸ்தான் நிறுவனம் சார்பில், “நாங்கள் இந்த நிலத்தை வாங்குவதற்கு முன்பே இந்தக் கட்டிடம் அங்கு இருந்தது. இது குறித்து நகர அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கட்டிடத்தை இடிப்பது பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.. ஆனால் அதை இடிப்பதற்கான செலவு மிக அதிகமாக இருப்பதால் இதில் சில சிக்கல்கள் நீடிக்கிறது” என்று கூறியுள்ளார்.





