–நஜீப்–
இறுதியாக நடந்த பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தையேனும் வெற்றி கொள்ள முடியாமல் போன ஐதேக. எடுத்த மொத்த வாக்கிற்கு சிரமப்பட்ட ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டதும்; பின்னர் கட்சிக்குள் அடிதடிப்பட்டுக் கொண்டு அந்த இடத்துக்கு ரணில் நாடாளுமன்றம் போனதும் அந்த ஒரே ஆசனத்தை வைத்து அவர் ஜனாதிபதியானதும் இலங்கை அரசியலில் கரைபடிந்த ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
இப்போது ரணில் பற்றி அவரது முக்கியஸ்தர்கள் அதனை விட அதிரடியான செய்திகளை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றார்கள். ஐதேக. பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவாசம் சிரிகொத்தவில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த தேர்தல் தொடர்பான கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் இன்னும் இருபது வருடங்கள் வரை ரணில்தான் நாட்டில் ஜனாதிபதியாக இருப்பார் என்று உறுதியாகக் கூறி இருக்கின்றார்.
இப்போது ரணிலுக்கு வயது 74. அப்படியானால் அவர் 94 வயது வரை நமது நாட்டு ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருக்கப் போகின்றார்கள்.! இப்படியான கதைகளை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கதைவிடும் அரசியல்வாதிகள் இருக்க வேண்டிய இடம் எது என்று மக்கள்தான் சொல்ல வேண்டும்.
நன்றி: 05.02.2023 ஞாயிறு தினக்குரல்