“ஈரான் அணுப் பரிசோதணையை முன்கூட்டி நடாத்தி இருக்கலாம்”

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் 3ம் உலகப்போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் மட்டுமன்றி உலக அரசியலில் தற்போது பல்வேறு விதமான ராணுவ மோதல்கள் நடந்து வருகின்றன.

உலக அளவில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல், ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் புதிய உச்சத்தை, புதிய பரிமாணத்தை அடைந்து உள்ளன. இந்த மோதல்கள் காரணமாக ஏற்கனவே 3ம் உலகப்போர் தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் மோதல்
ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது.
இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.
மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.
விளாடிமிர் புடின் இந்த விமான நிலையத் தாக்குதல்களுக்கு மிகவும் வலுவாக பதிலளிக்கும் திட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டதாகக் கூறிய டொனால்ட் ட்ரம்ப், இது ஒரு நல்ல உரையாடல், ஆனால் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கும் உரையாடல் அல்ல என்று கூறினார்.
300க்கும் மேற்பட்ட டிரோன்களை ஒரே சமயத்தில் அனுப்பி ரஷ்யாவின் விமானப்படையை உக்ரைன் அடித்து நொறுக்கி உள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது.
போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்த எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
ஈரான் இஸ்ரேல் அட்டாக்
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதலைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது தாக்குதலை நடத்தியது. இதை அடுத்து, டெஹ்ரான் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
இஸ்ரேல் தலை நகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஈரான் அணு மற்றும் இராணுவ தளங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவம் இஸ்பஹானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
ஈரானின் ஃபோர்டோவ் அணு உலை அருகே இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் தாக்கியபோது,டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் கடுமையான வெடிச்சத்தங்கள் கேட்டன. மேலும் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஈரான் நாட்டின் செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது.
3ம் உலகப்போர்
இதெல்லாம் பார்க்கும் போது உலக அளவில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல், ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் புதிய உச்சத்தை, புதிய பரிமாணத்தை அடைந்து உள்ளன.
இந்த மோதல்கள் காரணமாக ஏற்கனவே 3ம் உலகப்போர் தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த போரில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டு உள்ளது.
அதுவும் இது சாதாரண போர் அல்ல.. அணு ஆயுத போராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த போரில் நேரடியாகவும்.. மறைமுகமாகவும் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், சிரியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் பங்கெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பு: ஈரான் அணுப் பரிசோதணையை முன்கூட்டி நடாத்தி இருந்தால் இந்த இஸ்ரேல் தாக்குதலைத் தவிர்த்திருக்கலாம் என்பது எமது கணிப்பு.
அத்துடன் ஈரானின் அணு பரிசோதணை கைக்கு எட்டிய தூரத்தில்தான் இருந்தது என்பது அனைவரும் அறிந்த செய்தி.
ரஸ்யா மற்றும் சீனா ஈரானுக்கு ஆதரவாக இருந்தாலும் நேரடியாக ஈரானுக்காக களத்தில் இறங்க வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.
அதே நேரம் அமெரிக்க வழக்கம் போல இஸ்ரேலுக்குப் பக்க பலமாக இருக்கின்றது. களத்தில் நேரடியாக இருங்க நொண்டிக் காரணங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அதனைக் கூட அவர்களே உருவாக்கியும் கொள்வார்கள். அதே நேரம் சில அரபு ஆட்சியாளர்கள் ஈரான் முதுகில் குத்தவும் வாய்ப்பு இருக்கின்றது.
ஆனால் அங்குள்ள குடி மக்களின் உணர்வுகள் ஈரானுக்கு ஆதரவாகத்தான் இருந்து வருகின்றது.





